Mar 17, 2017

மடித்தாள் பட்டி - பி. எஸ். ராமையா

மதுரையிலிருந்து பழனிக்குப்போகும் சாலையிலிருந்து நாலைந்து மைல் தூரத்திலிருக்கும் ஒரு கிராமத்திற்குப் போய் விட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். ஒரு காலத்தில் காட்டோடையாக இருந்த அந்த நொடிப் பாதையில், வண்டி அடிக்கொரு தரம் குலுங்கி விழுந்து ஆடி அசைந்து கொண்டிருந்தது. திடீரென்று வண்டிக்காரன் வண்டியை நிறுத்தி, "இடது காளைக்கு ஒரு லாடம் விழுந்திருக்குதுங்க மாடு நொண்டுது” என்றான்.

"இந்த நடுக் காட்டிலே என்ன செய்ய முடியும்? மெள்ள வெள்ளைப் பட்டிக்குப் போய்விடுவோம்.அங்கே லாடம் கட்டிக் கொள்ளலாம்” என்றேன்.

"அதுவரை தாங்காதுங்க மாடு வீணாப் போயிடும். கொஞ்சம் இறங்கி அப்படி அந்த ஆலமரத்தடியிலே குந்திக்குங்க ஒரு நொடியிலே மடித்தாள் பட்டிக்குப் போயி லாடம் கட்டிக்கிட்டு வந்துடறேன்" என்றான்வண்டிக்காரன்.

அவன் குரலில் மாட்டின் பரிதாப நிலை பிரதிபலித்தது. சலிப்புடன்
வண்டியிலிருந்து குதித்தேன்.வண்டிக்காரன் மாடுகளை அவிழ்த்து வண்டியை ஒருபுறம் தள்ளி நிறுத்தினான். ஒரு மாட்டை மாத்திரம் அங்கேயே அருகிலிருந்த ஒரு மரத்தின் வேரில் கட்டி விட்டு, இன்னொரு மாட்டைஓட்டிக்கொண்டு புறப்பட்டான்.

பங்குனி மாதத்து வெயில் மூளையுருகும்படி  தாக்கிக்கொண்டிருந்தது. அந்த முரட்டு வழியில் வண்டியின் ஆட்டத்துக்கு ஈடு கொடுத்து உடலெல்லாம் நோவெடுத்தது. இந்த இடத்தில் லாடம் விழுந்து, மாடு நொண்டும்படி நேர்ந்த அதிருஷ்டத்தைப் பற்றி எரிச்சலுடன் முனு முணுத்துக் கொண்டே வண்டிக்காரன் குறிப்பிட்ட ஆலமரத்தை நோக்கி நடந்தேன். அது வண்டிப்பாதையிலிருந்து கொஞ்சம் உயர்ந்த மட்டத்திலிருந்தது.ஆகையால், நான் இருந்த இடத்திலிருந்து வெறும் மரம் மாத்திரம்தான் தெரிந்தது.

ஆனால் மரத்தடிக்குப்போனவுடன் என்மனத்திலிருந்த எரிச்சலெல்லாம் ஒரே வியப்பாக மாறிவிட்டது. ஆகா! எவ்வளவு கம்பீரமான காட்சி!

அந்த இடத்தைச்சுற்றி மூன்று திசைகளில் அடுக்கடுக்காகப் பல குன்றுகள் அமைந்திருந்தன. ஒன்று வெறும் கருங்கல்லாலேயே அமைந்தது. சாதாரணக் காட்டுக் கள்ளிச் செடிக்குக்கூட இடம் கொடுக்கமறுக்கும் கரடு.

இன்னொன்றின் மேல் அங்கும் இங்குமாக முளைத்திருந்த புதர்ச் செடிகள் மற்றொன்று கொஞ்ச தூரத்தில் நீலப் பச்சை ஆடையணிந்து அந்தவெயிலில் அழகு பார்த்துக்கொண்டிருந்தது. ஒரு புறத்தில் இரண்டு குன்றுகளுக்கிடையில் மாரிக் காலத்தில் குளமாக வேஷம் போடும் ஒரு பெரிய பள்ளத்தாக்கு அதில் அடர்த்தியாகக் கருவேலம் செடிகளும், மரங்களும் வளர்ந்து நிறைந்திருந்தன. இந்தக்குளத்தின் மூன்றாவது திசையில்தான் அந்த நீலப்பச்சைமலை நின்றுகொண்டிருந்தது.

ஆலமரத்திற்கு மேற்கே கொஞ்சம்தள்ளி ஒரு பெரிய கிணறு இருந்தது. அதற்குக் கருங்கல்லால் கரை கட்டி உள்ளே இறங்கப் படிகளும் அமைக்கப்பட்டிருந்தன. கிணற்றையடுத்து ஒரு மரத்தடியில் ஒரு சிறிய காட்டுக் கோயில் மண் சாந்து வைத்துக் கருங்கற்களால் கட்டியது.ஒரே ஒர் அறைகொண்டது.கோயிலின் முன்புறச்சுவரின்மேல், இருமூலைகளிலும், ஆணும்பெண்ணுமாக இரண்டு மண் சிலைகள் நிற்க வைக்கப்பட்டிருந்தன. கோயிலை அடுத்திருந்த மரத்திலிருந்து இரும்புச் சங்கிலியில் கட்டிய ஒரு பெரிய வெண்கலமணி தொங்கிக்கொண்டிருந்தது. அந்த மரத்தைச் சுற்றி அங்கங்கே அடுப்பு மூட்டி எரித்த அடையாளமாக மும்மூன்று கரி ஏறிய கற்கள் கிடந்தன.

அந்த இடத்தின் கம்பீரம் நிறைந்த வனப்பில் ஈடுபட்டுச் சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டு நின்றவன், “முருகா" என்று யாரோ உரக்கச்சொல்லியதைக் கேட்டுத்திரும்பினேன்.

கிணற்றுக்குள்ளிருந்து ஒரு பண்டாரம் கப்பரையில் ஜலம் நிறைத்துக்கொண்டு ஏறி வந்துகொண்டிருந்தார். அறையில் கோவணம். மேலே உடலை மறைத்துப்போர்த்திய ஒருகாவித்துணி, மழ மழவென்று சிரைத்த தலை, நெற்றியிலும் உடலிலும் பளிச்சென்று பூசிய திருநீறு. கழுத்திலே காவித் துணிக்கு மேல் விழுந்து புரண்டு கொண்டிருக்கும் ருத்திராட்ச மாலை. வலது கையில் தண்ணிர்நிறைந்ததிருவோடு இடதுகையில் ஒரு முறுக்குத்திடி.

பண்டாரம் படியேறி வெளியில் வந்து திருவோட்டைச் சூரியனுக்குக் காட்டுவது போலத் தூக்கிப்பிடித்து, முருகா! என்று ஒரு தரம் பலமாக உச்சரித்தார். பிறகு ஒருநிமிஷம் கண்களை மூடித் துதிக்கும் பாவனையில் நின்றார். கண்ணைத் திறந்து இன்னொரு தரம்,“முருகா" என்று சொல்லிவிட்டு, நாலைந்துமிடறு தண்ணீர் குடித்தார். மீதித் தண்ணீரைக் கால்களில் ஊற்றிக்கொண்டு என்னை நோக்கிவந்தார்.

யாரோ சோம்பேறிப் பண்டாரமென்ற அலட்சியத்துடன் நின்றேன். ஆனால் அருகில்வரவர அவர் முகத்திலிருந்த தனிக்களை என் உள்ளத்தைக்கவர்ந்தது. சாமுத்திரிகா லட்சணப்படிபார்த்தால் அதை ஓர் அழகான முகமென்று சொல்லமுடியாது. எங்கள் வண்டி வந்த சாலையைவிடக்கரடுமுரடாகத் தோன்றியது. ஆனால் அந்த முரட்டு அமைப்பிலே ஒரு விசேஷக்கவர்ச்சி இருந்தது.உள்ளத்திலிருந்து பொங்கி வந்து முகத்தில் பரவி ஒளி வீசும் ஓர் அதிசய சக்தியின் கவர்ச்சி. கண்கொட்டாமல் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டுநின்றேன்.

பண்டாரம் என் அருகில் வந்து ஏற இறங்கப்பார்த்துவிட்டு "கோவிலிலே பூசைபோடவந்தீர்களா, ஆண்டவனே."என்றார்.

நான், "இல்லை, செம்பட்டிக்குப்போகிறேன்: திடீரென்று ஒரு மாட்டுக்குலாடம் விழுந்துநொண்டஆரம்பித்துவிட்டது.வண்டிக் காரன் லாடம் கட்ட மடித்தாள் பட்டிக்குப் போயிருக்கிறான். நீங்கள்தான்கோவில்பூசாரியா” என்றேன்.

பண்டாரம் கோவிலை ஒரு தரம் திரும்பிப் பார்த்துவிட்டு, "இல்லை. ஊர் சுற்றும் பரதேசிப் பண்டாரம்" என்று சொல்லி விட்டுமேலே நடக்க ஆரம்பித்தார்.

வண்டிக்காரன் வரும் வரை அவரைப் பேச்சுத் துணைக்காவது நிறுத்திக்கொள்ளலாமே என்ற எண்ணம் எழுந்தது என் மனத்தில், "ஸ்வாமி இது என்னகோவில் தெரியுமா?" என்றேன்.

பண்டாரம் நின்று திரும்பி, "மடித்தாளம்மன் கோவில்; அந்தக்கோவில் கதையைக் கேட்க ஆசையுண்டாஆண்டவனே.” என்று கேட்டுக்கொண்டே அருகில் வந்தார்.

ஆவலுடன்,"சொல்லுங்கள்"என்றவன்.அவர் கண்குறிப்பை அறிந்து மரத்தடியில் ஒரு புறம் உட்கார்ந்தேன். பண்டாரம் திருவோட்டையும் முறுக்குத் தடியையும் அருகில் வைத்துக் கொண்டு உட்கார்ந்துசொல்ல ஆரம்பித்தார்.

"நீங்கள் அருகில் போய்ப் பார்த்தீர்களா கோவிலை? இல்லையா? உள்ளே இருக்கும் தெய்வத்திற்குப் பெயர் மடித்தாளம் மன். இந்தக்கோவிலினால்தான் பக்கத்துக்கிராமத்திற்கு மடித்தாள் பட்டி என்று பெயர் வந்தது.

"பேய் பிசாசுகளை அடக்குவதில் ரொம்ப சக்தியுள்ள தெய்வம் என்பது கிராம ஜனங்களின் நம்பிக்கை, பேய் பிடித்த பெண்களை இங்கே கொண்டுவந்து ஆடவிட்டுப் பொங்கலிட்டுப் பூசைபோட்டால் பேய் பறந்து போய்விடுமாம். அது போனதற்கு அடையாளமாக அந்த மரத்தில் ஆணி அடிப்பார்கள்.

"ஆண்டவனே! மனிதன் குணத்தில் உயரும்போது அவனிடம் தெய்வீகம் பிறக்கிறது. அவனைத் தெய்வாம்சம் என்று வணங்குவதிலே தவறில்லை. ஆனால் பாருங்கள். ஆண்டவனே காலம் போகப்போக அவனே தெய்வமாகிவிடுகிறான். சிலசமயங்களிலே, நல்லபடியாக மக்களை உயர்த்தும் தெய்வநிலையிலிருந்து விழுந்து, அவர்களைப் பயமுறுத்திப் பலிகேட்கும் காட்டேரியாகவும் மாறிவிடுகிறான். அப்படி மாறிய ஒரு தெய்வத்தின் கோவில்தான் இது.

"வருகிற மன்மத வருஷம் பங்குனிக்குச் சரியாக முன்னூறு வருஷமாகும் இந்தக் கோவில் கட்டி என்ன எண்ணுகிறீர்கள்? நடப்பது பார்த்திப பங்குனி சரியாகப் பத்துவருஷம் இருக்கிறது மன்மத பங்குனிக்கு.

"அப்போது மதுரையிலே திருமலைநாயக்கர்,ஆண்டுகொண் டிருந்தார். அவருடைய கடைசிக் காலத்தில் விஜயநகர ராஜ்யம் சீர்குலைந்து போயிற்று. அதையெல்லாம் படித்திருப்பீர்களே? அந்தச் சமயத்தில் மைசூர் ராஜ்யத்தில் கந்தர்வ ராச உடையார் என்பவர் ஆண்டு கொண்டிருந்தார். மதுரைநாயக்கருக்கும், மைசூர் உடையாருக்கும் விரோதம் ஏற்பட்டுவிட்டது. மைசூர் அரசர் மதுரைமேல் படைகளை அனுப்பிவிட்டார்.

"அந்தப் படை முதலில் சத்திய மங்கலம் பிராந்தியத்தைப் பிடித்துக்கொண்டது. அப்போது திருமலைநாயக்கர் உடல்நலம் குன்றிப்படுத்த படுக்கையாக இருந்தார். அவருடையதம்பிகுமார முத்து நாயக்கன் படைகள் திரட்டுவதாகச் சொல்லிக் கொண்டிருந்ததை நம்பியிருந்து விட்டார். ஆனால் குமாரமுத்து நாயக்கனுக்குத் தீரமும் இல்லை, திறமையும், மைசூர்ப்படைகளை எதிர்க்க ஓர் ஏற்பாடும்செய்யவில்லை.

“சத்திய மங்கலத்தைப் பிடித்தபோது எதிர்ப்பு இல்லாமல் போகவே மைசூர்த் தளபதிக்கு ரொம்ப தைரியம் வந்து விட்டது. படைகளை நடத்திக் கொண்டே மடமடவென்று மதுரைக்கருகிலேயே வந்துவிட்டான் தலை நகருக்கே ஆபத்து வந்து விட்ட தென்பதைக் கண்டவுடன்தான் திருமலை நாயக்கர் விழித்துக் கொண்டார். உடனே மறவச் சீமைக்கு அதிபதியான ரகுநாத சேதுபதிக்கு உதவி கோரி ஆளனுப்பினார். சேதுபதி மந்திரத்தால் வரவழைப்பதுபோல ஒரு பெரும்படையைத் திரட்டிக்கொண்டு வந்துவிட்டார். நாயக்க மன்னரும் அவசரமாக ஒரு படை திரட்டினார்.இரண்டு படைகளும் சேர்ந்து மைசூர்ப்படைகளை எதிர்த்தன. எதிரிகள் பின்வாங்கி ஓட்டமெடுத்தார்கள்.

"சேதுபதி, படைகளுடன் எதிரிகளைத் துரத்திக் கொண்டு போனார். மைசூர்ப் படைகள் பின்வாங்கி அதோ தெரிகிறதே அந்தக் குளம், அங்கே வந்து தங்கினார்கள். அந்த இடம் இயற்கையாக மூன்று புறமும் குன்றுகள் சூழ்ந்துகோட்டைபோல அமைந்திருக்கிறதல்லவா? அதைப் பயன்படுத்திக் கொண்டு, மைசூரிலிருந்து உதவி வரும்வரையில் எதிர்த்துநிற்கவழிசெய்து கொண்டான்.அந்தத்தளபதி துரத்திக்கொண்டுவந்த சேதுபதியின் படைகள் கிழக்கே ஒரு காத துரத்தில் கூடாரமடித்தார்கள்.அவர்கள் துரத்திக் கொண்டு வந்த விறுவிறுப்புடனேயே தாக்கியிருந்தால் எதிரிகளைப் பஞ்சாகப் பறக்கவிட்டிருக்கலாம். ஏனோ அப்படி நடக்கவில்லை. இருதரப்பாருக்கும் கொஞ்சம் களைப்பாறவும், அணிகளைத் திருத்தியமைக்கவும் நேரம் கிடைத்தது.

“சுமார் பத்து நாள்வரை இரண்டு படைகளும் காத தூரத்தி லேயே ஒதுங்கி இருந்தன. பத்தாம் நாள், மைசூரிலிருந்து புதிய படைகள் வந்திருப்பதாகச் சேதுபதிக்குச் செய்தி எட்டியது. எவ்வளவு படைகள் வந்திருக்கின்றன; அவற்றை எப்படி உபயோகிக்கப்போகிறார்கள் அவர்களே தாக்குவார்களா என்பன போன்ற தகவல்களை உளவறிந்து கொண்டுதான் மேலே தம் திட்டத்தை வகுக்கவேண்டுமென்று முடிவு செய்தார்.சேதுபதி.

“உளவறிவதில் நிபுணர்கள் பலர் அவரிடம் இருந்தார்கள். அந்தக்கலையில் சூரர்கள். ஆனால் அவர்களையெல்லாம் அனுப்பாமல், ரகுநாத சேதுபதி, தாமே மாறு வேஷத்தில் புறப்பட்டார். அவர் அப்படிப் புறப்பட்டுப்போனது அவருடைய படையாட்களுக்கே தெரியாது.

"அந்தக்காலத்தில் அதோ இருக்கிறதே. வண்டிப்பாதை அது ஒரு காட்டோடையாக இருந்தது. இந்த மடித்தாள் பட்டி அப்போது நல்ல செழிப்பான கிராமம். பத்துப் பதினைந்து மச்சு வீடுகளும் உண்டு. இந்த எல்லை போர்க்களமாக மாறியவுடன் கிராமத்து மக்கள் ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள். மைசூர்க்காரர்கள் வந்த பார்த்து யாருமில்லாததால் ஊரை அப்படியே விட்டு விட்டார்கள்.

“ஓடிப்போன கிராம மக்களில் கள்ளிமுத்தன் என்று ஒர் அம்பலகாரன் இருந்தான்.கிராமத்தில் பெரிய பணக்காரன்.அவன் ஊரைவிட்டு ஓடிய அவசரத்தில்தம் சொத்தையெல்லாம் வீட்டின் முற்றத்தில் புதைத்துவைத்துவிட்டுப் போய்விட்டான். பத்துநாளாக இரண்டு படைகளும் கை கலக்காமலிருக்கவே எப்படியாவது புதைத்த பொருளை மீட்டுக் கொண்டு போய்விடுவதென்ற உறுதியுடன்,சேதுபதி மாறுவேஷத்தில் புறப்பட்ட அதே இரவில் அவனும் புறப்பட்டு வந்தான். தானும் கூட வருவேனென்று பிடிவாதம் செய்து, அவன் மனைவி மடிச்சியாச்சியும் அவனுடன் வந்தாள். இருவரும் இருளின் போர்வையில் மறைந்து வந்து வீட்டிற்குள் நுழைந்து விட்டார்கள். இருளிலேயே அவசரமாகத் தங்கள் புதையலைத் தோண்டியெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

"சேதுபதி அந்தப் பக்கம் வந்தபோது அவர்கள் வீட்டிற்குள் தோண்டும் சத்தம் கேட்டது.சந்தேகப்பட்டுச்சுவரேறி முற்றத்தில் இறங்கினார். அம்பலகாரன் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தான். சேதுபதி அவன் பயத்தைத் தெளிவிக்கச் செய்த முயற்சியெல்லாம் பலிக்காமல் போகவே,தான் யாரென்பதைவெளியிடவேண்டியது அவசியமாகிவிட்டது.

அவர் சேதுபதிமகாராஜா என்பதையறிந்தபிறகுதான்.அம்பல காரன் ஒய்ந்தான். புருஷனும் மனைவியும் அவர் காலில் விழுந்து கும்பிட்டார்கள்.அவருடைய வீர வெற்றிகளைப் பற்றிக்கேள்விப் பட்டிருந்த மடிச்சியாச்சி அவரை ஒரு தெய்வீக புருஷனாகவே நினைத்திருந்தாள்.

"சேதுபதி, தாம் மேற்கொண்டு வந்த வேலையை விளக்கி, 'அம்பலகாரனிடம் இந்தப் பிரதேசத்தின் அமைப்பு, எதிரிப் படைகளின் இருப்பு ஆகியவற்றைப் பற்றிய விவரங்களைக் கேட்டார். அவர் புறப்படத் தயாரானபோது மடிச்சியாச்சி,  'மகாராஜா இந்த ஏழை சொல்லைக் கேட்க வேண்டும். எதிரிப் படைகளுக்குள்ளே நீங்கள் தனியாகப்போவது சரியில்லையென்று எனக்குப் படுகிறது. உத்தரவு கொடுத்தால் இவரே போய் என்ன விவரம் வேண்டுமானாலும் தெரிந்து கொண்டு வந்துவிடுவார். என்றாள்.

"அம்பலகாரனும் உற்சாகத்துடன்,'ஆம் மகாராஜா' மைசூர்க் காரர்களுக்குக் கள்ளில் ரொம்பப் பற்றுதல், நான் போய் இங்கே கள்ளிருப்பதாகச் சொல்லி எதிரிகளில் ஓரிருவரை அழைத்துக் கொண்டுவருகிறேன். உள்ளே கொண்டுவந்து கட்டிவைத்து நமக்கு வேண்டியதையெல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்றான்.

"இந்தத்திட்டத்துக்குச் சேதுபதி எப்படி இணங்கினார், ஏன் இணங்கினார் என்று யாரால் சொல்ல முடியும் இணங்கிவிட்டார். அம்பலகாரன் புறப்பட்டுப்போனான். மடிச்சியாச்சி மகாராஜாவை வீட்டுக்குள் அழைத்துச்சென்று விளக்கேற்றி உட்கார வைத்தாள்.
"அம்பலகாரன் வீட்டிலிருந்து புறப்பட்டபோது சரியாகத் தானிருந்தான். ஆனால் போகும் வழியில் சூழ்ந்திருந்த இருளில் ஆட்சிபுரிந்தபேய்களின் குணங்கள் அவன் நெஞ்சிலும் ஆட்சிபுரிய ஆரம்பித்து விட்டன. சேதுபதிக்கு உதவி செய்வதில் கிடைக்கும் சன்மானம் எவ்வளவு இருக்கும்? ஆனால் எதிரி தளபதியிடம் சேதுபதியையே பிடித்துக்கொடுப்பதாகச்சொன்னால் ஏராளமான சன்மானம் கிடைக்கக்கூடுமல்லவா? இந்த எண்ணத்தை எதிர்த்துப் போராடி வெற்றி கொள்ள அவனிடம் சக்தி இல்லை. தன்னைக் கண்டு அவன் போட்ட பயக்கூச்சலைக் கொண்டே சேதுபதி இதைப் புரிந்துகொண்டிருக்கவேண்டும். ஆனால்..!

“எதிரிப்படைகளின் முன் எல்லையை அடைந்தவுடனேயே பல படைவீரர்கள் வந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள். தன்னை அவர்களுடைய தளபதியிடம் அழைத்துச்செல்லும்படி கேட்டுக்கொண்டான்.

“தளபதியிடம் போனவுடன் தனக்குத் தாராளமாகச் சன்மானம்கொடுத்தால்,சேதுபதியையேபிடித்துக்கொடுப்பதாகச் சொன்னான். அவன் கேட்குமளவு பொன்னாகவே கொடுப்பதாக வாக்களித்தான் தளபதி அவனுடன் பொறுக்கியெடுத்த ஐம்பது வீரர்களை அனுப்பினால் சேதுபதியைச் சிறைப்படுத்திக் கொண்டு வருவதாகச் சொன்னான். அம்பலகாரன், மைசூர்க்காரர்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை.

"அவர் இருக்குமிடத்தைச் சொல்லிவிட்டு நீ இங்கேயே காவலில் இருக்க வேண்டும் என் ஆட்கள் கொண்டு வந்தவுடன் தான் உன்னைப் போகவிடுவேன்” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.

"அவர்கள் சொல்லும் வழியில் போனாலல்லாமல்தான் உயிருடன் கூடத் தப்பமுடியாது என்பது தெளிவாகிவிட்டது அம்பலகாரனுக்கு எப்படியானாலென்ன நமக்கு வேண்டியது உளவுக்கூலி பொன்தானே என்று அவர்கள் நிபந்தனைக்கு உடன்பட்டு காட்டோடைக்குக் கிழக்கேயிருக்கும் கிராமத்தில் தெற்குக் கோடியிலிருந்து இரண்டாவது வீட்டிலிருக்கிறார். தனியாகத்தானிருக்கிறார்” என்று சொல்லிவிட்டான்.

“தளபதி பொறுக்காக நூறு வீரர்களைத் திரட்டி அனுப்பினான். அவர்கள் திரும்பிவரும்வரை கவனித்துக்கொள்ளும்படி, அம்பலகாரனை இரண்டுவீரர்களிடம் ஒப்படைத்தான்.

“மைசூர் வீரர்கள் வந்து கிராமத்தைச் சூழ்ந்து கொண் டார்கள். அம்பலகாரனை எதிர்பார்த்துக் காத்திருந்த சேதுபதிக்குக் குறளிசொல்வதுபோல ஏதோ கோளாறு நேர்ந்திருக்கிறதென்று மனத்திலே பட்டு விட்டது. ஆனால் போனவன் துரோகம் செய்திருக்கக்கூடுமென்று அவர் சந்தேகிக்கவே இல்லை.

"மடிச்சியாச்சியிடம், ஏதோ தவறு நேர்ந்திருக்கிறதென்று எனக்குப்படுகிறது. நாம் உடனே இங்கிருந்து போய்விடவேண்டும். உன்னைத் தனியாக விட்டுவிட்டுப் போக முடியாது. என்னுடன் வந்துவிடு, உன்னை மறுபடி உன் கணவனிடம் சேர்க்க வழி செய்கிறேன்.புறப்படு” என்றார்.

"ஆனால் அவர்கள் தப்புவதற்குச் சமயமே இல்லை என்பது அடுத்த கணமே தெளிவாகிவிட்டது. எதிரி வீரர்கள் வீட்டைச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். அவர்களில் ஒருவன் சிலரைப் பின்புறமாக முற்றத்தில் ஏறிக் குதிக்க உத்தரவிட்டது உள்ளே கேட்டது.

"மடிச்சியாச்சிநடுநடுங்கிப்போய்விட்டாள்.தங்களால்தான் அந்த வீர தெய்வத்துக்கு ஆபத்து வந்துவிட்டது என்ற எண்ணம் மனத்தில் ஓங்கிவிட்டது.

"ஆண்டவனே! இந்த பயம் என்கிற குணம் ரொம்ப அதிசயமானது. அதுவே ஒருவனைப் புழுவிலும் புழுவாக மாற்றிவிடுகிறது: இன்னொருவனை வீராதி வீரனாக்கிவிடுகிறது. மற்றொருவனை அமரனாக்கிவிடுகிறது. பயம்.அழிக்கும் சக்தி அதிலிருந்து கற்பனை செய்தும் காண முடியாத துணிச்சலும், தியாகமும் பிறப்பது எவ்வளவு பெரியஅதிசயம்!

"மடிச்சியாச்சியைப் பிடித்த பயம் ஒரே நொடியில் அவளை தெய்வப் பெண்ணாக மாற்றிவிட்டது. அவளிடம் இயற்கையிலே இருந்த தாய்மைதான் பொங்கி எழுந்திருக்க வேண்டும். சேதுபதியைத் தன் சொந்த மகனாக வரித்துக் கொண்ட அந்தத்தாய், அடுத்த கணம். அன்னை பராசக்தியின் ஒர் அவதாரமாகிவிட்டாள்.
"ஒரே கணத்தில் அந்தக்கூடத்துக்காட்சியை மாற்றி அமைத் தாள்.ஒருபக்கத்தில் கிடந்தபாயைக்கொண்டுவந்து நடுக்கூடத்தில்
விரித்தாள். முற்றத்தில் தோண்டிப் போட்டிருந்த மண்ணில் கொஞ்சம்அள்ளிக்கொண்டுவந்தாள்பானையிலிருந்ததண்ணிரில் மண்ணைக் கலந்து சேதுபதியின் நெற்றியிலும், கன்னங்களிலும், மூக்கின்மேலும்பூசினாள்.பாயின்மேல் உட்கார்ந்துசேதுபதியைத் தன் மார் மேல் சாய்த்துக்கொண்டு மகாராஜா, நீங்கள்தான் என் கணவர். உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று ரகசியமாகச் சொல்லிவிட்டு, உரத்த குரலில், 'என் சாமியில்லே! கொஞ்சம் தூங்குங்க. உடம்பு நெருப்பாக கொதிக்குதே காளியாத்தா என் தாலிக் கவுத்தைக் காப்பாத்திக் குடு தாயே! ஒனக்கு ரெண்டு கடா வாங்கிவெட்டச்சொல்றேன் என்று பிரலாபிக்க ஆரம்பித்தாள்.

“வீரர்கள் முற்றத்துக்குள் ஏறிக்குதித்து உள்ளே வந்தார்கள். ஒருவன் வாசல் கதவைத் திறந்துவிட அங்கிருந்தவர்களும் வந்து கூடத்திலிருந்த இருவரையும் சூழ்ந்து கொண்டார்கள். சிலர் வீட்டின் மற்றப்பகுதிகளில் புகுந்து தேட ஆரம்பித்தார்கள்.

"சேதுபதிரொம்பத்திறமையுடன் நாடகமாடினார்.அவர் எழ முயலுவதும், ஆச்சி அவரை இழுத்து மார்பின் மேல் சாத்திக் கொண்டு, சும்மா இருங்க என் ராசா என் சாமியில்லே! ஐயா, உங்களுக்கெல்லாம் புண்ணியமுண்டு. என் வீட்டுக்காரருக்கு ஏதாவது மருந்து குடுத்துக் காப்பாத்துங்கையா காளியாத்தா! எனக்குத்தாலிப்பிச்சைபோடுதாயே என்றகூவியதுவந்தவர்களைத் திகைத்து நிற்கச் செய்துவிட்டது.

மைசூர் வீரர்களும் நம்ம ஜனங்கள்தானே? தன் கணவனைத் தவிர வேறு ஒர் ஆண்பிள்ளையை ஒருத்திதன் மார்பின்மேலேயே சாத்திக் கொள்வாளா! அதுவும் காளியாத்தாளிடம் தாலிப்பிச்சை கேட்கிறாள்.ஆகையால், அவர்கள் சேதுபதியையும் ஆச்சியையும் நிஜமான கணவனும் மனைவியும் என்றே நம்பிவிட்டார்கள்.

அந்த வீட்டின் இதரப் பகுதிகளிலும் அக்கம் பக்கத்திலும் தேடிய ஆட்கள் வெறும் கையுடன் திரும்பி வந்தார்கள். அதன் பிறகுதான் அவர்களை நடத்திவந்த வீரன், ஆச்சியிடம்கேட்டான்: "ஏய் உண்மையைச் சொல்லிவிடு; இங்கே சேதுபதி வந்தாராமே, எங்கே அவர்? ஏமாற்ற முயன்றால் இருவரையும் துண்டம் துண்டமாகவெட்டிஎறிந்துவிடுவோம் என்றான்.

"ஆச்சி கண்ணிருடன், அப்படியாவது என் கஷ்டத்தை முடிச்சிடுங்க. பத்து நாளாச்சு நாங்க வெயிலைப் பாத்து. பயந்து கிட்டு எலிங்கமாதிரி இப்படிப் பதுங்கிக்கிட்டுக் கெடக்கிறோம். அஞ்சுநாளாச்சு இவரு சோறு தண்ணிபாத்து. நீங்கசொல்ற ஆளை நான் சொப்பனத்திலே கூடப் பாத்ததில்லே. நீங்க கொளந்தை குட்டிங்களோடே நல்லா இருப்பீங்க. உங்க பொஞ்சாதிங்கதாலி கெட்டியாயிருக்கும். எங்க ரெண்டு பேரையும் ஒரே அடியாக் கொன்னு போட்டுடுங்க என்று படபடவென்று பேசினாள்.

“அவள் பேச்சின் முடிவில் சேதுபதி ஒரு தடவை முனகித் தலையைப் புரட்டினார். ஆச்சி தலையைப் பிடித்துத் தடவி விட்டு, ஐயோ,சும்மாஇருங்களேன் என்று சமாதானப்படுத்தினாள்.

வீரர்களின் தலைவனுக்கு கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகமும் தீர்ந்துவிட்டது. நம்மிடம் உளவு சொல்ல வந்தவன் ஏமாற்றி இருக்கிறான் என்று சொன்னான் ஒருவன். அப்படித்தான் தோன்றுகிறது. மதுரைக்காரர்கள் ஏதோ சூழ்ச்சியாக அவனை அனுப்பி இருக்கிறார்கள். புறப்படுங்கள் என்று உத்தரவிட்டுவிட்டுப் புறப்பட்டான் தலைவன். அந்த அபாய காலத்தம்பதிகளைத் திரும்பிக் கூடப்பார்க்காமல் போய்விட்டார்கள்.

அவர்கள் கன்னடத்திலேயே பேசினாலும் சேதுபதி ஓர் அளவுக்கு உண்மையை ஊகித்துக்கொண்டுவிட்டார்.எதிரியாட்கள் கிராமத்தின் எல்லைக்குப் போகும்வரை அவகாசம் கொடுத்து விட்டுக்குதித்து எழுந்தார்.தம் சொந்தத்தாயைவணங்குவது போல ஆச்சியை வணங்கினார். அம்பலகாரனுடைய துரோகத்தைப் பற்றித்தான் அறிந்துகொண்டதைச் சொல்லி, அவளைத்தன்னுடன் வந்துவிடும்படி அழைத்தார்.

மடிச்சியாச்சி அதற்குச் சம்மதிக்கவில்லை. என் கதி என்ன ஆனாலும் சரி, நீங்கள் தப்பிப் போய் ஊரைக் காப்பாத்துங்கள் வேலையை முடிக்காமல் திரும்புவதில்லை என்று மைசூர்ப் பாசறையைநோக்கிப்புறப்பட்டார்.

மைசூர் வீரர்கள் ஏமாற்றத்துடனும், மதுரைக்காரர்கள் செய்யும் புலன்புரியாத சூழ்ச்சியின் பயத்துடனும் திரும்பிச்சென்று தங்கள் தளபதியிடம் நடந்ததைச்சொன்னார்கள். அவர்கள் தளபதி கோபத்தில் அம்பலகாரனை இழுத்து வரச் சொல்லி, முன்பின் யோசிக்காமல் அவன் மூக்கை அறுக்க உத்தரவிட்டான். மூக்கை இழந்து துடித்துக் கொண்டிருந்தவனிடம், அவன் குறிப்பிட்ட வீட்டிலிருந்த தம்பதிகளைப்பற்றிச்சொன்னான் தளபதி.

அம்பலகாரன், ஐயையோ! அவள் என் பெண்சாதிதான். அவள் மார்மேலே படுத்திருந்தவன்தான் சேதுபதி. சண்டாளி: எனக்கே துரோகம் செய்துவிட்டாள்" என்று கூவித் தன் மூக்கை அறுத்த வாளையே பிடுங்கிக்கொண்டு ஓடினான்.

அவன் வீட்டிற்குள் நுழைந்தகோலத்தைக்கண்டமடிச்சியாச் சிக்கு நிலைமை புரிந்துவிட்டது. கொஞ்சமும் கலங்காமல் அந்த வெறியனின் கோரத்தாண்டவத்திற்கு உட்பட்டாள். அம்பலகாரன் அவளைக் கண்டதுண்டமாக வெட்டி எறிந்தான். அப்பொழுதும் அவன் வெறி அடங்கவில்லை. அவள் மூக்கை அறுத்து எடுத்துக் கொண்டு மதுரைத்தளத்தை நோக்கி ஓடினான்.”

பண்டாரம் இந்த இடத்தில் கதையை நிறுத்திவிட்டு மடித்தாள் பட்டி இருந்த திசையில் பார்த்தார். நானும் திரும்பிப் பார்த்துக்கொண்டே"அப்புறம்” என்றேன் ஆத்திரத்துடன்

அப்புறம் என்ன? சேதுபதி தாமே போய் எதிரியைப் பற்றித் தமக்கு வேண்டியதை எல்லாம் தெரிந்துகொண்டார். புதிதாக வந்த படைபலம் தருவதற்கு அவகாசம்கொடாமல், மறுநாளே மதுரைப் படைகள் தாக்கின. அறுபது நாழிகைஇடைவிடாமல் நடந்த புயல் போரில் இரு தரப்பாரிலும் பெருவாரியானசேதம் மதுரைப் படைகள் எதிரிகளை மைசூர் வரையில் துரத்திக் கொண்டு போனார்கள். மடிச்சியாச்சியின் மூக்குக்கு மைசூர் தளபதியின் மூக்கையே பதில் வாங்காமல் விடுவதில்லை என்று சபதம் கூறித் துரத்தினார் சேதுபதி அதில் வெற்றியும் பெற்றார். அதனால்தான் அந்த யுத்தத்துக்கு மூக்கறுத்தான் சண்டை என்று பெயர் வழங்குகிறது.

சேதுபதி திரும்பி வரும்வ ழியில், இங்கே இதே இடத்தில்தான் தண்டடித்துத்  தங்கினார் .மடிச்சியாச்சியை அடக்கம் செய்திருந்த அந்த இடத்தில் கோவிலைக் கட்டுவித்தார். அவளுக்கு மடி கொடுத்ததாய் என்று பெயரும் வைத்தார்.மடிகொடுத்ததாய் மடி கொடுத்த அம்மனாகி இப்போது மடித்தாளம்மனாகிவிட்டாள்.

"ஆண்டவனே! அதோ உங்கள் வண்டிக்காரன் வந்து விட்டான்.உத்தரவு வாங்கிக்கொள்ளட்டுமா” என்று பண்டாரம் கப்பரையையும், தடியையும் எடுத்துக்கொண்டு எழுந்தார்.

நானும் கூடவே எழுந்து, "இது நிஜக் கதையா ஸ்வாமி” என்றேன். பண்டாரம், "அவ்வளவும் கல்லிலே பொறித்து வைத்திருக்கிறது. கல் அந்தக் கிணற்றுக்குள்ளே கிடக்கிறது. உற்சாகமுள்ள வர்கள் தேடி எடுத்தால் பார்க்கலாம்" என்றுபுறப்பட்டார்.

அவர்போவதையே பார்த்துக்கொண்டு, அரை நாழிகைவரை நான் சிலைபோல் நின்றிருந்தேன் என்பது வண்டிக்காரன் சொல்லித் தான் எனக்குத் தெரியும்.

**********

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்