Sep 26, 2012

க.நா.சு: ஓர் எழுத்தியக்கம்-பழ. அதியமான்

க.நா.சு.100

க. நா. சுப்ரமண்யம் (1912- 1988) எழுதிய நூல்களை நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என ஆறு வகையாகப் பிரிக்கலாம். இலக்கிய வரலாறு அவரை விமர்சகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பதிவு செய்துகொண்டு அவரது மற்றவகைப் படைப்புகளைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. என்றாலும் நாவல்களும் மொழிபெயர்ப்புகளும் எண்ணிக்கையில் முதலிரு இடங்களைப் பெற்றுவிடுகின்றன. சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் என்ற வரிசையில் எண்ணிக்கை வகையில் மற்ற படைப்புகள் அமையும். மொழி பெயர்ப்புகளில் பிறமொழிகளிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குமானவை அடங்கும். உலக இலக்கியம், இலக்கியாசிரியர்கள் பற்றி எழுதியவை விமர்சனக் கட்டுரைகளில் அடங்கும்.

கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம் எழுதிய நூல்கள் எல்லாவற்றையும் இன்றைய வாசகன் ஒருவனால் படித்துவிட முடியுமா என்று சொல்ல முடியவில்லை. இவற்றை ஒருசேரப் 5583098182_c953766a59_b பார்ப்பதுகூடச் சாத்தியமல்ல எனத் தோன்றுகிறது. சாகித்திய அகாதெமிக்காக 2000இல் இம்முயற்சியில் இறங்கிய தஞ்சை பிரகாஷ் வெற்றிபெற இயலவில்லை. இலக்கியச் சிந்தனையின் தூண்டுதலில் இம் முயற்சியில் சென்ற ஆண்டு ஈடுபட்ட கி. அ. சச்சிதானந் தம் ‘அவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பது என்பதும் சுலபமான காரியம் அல்ல’ என்று சொல்லிவிட்டார். 76 ஆண்டுக் காலம் வாழ்ந்து, 60 ஆண்டுக் காலம் சளைக்காமல் எழுதிய க.நா.சுவின் நூல்களை எல்லாம் தொகுத்தால் 20,000 பக்கங்கள் வரலாம் என்பது அவரது யூகம். இது குறைவான மதிப்பீடு என்பது என் எண்ணம். க.நா.சுவின் நூல்கள் நாட்டுடைமையாகிவிட்டதால் உரிமை பற்றிக் கவலையின்றி எல்லாவற்றையும் தொகுத்து எவராவது வெளியிடலாம் - ‘காவ்ய’ப் பதிப்பாக அல்லாமல்! நூற்றாண்டை ஒட்டி வெளியிட்டால் பொருத்தமாகவும் இருக்கும்.

2012இல் நூற்றாண்டு காணும் தமிழ் இலக்கியவாதிகளுள் முக்கியமான நால்வர் க. நா. சுப்ரமண்யம், மு. வரதராசன், கோ. வன்மீகநாதன், ஜி.வரதராஜன் ஆகியோர். மொழிபெயர்ப்பிலும் பழந்தமிழ் சமய நூல்களுக்கு உரை எழுதுவதிலும் ஈடுபட்ட பின்னிருவரின் படைப்புகள் எண்ணிக்கையில் குறைவு. இலக்கியம் பற்றிய பார்வையில் ஏறக்குறைய எதிர் - துருவங்களாய்க் கருதத்தக்க முன்னிருவரும் படைப்பு எண்ணிக்கையில் இணைந்த இமயங்களாய் இருக்கின்றனர். க. நா. சு., மு. வ. இருவரின் படைப்புகள், அவர்கள் வயதினும் மிகுதி. 62 வயது வாழ்ந்த மு.வவின் நூல்கள் 85 என்கிறார்கள். அவை பட்டியலுக்குள் வந்துவிட்டன. க. நா. சு. 76 ஆண்டுகள் வாழ்ந்தார். ஏறக்குறைய 107 நூல்கள் அவரது முழுமைபெறாத பட்டியலில் சேர்ந்துள்ளன. ஆறு மாத காலத்தில் கிடைத்த நேரத்தில் தேடியதில் கிடைத்ததன் இருப்புக் கணக்கு இவை.

ஒரு படைப்பாளியைப் பற்றி மதிப்பிட (சாதகமாகவோ பாதகமாகவோ) முதல் ஆதாரமாக இருப்பவை அவரது படைப்புகள். அவையே முழுமையாகவும் ஒழுங்காகவும் கிடைக்காதபோது அவரைப் பற்றிச் சரியான ஆய்வுகள் உருவாகவும் விவாதம் மேலெழும்பவும் வாய்ப்புகள் இல்லை. சமகாலப் பார்வை சார்ந்த அரசியல், தனிப்பட்ட அன்பு அல்லது விரோதம், மதிப்பு அல்லது பொறாமை கலந்த மதிப்பீடுகளும் வதந்திகளும் தொடர்ந்து பரவும் அது. ஒருவரிடமிருந்து ஒருவருக்குப் பரவும் தொற்றுநோய். வாசகன் சுயமாகப் படித்து அவனாக உருவாக்கிக்கொள்ளும் கருத்தும் மதிப்பீடும்தான் அவனுக்குள் இறங்கிச் செரிக்கும். மற்றவை என்ன இருந்தாலும் அன்னியப் பொருள்கள்தாம். அவற்றை உடம்பு ஒரு கட்டத்தில் வெளியேற்றி விடும்.

படைப்புகள் பொதுவெளியில் இல்லாததினால், அவற்றைப் பற்றிய சில தகவல்களை வைத்திருப்பவர்கள்கூட ஆய்வாளர்களாக மகுடம் சூட்டிக்கொண்டு திரிகிறார்கள். தகவல்கள் ஆய்வுகள் அல்ல என்ற ஆய்வுலகின் பாலபாடத்தைத்தான் தமிழ்ச் சமூகத்தில் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது. இது கேவலம். ஒரு மொழியின், இலக்கியத்தின் ஒரு கூறுமீது வெளிச்சம் பாய்ச்சிய படைப்பாளிக்கு அவனது சமூகத்தின் பின்தேவைக்கான முன்தயாரிப்பு அவனது நூற்பட்டியல். இங்கே க. நா. சு. அரை நூற்றாண்டுக்கும் மேலாக எழுதிக் குவித்திருக்கிறார். அவரது கருத்துகளைக் காலம் இன்னும் பழசாக்கிக் குப்பைக்குத் தள்ளிவிடவில்லை. அப்படியே தள்ளினாலும் அவரது மொழிபெயர்ப்புகளும் விமர்சனங்களும் உரமாகும் குப்பைகளாகவே இருக்கும்.

இந்தச் சூழலில் க.நா.சு. பற்றிய ஆய்வுக்கான முன்தயாரிப்பாக அவரது நூற்பட்டியலை, முழுக்குறிப்புகளுடன் ஆயத்தப்படுத்த விரும்பினேன். அப்பணி முடியவில்லை. இந்நூற்றாண்டில் முடியலாம். அதற்கு முன்னால் அப்பட்டியலை வாசகர்களின் கவனத்துக்கு முழுமைப்படுத்தும் நோக்கத்தில் சில சாதாரண விவரங்களுடன் தர விரும்பியதன் விளைவு இக்கட்டுரை.

பத்திரிகை எழுத்து

மணிக்கொடி, சூறாவளி, சந்திரோதயம், சரஸ்வதி, தேனி, இலக்கியவட்டம், எழுத்து இறுதியாக முன்றில் போன்ற இதழ்களுடன் தொடர்புகொண்டும் நடத்தியும் இருந்த க. நா. சுப்ரமண்யத்தின் படைப்புகள் பெரும்பாலும் பத்திரிகைகளில் வெளிவந்த பின்னரே நூல்களாகியுள்ளன. ‘பெரிய மனிதன்’ சுதேசமித்திரனில் வந்தது. ‘படித்திருக்கிறீர்களா’ சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் வந்த தொடர். ‘நளினி’ (1959) சந்திரோதயத்தில் (1945) தொடர்கதையாக சமூகச் சித்திரம் என்ற தலைப்பில் பிரசுரமானது. முதலில் எழுதிய நாவலான ‘சர்மாவின் உயில்’ சுதேசமித்திரன் (1946) வாரப்பதிப்பில் தொடராக வந்தது. சமூகச் சித்திரம், நல்லவர், ஆட்கொல்லி ஆகியவை வானொலியில் ஒலிபரப்பானவை. இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் இலக்கிய வட்டத்தில் பிரசுரமான கட்டுரைகள்.

க.நா.சுவின் சில நாவல்கள் முதலில் வானொலியில் ஒலிபரப்பான தகவல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. க. நா. சு. போன்றவர்களின் ஆழமான எழுத்துகள் வானொலி போன்ற திருப்பிக் கேட்க, திருப்பிப் பார்க்க வாய்ப்பற்ற ஊடகத்தில் வெளிவரும்போது படைப்பாளனின் உணர்வு எந்த அளவுக்கு வாசக மனத்துக்குள் போய் இறங்கும் என்ற சந்தேகம் யாருக்கும் வரக்கூடியதே. வானொலி வெளிப்பாடு கணத்தில் தோன்றிக் கணத்தில் மறையும் ஒலிக்கீற்று. நேயனின் மனத்தில் ஊடுருவிப் பாய அது மின்னலைப் போல இருக்க வேண்டும். க.நா.சுவின் எழுத்துகள் மின்னல் அல்ல. மீண்டும் படித்துப் புரிந்துகொள்ள வேண்டிய, நிதானமாகப் படித்தறிய வேண்டிய, சராசரி வாசகனின் புரிதலுக்கு மீறிய மூடுண்ட எழுத்துகள். இவ்வகை எழுத்துகள் இத்தன்மை உடைய ஊடகம் மூலம் எங்ஙனம் பரவ முடியும் என்று குழம்பி நின்றேன். வானொலியில் ஒலிபரப்பான நாவல்களுள் ஒன்றான ஆட்கொல்லி முன்னுரையில் என் குழப்பத்தை முன்னுணர்ந்தவர் போலக் க. நா. சு. விவரிக்கிறார்.

“ரேடியோவில் வாராவாரம் வாசிக்க ஒரு நாவல் வேண்டுமென்று அவர் [டி. என். விசுவநாதன்] கேட்ட போது இதை எழுதித் தந்துவிடுவதாக ஒப்புக்கொண்டேன். நாவலைச் சுலபமானதான, சம்பவங்கள் நிறைந்ததாக, சுலபமாக வாராவாரம் பின்பற்றக் கூடிய சுவாரசியமான தொடர்கதையாக அமைக்க விரும்பவில்லை நான். ரேடியோ மூலம் கனமான கருத்துள்ள ஆழ்ந்துள்ள, கவனிக்க வேண்டிய, ஊம் கொட்டாமல் நின்று நிதானித்துச் சிந்திக்க வேண்டிய நாவல் ஒன்று வெளியிட்டுவிட வேண்டும், சமூகச் சித்திரம் என்று முன்பு எழுதிய ஒரு லேசான கதைக்குப் பரிகாரமாக என்று எனக்குத் தோன்றியது. அப்படியே செய்தேன்.”

தொடர்ந்து வானொலியில் க.நா.சுவின் நாவல்கள் ஒலிபரப்பானதாகத் தெரியவில்லை. எப்படி ஆகும்?

நாவல் எண்ணிக்கை

சமூகச் சித்திரம் தொடங்கித் தந்தையும் மகளும் உள்ளிட்டு 17 நாவல்களின் பெயர்களைக் குறிப்பிட்டு ‘போன்ற 20 நாவல்கள்’ என்று க. நா. சுவின் நாவல்களின் பட்டியலைத் தருகிறார் தஞ்சை பிரகாஷ், சாகித்திய அகாதெமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் எழுதிய நூலில். இவை தவிர அச்சில் வராமல், உள்ள நாவல்கள் எனத் திருவாலங்காடு (4 பாகம், 1000 பக்கத்துக்கு மேல்), மால்தேடி, வக்கீல் ஐயா, ஜாதிமுத்து, சாலிவாஹணன், சாத்தனூர் போன்ற 15க்கும் மேற்பட்டவை கையெழுத்துப் பிரதிகளாக உள்ளனவாம். ஆக மொத்தம் 35 நாவல்கள் தேறுகின்றன. இவை நாவல்கள் மட்டும். பிரசுரமானவை, பிரசுரமாகாதவை என்ற வகையில் அடங்கும் இவை மட்டுமல்ல க.நா.சு. எழுதியவை. அழிந்துபோனவை -மன்னிக்கவும் - கிழிந்துபோனவை என்ற ஒருவகையையும் இதில் சேர்க்க வேண்டியுள்ளது.

1949ஆம் ஆண்டு பேரன்பு என்னும் ஒரு நாடகக் காப்பியத்தைத் திருப்தி தராதபோது க.நா.சுவே om033 கிழித்து எறிந்திருக்கிறார் என்று பிரகாஷ் குறிப்பிடுகிறார் (க.நா.சுப்ரமண்யம், ப. 53).

க.நா.சு. இலக்கியத்தடம் (1991) நூலில் இடம்பெற்றுள்ள ஒரு நேர் காணலில் க.நா.சு. (1984) சொல்வதை இவ்விடத்தில் பார்க்கலாம்:

“ஏழுபேர் (நாவல்) உங்கள் [வாசகர்] கண்ணில் பட்டிருக்க வாய்ப்பில்லை. புத்தகத்தை அச்சடித்து வீட்டில் வைத்துவிட்டு ஊருக்குப் போயிருந்தேன். வீட்டுக்காரன் வாடகை பாக்கி என்று எல்லாப் புத்தகங்களையும் பழைய புத்தகக் கடையில் விற்றுவிட்டான்.”

க. நா. சு. குறிப்பிடும் ஏழுபேர் நாவல் வெளிவந்ததோடு அவரது மூன்று நாவல்கள் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. எது எப்படியோ வீட்டுக்காரனுக்கு வாடகை பாக்கி வைத்து அவஸ்தைப்பட்டிருப்பார் என்பதும் அது புத்தகத்தோடு சம்பந்தப்பட்டது என்பதும் விளங்குகிறது.

க.நா.சுவின் மொத்த நாவல் எண்ணிக்கை 35 தானா என்பது தெரியவில்லை. தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும் (1977) நூல், பசி, பொய்த்தேவு, ஒரு நாள், அசுரகணம் ஆகிய நான்கு நாவல்களை மட்டுமே குறிப்பிடுகின்றது. “அவரது [க.நா.சுவின்] நாவல்கள் புத்தகமாக வந்திருப்பவை பன்னிரெண்டு. மூன்று நான்கு நாவல்கள் கைப்பிரதிகளாக இருக்கின்றன என்று நினைக்கிறேன்” - இது சி. சு. செல்லப்பா (எழுத்து, ஜனவரி 1966) குறிப்பிடுவது.

ஆய்வாளர்களுக்கும் வாசகர்களுக்கும்தான் க. நா. சு. எழுதிய நாவல் எண்ணிக்கை தெரியவில்லை என்று நினைக்க வேண்டாம். ஆசிரியரான க.நா.சுவுக்கும் அது குழப்பம்தான். ஒரு நாள் முன்னுரையில் தயக்கத்துடன் தெரிவிக்கும் வாசகம் இது:

“ஒரு நாள் என்கிற இந்த நாவல் நான் எழுதிய நாவல்களில் ஒன்பதாவது என்று எண்ணுகிறேன்.” ‘எதையும் சந்தேகப்படு’ என்று மார்க்ஸ் சொன்னதைத் தன் நாவல் விஷயத்திலும் கடைபிடிக்கும் க.நா.சுவைப் போய் வலதுசாரி என்று சொல்கிறார்கள்!

எழுதுவதில் சளைக்காதவரான க. நா. சு. தனக்குத் திருப்தி வர அசுர கணம் (1959) நாவலை நான்கு தடவைகள் எழுதியிருக்கிறார். “ஒரு பதின் மூன்று வருஷங்களுக்கும் அதிகமாக மனசில் ஊறிக்கிடந்த விஷயம் இது. பூரணமான உருத் தர நான் இதை நான்கு தடவைகள் எழுத வேண்டியதாக இருந்தது” (அசுரகணம், முன்னுரை). அசுர முயற்சி இன்றி சில நாவல்கள் உடனேயும் உருவாகியிருக்கின்றன. “இது [சர்மாவின் உயில்] என்னுடைய முதல் நாவல். 1938இல் சேலத்தில் ஒரு ஹோட்டலில் தங்கி மூலபாடத்தை 15 நாட்களிலும், இந்த உருவத்தில் 21 நாட்களிலும் எழுதி முடித்தேன்” (சர்மாவின் உயில் முன்னுரை). இதன் முதல் பதிப்பு ஜனவரி 1948இல் கலைமகள் காரியாலயம் மூலம் வெளிவந்தது. முதல் நாவல், எழுதிப் பத்தாண்டுகள் கழித்துத் தான் வந்திருக்கிறது. உயிலை எழுதுவது சிரமமல்ல, நடைமுறைப்படுத்துவது கடினம் என்பது உண்மைதானே.

இன்னொரு நாவலையும் இப்படிப் பலமுறை பல்லாண்டுகள் க.நா.சு. முயன்று முடித்திருக்கிறார். அது பித்தப் பூ. அதுதான் அவரது கடைசி நாவல்.

“பைத்தியத்தின் காரணங்கள்- அது தேகம் காரணமாக ஏற்படுகிறதா, மனம் காரணமாக ஏற்படுகிறதா, இரண்டிற்கும் ஏற்படுகின்ற அதிர்ச்சியினால் உண்டாகிறதா என்றெல்லாம் கண்டுகொண்டு கூறும் அளவில் இந்தக் காலத்தைய மனோதத்துவ அறிவு வளர்ந்துவிட்டதாய் நினைக்கிற மேல்நாட்டு மனோதத்துவ சாஸ்திரமும் ஓரளவிற்கு அசட்டுத்தனம்தான் என்று எனக்குத் தோன்றியதைச் சொல்லும் பித்தப் பூ என்ற தலைப்பைக் கொண்ட நாவல் ஒன்று எழுத வேண்டுமென்று 1959இல் எண்ணினேன். மூன்றுதரம் வெவ்வேறு கோணங்களிலிருந்து வெவ்வேறு வழிகளில் எழுதிப் பார்த்தேன். திருப்தி அளிப்பதாக இல்லை. இப்போது செய்திருப்பது நாலாவது முயற்சி” [பித்தப்பூ (1989) முன்னுரை]. முடிவாக வெளிவந்த நான்காவது முயற்சியைப் பற்றிய அபிப்பிராயத்தைக் க. நா. சு. தெரிவிக்காததைக் கவனியுங்கள். எதையும் ஒன்றுக்கு நாலுதரம் செய்வதுதான் க.நா.சுவின் நாவல் பழக்கம்போலும்.

முதலும் முடிவும்

க. நா. சுவின் முதல் நாவல் பசி என்கிறது காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவந்த பொய்த்தேவு நாவலின் பின்னட்டைக் குறிப்பு. சென்ற பத்தியில் முதல் நாவல் சர்மாவின் உயில் என்று க.நா.சு. கூறுவதாக எழுதியிருந்தீர்களே என்று பார்க்கிறீர்களா! பொறுங்கள்.

சர்மாவின் உயில் (1948) நாவலின் முன்னுரையில் க. நா. சு. சொல்வது பின்வருவது. “ஜனவரி 1938இல் சேலத்தில் ஒரு மாசம் தங்கியிருக்க நேர்ந்தபோது இதை எழுதினேன். சர்மாவின் உயில் என்னுடைய முதல் நாவல் . . . இத்தனை வருஷங்களுக்குப் பிறகு அதை ஆதரவுடன் புஸ்தக உருவில் வெளிக்கொணருகிற கலைமகள் காரியாலயத்திற்கு நான் பெரிதும் கடமைப்பட்டவனாகிறேன். இது 1946இல் சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் தொடர்ச்சியாக வெளியாயிற்று.”

ஆக சர்மாவின் உயில் 1938இல் எழுதப்பட்டு, 1946இல் பத்திரிகையில் வெளியாகி, 1948இல் நூலாகியிருக்கிறது. ஆனால் 1938க்குப் பிறகு எழுதப்பட்ட பசி, 1943இல் வெளி வந்துவிட்டது. எனவே முதலில் எழுதப்பட்ட நாவல் சர்மாவின் உயில் என்றும் முதலில் வெளியான நாவல் பசி என்றும் சொல்லலாம்.

ஒரு நாவல் எழுதப்பட்டுப் பத்தாண்டுகள் கழித்து வெளிவருகின்றதா? ஒரு நூல் வெளியீட்டுக்கு இவ்வளவு காலம் எடுத்துக்கொள்வது இன்றைய பதிப்புச் சூழலில் ஆச்சரியமாகத் தோன்றும். 1940, 50களில் நிலைமை அப்படித்தான் இருந்தது. 1987 அக்டோபரில் வெளியான க. நா. சுவின் இன்னொரு நூலான ஐரோப்பியச் சிறுகதைகளின் வெளியீட்டுத் தாமதத்தை ஒப்பிட இந்தப் பத்து வருடம் ஒன்றுமேயில்லை.

“1942 வாக்கில் அல்லயன்ஸ் குப்புசாமி அய்யரிடம் கொடுத்த தொகுப்பு. 46 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது 1987இல் நூலாக வடிவம் பெறுகிறது. கதைகள் இந்த அரை நூற்றாண்டில் பழசாகிப் போய்விடவில்லை” (ஐரோப்பியச் சிறுகதைகள் (1987), முன்னுரை).

குப்புசாமி ஐயரிடம் கொடுத்த பிரதியை அவர் பேரன் சீனிவாசன் வந்து நூலாக்குகிறார். தாமதம் எனக்கு அதிர்ச்சி தரவில்லை. பிரதியைப் பத்திரமாக வைத்திருந்தது தான் எனக்கு ஆச்சர்யத்தைத் தந்தது.

க. நா. சுவின் முதலில் வெளிவந்த நாவல் பசியாக இருக்கலாம். ஆனால் முதலில் வெளிவந்த நூல் இவ்வாண்டு 150ஆவது பிறந்த ஆண்டைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் தாகூரின் வரலாறு. தாகூர் காலமானதை ஒட்டி அல்லயன்ஸ் வெளியிட்ட டி.கே. சிதம்பரநாத முதலியாரின் முகவுரையுடன் கூடிய நூல் கவி ரவீந்திரநாத தாகுர் (1941). க.நா.சுவின் கடைசி நூல் கலைஞன் வெளியிட்ட மனித சிந்தனை வளமாக (1988) இருக்கலாம். கடைசியாக அவர் முன்னுரை எழுதியது வேள் பதிப்பகம் வெளியிட்ட கலை நுட்பங்கள். 16 டிசம்பர் 1988இல் மறைந்த அவர் அந்த முன்னுரையை 4 டிசம்பர் 1988இல் எழுதியுள்ளார்.

அஞ்சல் வழி நாவல்

நடுத்தெரு என்ற நாவலை க. நா. சு. எழுதியது புதுமுறையில். தான் நடத்திய இலக்கிய வட்டம் இதழில் ஒரு தொடராக அதை எழுதாமல், ஒவ்வொரு இதழுடனும் தனித்தனியாக எட்டு, எட்டு பக்கங்களாகத் தொடச்சியாக சந்தாதாரர்களுக்கு நாவலை எழுதி அனுப்பியுள்ளார். இலவச இணைப்பாக அஞ்சல் வழியில் நாவல்!

“இலக்கிய வட்டத்தின் ஒவ்வொரு இதழுடனும் எட்டுப் பக்கங்கள் நடுத்தெரு என்கிற நாவலின் பகுதியும் தரப்பட்டுவருகிறது என்று வாசகர்கள் கவனித்திருப்பார்கள். இந்தப் பகுதிகளைச் சேகரித்து வைத்துக்கொள்வதற்கு ஒரு யீஷீறீபீமீக்ஷீ தயாராகிக்கொண்டிருக்கிறது. அது 17 ஜனவரி 1964 இதழுடன் எல்லா சந்தாதாரர்களுக்கும் அனுப்பித் தரப்படும். நாவல் முடிந்த பின், கதையை பைண்டு செய்துகொள்ள புஸ்தக ஜாக்கெட் ஒன்றும் அச்சிட்டுத் தரப்படும்” (இலக்கிய வட்டம், 20 டிசம்பர் 1963).

பைண்டுசெய்யப்பட்ட புத்தகத்தை வைத்துப் படிக்கச் சிக்குப்பலகையும் படித்த பின் பாதுகாத்துவைக்க அலமாரியும் அனுப்புவது பற்றிய அறிவிப்பு ஏதும் தொடர்ந்து வந்த இலக்கிய வட்டம் இதழ்களில் கிடைக்கவில்லை.

நாவல் தொகுப்பு

சிறுகதைகளைத் தொகுப்பாக வெளியிடும் மரபு இருக்கிறது. தமிழில் நாவல்களைத் தொகுத்து முதலில் வெளியிட்டவர் அநேகமாக க.நா.சு.வாகவே இருக்கலாம். அவரது மூன்று நாவல்கள் (1985) (ஏழு பேர், பசி, அசுரகணம்), நான்கு நாவல்கள் (1985) (நளினி, வாழ்ந்தவர் கெட்டால், ஆட்கொல்லி, பெரிய மனிதன்) என்ற நூல்கள் இவ்வகையின.

சிறுகதைத் தொகுப்புகள்

தெய்வ ஜனனம், அழகி, மணிக் கூண்டு, ஆடரங்கு, க. நா. சு. சிறு கதைத் தொகுப்பு மி, மிமி, மிமிமி. ஆகியவை சிறுகதைத் தொகுதிகள். தினமணி, சுதேசமித்திரன், தினமணி கதிர் ஆகியவற்றில் வந்த முறையே பஸ், பயணம், பொய்க்கதைகள் இன்னும் நூலாக வெளிவரவில்லை என்று பிரகாஷ் தெரிவித்திருக்கிறார். ஒரு கதாசிரியனுக்குச் சிறந்த கதைகள் பத்து தேறினாலே போதும் என்று சொன்ன க. நா. சுவின் கதைகள் எண்ணிக்கை நூறு இருக்கலாம்.

நவீனத்தின் அடையாளமாகவே ஆகிவிட்ட புதுமைப்பித்தனும் வடிவ நேர்த்தியில் தேர்ந்துவிட்ட கு. ப. ராவும் மனவுலகத்தை வெளிப்படுத்துவதில் முன்னேறிக்கொண்டிருந்த மௌனியும் புழங்கிக்கொண்டிருந்த வெளியில் அதைக் கண்டுணரும் விமர்சன ஆற்றல் பெற்றிருந்த க. நா. சுவால் அவர்களோடு ஒப்பிடப் படைப்பாற்றலில் குறைந்திருந்தது வருந்த வேண்டிய விஷயம் அல்ல. பெரும்பான்மையோர் அதைக் காணவே முடியாது இருந்தபோது க. நா. சு. அதைக் கண்டதும் உணர்ந்ததும் வெளிப்படுத்தியதும் இலக்கியப் பேராற்றல்தான்.

மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள்

தமிழ், ஆங்கிலம் தவிர பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்விடீஷ் மொழிகளும் க.நா.சுவுக்குத் தெரியும் என்று சொல்வது ஐதீகம். மொழிபெயர்க்கும் அளவுக்கு அம்மொழிகளில் அவருக்குப் பரிச்சயம் கிடையாது என்று பிரமிள் எழுதியுள்ளார். ஆங்கிலம் வழியாகவே அவரது மொழிபெயர்ப்புகள் அமைந்தன என்றாலும் அதில் ஒன்றும் பாதகமில்லை.

நோபல் பரிசு பெற்ற நூல்களின் மொழிபெயர்ப்புகள்; ஐரோப்பிய, ஜெர்மானிய, அமெரிக்க, உலகச் சிறுகதைகள்; ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் கிரேன், ஜாக் லண்டன், இப்சன் போன்ற தனிப்பட்ட எழுத்தாளர் படைப்புகள்; உலகத் தத்துவச் சிந்தனையாளர்கள்; உலகின் சிறந்த நாவலாசிரியர்கள்; உலகின் சிறந்த நாவல்கள்; உலகத்துச் சிறந்த நாடகங்கள்; உலக இலக்கியம் என்ற முறையில் க. நா. சு. மொழிபெயர்ப்புகளை வகைப்படுத்தலாம்.

க.நா.சுவின் மொழிபெயர்ப்புகள் விதவிதமான முறையில் நூல்களாகியுள்ளன. இவற்றில் சீர்மை இல்லை. உலகத்துச் சிறந்த நாவல்கள் என்ற பெயரில் இரண்டு நூல்கள் இருக்கும். ஒன்றில் 48 நூல்களின் சுருக்கங்கள்; மற்றொன்றில் 15 நூல்களின் சுருக்கங்கள். இதில்கூடப் பெரியது; சிறியது என்ற சீர்மை இருக்கிறது. ஒரு நூலின் கட்டுரைகள் இன்னொன்றிலும் இருக்கும். ஒரு நூல் மறுபதிப்பாகும்போது வேறு பெயரில் ஆகும். முழுதாகவும் மறுபதிப்பு ஆகாது. சில கட்டுரைகள் காரணமில்லாமல் காணாமல் போயிருக்கும். க. நா. சுவின் நூற்றாண்டிலாவது யாராவது இதை ஒழுங்குபடுத்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும். மொழிபெயர்ப்புகள்தாம் க.நா.சுவை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோகும்.

மூலமொழியில் அல்லது ஆங்கிலத்தில் இக்கதைகளையும் படைப்பாளர்களையும் ஒருமுறையாவது படித்தவர்களால்தாம் க. நா. சுவைப் புரிந்துகொள்ள முடியும் எனத் தோன்றுகிறது. க. நா. சுவின் விமர்சனங்களும் அப்படித்தான். அறிமுகம் செய்வதாக நினைத்து இவற்றை எழுதினாலும் அவை எளிமையாக இருக்கவில்லை. அவரது பரந்த படிப் பின் காரணமாக ஆழமான விமர்சனமாக அவை தாமாகவே மாறிவிடுகின்றன என்று தோன்றுகிறது.

கு. அழகிரிசாமியைக் குறைவாகப் படித்திருந்தபோது க. நா. சு. எனக்குச் சாதாரணமாகத்தான் பட்டார். அழகிரிசாமியை முழுதாகப் படித்த பிறகு க. நா. சுவின் அழகிரிசாமி பற்றிய மதிப்பீடு எவ்வளவு ஆழமானது என்று புரிந்தது. அழகிரிசாமி தன் கதைகளை அடக்கமான தொனியில் எழுதுகிறார் என்பது க. நா. சுவின் சாதகமான, நுட்பமான விமர்சனங்களுள் ஒன்று. அதுவே அவரது கதைகளில் ஆதாரம் என்பதை மிகச் சில கதைகளிலிருந்தே க. நா. சு. கண்டுகொண்டுவிட்டார். அதுதான் க. நா. சுவின் இலக்கிய நுட்பம். க.நா.சுவின் இலக்கிய நம்பிக்கைகளுள் ஒன்று ‘தாழ்ந்த சுருதியில் பேசுவது’ என்பது.

அதேபோல உ. வே. சாமிநாதையரின் எழுத்து பற்றிய பார்வையும். “தமிழ்நாட்டில் 1789 முதல் 1930 வரை வாழ்ந்த ஒரு ஐந்தாறு தலை முறைகளின் வாழ்க்கை வளத்தை . . . நமக்கு ஓரளவுக்குக் காட்டியிருக்கிறார் சாமிநாதையர்” என்று ஓரிடத்தில் க. நா. சு. எழுதுகிறார் (விமர்சனக் கலை, ப.106). இதைத்தான் சாமி நாதையரின் எழுத்தில் பழங்காலம் ஜ் சமகாலம் குறித்து முறையே பெரு மிதமும் வருத்தமும் இழையோடிக்கொண்டிருக்கும் என்று ஒரு கூடுதல் அடி எடுத்து ஆ. இரா. வேங்கடா சலபதி பேசுகிறார். பொ. வேல்சாமி உள்ளிட்டோர் வெவ்வேறு குரல்களில், முறைகளில் பெருமாள்முருகன் தொகுத்த உ. வே. சா.: பன்முக ஆளுமையின் பேருருவம் (2005) நூலில் இக்கருத்தையே பேசி உறுதி செய்கிறார்கள். க.நா.சுவின் கருத்தை நீங்கள் மறுக்கலாம். ஆனால் அது ஏதோ ஒரு அடிப்படையிலானது என்பதும் பரந்த படிப்பின் சாரம் அவ்வடிப்படையில் இறங்கியிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

க. நா. சுவின் ஆங்கில நூல்கள்

“க. நா. சுவின் சொந்த நூல்கள் 10 (ஆங்கிலத்தில்)”. க. நா. சுவின் நூல்களைப் பட்டியலிட்ட பிரகாஷ் இப்படி குறிப்பிடுகிறார். இந்த வரியின் நேர்ப்பொருள் புரியவில்லை எனினும் 10 ஆங்கில நூல்களை எழுதியுள்ளார் என்பதைத்தான் இப்படிச் சொல்கிறார் என ஏகதேசமாகக் கொள்ளலாம். அவை பற்றிய விவரங்களை அவர் தரவில்லை. “ஆங்கில மொழி நூல் ஒன்று! காஸ்மா பாலிட்டன் கிளப்” என்று ஒரு வரியும் இதே பட்டியலில் வேறொரு இடத்தில் வருகிறது. அதுவும் புரியவில்லை. சா.கந்தசாமியின் சூர்யவம்சம், நீல. பத்மநாபனின் தலைமுறைகள் ஆகிய நாவல்களைக் க.நா.சு. மொழி பெயர்த்திருக்கிறார். ராஜமையரின் கமலாம்பாள் சரித்திரத்திரத்தையும் அவர் மொழிபெயர்த்துக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் வாழ்வின் இறுதியில் வருகைதரு பேராசிரியராக இருந்த காலத்தில் செய்த பாரதியின் காட்சி மொழிபெயர்ப்பையும் ஆங்கில நூலாகக் கொண்டால் மொத்தம் நான்கு ஆங்கில நூல்களே பார்வைக்குக் கிடைத்தன. சமணப் பின்புலத்தில் திருவள்ளுவரையும் திருக்குறளையும் விளக்கும் ஜிலீவீக்ஷீuஸ்ணீறீறீஸ்ணீக்ஷீ ணீஸீபீ பிவீs ஜிலீவீக்ஷீuளீளீuக்ஷீணீறீ (1987) என்ற நூல் பாரதிய ஞான பீட வெளியீடாகத் தில்லியில் வெளிவந்தது. வ. ஐ. சுப்பிரமணியத்தின் அறிமுகத்துடன் க. நா. சுவின் நீண்ட முன்னுரையும் உண்டு. இந் நூலில் ஏறக்குறைய 48 அதிகாரங்கள் மொழிபெயர்க்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளன. திருக்குறள் நீதி நூல், அது இலக்கியமல்ல என்று ஐம்பதுகளில் எழுதியவர் க.நா.சு. இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தை ஜிலீமீ கிஸீளீறீமீt ஷிtஷீக்ஷீஹ் (1977) என்ற தலைப்பில் பத்தாண்டுகளுக்கு முன்னரே மொழிபெயர்த்திருந்தார். தில்லி, கிரீணீனீ றிக்ஷீணீளீணீsலீணீஸீ வெளியீடான இது கதைசார்ந்த உரைநடை மொழிபெயர்ப்புதான். தமிழ்ப் பின்புலமுள்ள இவ்விரண்டு இலக்கிய நூல்கள் க. நா. சுவிடமிருந்து உருவானது ஆச்சர்யமல்ல. நீரத் சி. சௌத்ரியின் முன்னுரையுடன் மேக்மில்லன் வழியாக வெளிவந்த நூல் க. நா.சு. எழுதிய ஜிலீமீ சிணீtலீஷீறீவீநீ சிஷீனீனீuஸீவீtஹ் வீஸீ மிஸீபீவீணீ (1970). இந்தியாவில் கத்தோலிக்கச் சமூகம் பற்றிக் க. நா. சு. எழுதியிருப்பது நிச்சயம் புதிதாகத் தெரியவரும்போது ஆச்சர்யம் தரும்.

“பாரதியின் காட்சிகள் (ஒரு வசன காவியம். பாரதியாரின் கையெழுத்திலேயே முழுக்க முழுக்க ஆப்செட் முறையில் அச்சடித்து அது புதுக் கவிதையோ வசன கவிதையோ அல்ல என்று நிரூபித்து க. நா. சு. பதிப்பித்த ஆய்வுக்கட்டுரையுடன் கூடிய நூல்)” என்று பிரகாஷ் க. நா. சுவின் கட்டுரை நூல் பட்டியலில் தெரிவித்திருந்தார். பாரதியின் கையெழுத்திலான நூல் என்ற அம்சம் ஆர்வத்தைத் தூண்டச் சிரமப்பட்டு அதைத் தேடிப்பிடித்தால் அந்நூல் அவர் சொன்ன முறையில் உருவாகவில்லை என்று தெரிந்தது.பட வேண்டிய சிரமம் எல்லாம்பட்ட பிறகு சலபதியிடம் பேச்சுவாக்கில் அலைந்ததைப் பற்றிச் சொல்ல நேர்ந்தது. அவரும் அதே நோக்கில் சில ஆண்டுகளுக்கு முன்பே அலைந்து திரிந்து ஏமாந்ததைச் சொன்னார். பிரகாஷ் புத்தகத்தைப் படித்துவிட்டு இப்படித் தேடி வேறு யாரும் ஏமாறாமல் இருக்கவே இதை இங்கே சொல்லிவைக்கிறேன்.

பாரதியின் காட்சி, ஙிலீணீக்ஷீணீtலீவீ திக்ஷீமீமீ க்ஷிமீக்ஷீsமீ ணிஜ்ஜீமீக்ஷீவீனீமீஸீt (சிக்ஷீவீtவீநீவீsனீ & ஜிக்ஷீணீஸீsறீணீtவீஷீஸீ வீஸீ ணிஸீரீறீவீsலீ) (1989) என்பது அந்நூல் பெயர். 11 இயல்களைக் கொண்ட அத்தமிழ் நூலின் கடைசி மூன்று இயல்கள் மட்டும் ஆங்கிலம். பாரதியின் காட்சி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பிரகாஷ் குறிப்பிடும் வகையிலான கட்டுரை ஒன்பதாவது இயல். நூல் முன்னுரையில் அந்நூலின் பதிப்பாசிரியர் தெரிவிப்பது பின்வருவது.

“பாரதி தான் கைப்பட எழுதிய வசன கவிதைக் கையேட்டைச் சென்னைக்கு நேரில் சென்று சென்னை அருங்காட்சியக இயக்குநர் திரு. ஹரிநாராயணன் அவர்களை நேரில் சந்தித்து நிழற்படப்படி எடுத்து வந்தார்கள் [க. நா. சுப்ரமண்யம்]. அவர்கள் கொண்டுவந்த பாரதியின் சொந்தக் கையெழுத்து ஏடே அவர்தம் ஆராய்ச்சிக்குப் பொருளாயிற்று . . . பாரதியின் காட்சி அதிலிருந்து உருவானதுதான்.”

புனைபெயர்

நான் பார்த்தவரை க. நா. சு. அநேகமாக எல்லா உரைநடை நூல்களையும் சொந்தப் பெயரில் வெளியிட்டுள்ளார் என்று சொல்லலாம். மயன் என்ற பெயரில் கவிதைகளை அவர் எழுதிவந்தது பிரசித்தம். பத்திரிகைகளில் எழுதும்போது புனைபெயரைப் பயன்படுத்தியிருக்கலாம். நசிகேதன் என்ற பெயர் அவற்றுள் ஒன்று. சரஸ்வதியில் க. நா. சுவை விமர்சித்து வந்த ஒரு கட்டுரையில் மணிவாசகன் என்பவர் வேறொரு நோக்கில் குறிப்பிட்ட ஒரு தொடரில் சில புனைபெயர்கள் விவரம் பதிவாகியிருக்கிறது.

“சொல்நயமோ பொருள் நயமோ இல்லாத அம்மாமித் தமிழில் ‘ஆண்டாள்’ முதல் ‘ராஜா’ வரையில் ஓராயிரம் பெயர்களில் கதைகள் வெளியிட்டு வந்ததைத் தவிர - இவர் செய்த இலக்கியத் தொண்டு தான் என்ன?” (சரஸ்வதி, இதழ் 7, மலர் 3). அந்த மணிவாசகன் யார் என்று தெரியவில்லை.

பயணப்பிரியர்

ஹோட்டல் உணவின் ருசியில் மயங்கிக் கிடந்த க. நா. சுவின் வாழ்க்கை பயணங்களால் நிறைந்தது. நெற்பயிரைப் போல இரண்டிடங்களும் மரத்தைப் போல ஓரிடமுமாக வாழ்க்கையை முடித்துக்கொண்டவர் அல்ல அவர். காற்றைப் போலச் சுழன்றுகொண்டே இருந்திருக்கிறார். சாத்தனூரை விட்டுச் சென்னைக்கு ரயிலேறிய க. நா. சு. பயணத்திற்கு அஞ்சவில்லை. சிதம்பரம், சென்னை உள்ளிட்ட தமிழக நகர வாழ்க்கை 1965 வரை, 20 வருடம் தில்லி வாழ்க்கை (1965 - 85), மூன்றாண்டு புதுவை உள்ளிட்ட சென்னை வாழ்க்கை (1985-88). இறுதியில் தில்லிக்குச் சென்று நிகம்பூ மயானம் வழியாகப் போய்ச்சேர்ந்தார்.

சென்னை, தில்லி என்று நிரந்தர வசிப்பிடங்களை வைத்துக்கொண்டிருந்தாலும் இந்தியா முழுக்க, உலகின் பல பகுதிகளிலும் சுற்றிப் பலப் பல மாதங்கள் தங்கி வாழ்ந்திருக்கிறார். சில மாதங்கள் திருவனந்தபுரத்தில் ராஜாராவுடன் ஒரு சாமியாரைச் சந்தித்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறார். நாகர்கோவிலுக்குப் போய் ஓரிரு மாதம் இருந்திருக்கிறார் - அப்போதுதான் சுந்தர ராமசாமியை வழிமாற்றிவிட்டது.

க. நா. சு. நாகர்கோவிலில் வாழ்ந்ததை சு. ரா. தன் நினைவோடையில் சொல்லியிருக்கிறார். வேறு பல ஊர்களில் தங்கியதைக் க. நா. சுவின் முன்னுரைகள் சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஆடரங்கு முன்னுரை தாம்பரத்திலிருந்து (12 ஏப்ரல் 1955) எழுதப்பட்டிருக்கிறது. முதல் ஐந்து தமிழ்நாவல்கள், ஆட்கொல்லி, படித்திருக்கிறீர்களா ஆகியவற்றின் முன்னுரைகள் திருவனந்தபுரத்தில் (1959) உருவாகியுள்ளன. தில்லியில் கலை நுட்பங்கள் முன்னுரையும், மைசூரில் பித்தப்பூவுக்கான முன்னுரையும் தயாராகியுள்ளன. நல்லவர் முன்னுரை மதுரையிலிருந்து எழுதப்பட்டது. சர்மாவின் உயில் தயாரானது சிதம்பரத்தில்.

க. நா. சு. சொல்கிறார் ஒரு கதையில் . . . “என் பிரயாணங்களில் என் அறிவு விசாலித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனியாக ஒவ்வொரு நாற்றம் வீசுகிறது. தஞ்சாவூருக்கென்று பிரத்தியேகமான ஒரு நாற்றம். கும்பகோணத்திற்கென்று ஒரு பிரத்தியேகமான நாற்றம். மன்னார்குடிக்கென்று ஒரு பிரத்தியேகமான நாற்றம். திருவட்டீசுவரன் பேட்டைக்கென்று பிரத்தியேகமான நாற்றம். திருவனந்தபுரத்துக்கென்று ஒரு பிரத்தியேகமான நாற்றம், மதுரைக்குத் தனியாக ஒரு நாற்றம் உண்டென்பதை நான் திருப்பரங்குன்றம் பஸ்ஸில் போய்கொண்டிருக்கும்போது உணர்ந்து கொண்டேன்” (ரெட்டைப் பிள்ளையார், சரஸ்வதி, ஜூன் 1958).

க. நா. சுவின் காணிக்கைகள்

க. நா. சு. தனது நூல்களைக் காணிக்கையாக்கியிருக்கிற விதம் அவரது நம்பிக்கைகளைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.

பொய்த்தேவு (1946) நாவலுக்குச் சிதம்பரத்திலிருந்து, விய ஆண்டு விஜயதசமி அன்று எழுதிய சமர்ப் பணம் கடவுளுடன் தொடர்புடையது.

“இந்தப் புஸ்தகத்தை நான் எழுதத் தொடங்கிய காலத்தில் முணுக்கு முணுக்கென்று ஒரே விளக்கு. அதிக வெளிச்சம் தராமல் எரியும் கர்ப்ப கிருஹத்திலிருந்துகொண்டு என் காரியங்களில் குறுக்கிடாமல், என் வீட்டு வாசலில் இருந்தபடியே கவனித்து வந்த சிதம்பரம் செங்கழுநீர்ப் பிள்ளையாருக்கு இப்புத்தகத்தைச் சமர்ப்பணம் செய்கிறேன்.”

தொந்தரவு தராத பிள்ளையாருக்கு நாவலை அர்ப்பணித்த மறுமலர்ச்சி எழுத்தாளர் க. நா. சுவாகவே இருக்கலாம்.

“எங்கள் குடும்பத்தை இரண்டு தலைமுறைகளுக்கும் அதிகமாக ஒருமையை உணரச்செய்த என் தகப்பனாரின் அம்மா (பாட்டி) அக்காவின் நினைவிற்கு இதைச் சமர்ப்பிப்பது நியாயம் என்று தோன்றுகிறது” என்று தன் முதல் நாவலைப் பாட்டிக்குக் க. நா. சு. காணிக்கையாக்கினார். எல்லாவற்றுக்கும் காரணமும் நியாயமும் தேடும் க. நா. சுவின் குணம் மேற்கண்ட வரிகளிலும் வெளிப்படுகின்றன. இது ஒரு நாள் நாவலின் இரண்டாம் பதிப்பு சமர்ப்பணத்திலும் உறுதியாகிறது.

“[ஒரு நாள் நாவலின்] முதற்பதிப்பு வெளியிட்ட அ. கி. கோபாலனுக்கு இதைச் சமர்ப்பணம் செய்வது பொருந்தும் என்று எண்ணி சமர்ப்பிக்கிறேன்” மனித குல சிந்தனைகள் (1966) நூலை அப்போது காலமாகிவிட்டிருந்த முன்னாள் தினமணி ஆசிரியர் டி. எஸ். சொக்கலிங்கத்துக்குக் க. நா. சு. அர்ப்பணித்திருந்தார்.

“புது விஷயங்களையும் புதுப் போக்குகளையும் ஆதரிப்பதில் டி. எஸ். சொக்கலிங்கம் அவர்களுக்கு இருந்த ஆர்வம் தமிழர்கள் கவனத்துக்கும் பெருமைக்கும் உரியதாகும். அவர் நினைவுக்கு இந்த நூலை நான் சமர்ப்பிக்கிறேன்”

காணிக்கைகளுக்கான ஆளுமைகளைத் தேர்வதில் க. நா. சு. செலுத்திய கவனத்தை, காணிக்கை வாசகங்களிலும் செலுத்தியிருப்பதை உணரலாம். புதுமைப்பித்தன் போன்ற இலக்கியவாதிகளையும் மணிக்கொடி போன்ற இலக்கிய இதழ்களையும் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தியதில் வ. ரா., டி. எஸ். சொக்கலிங்கம் போன்றோரின் பெரும்பங்கைக் க.நா.சு. கூர்மையாக உணர்ந்திருந்தார் என்பதற்கு மேலே கண்ட சமர்ப் பணம் ஒரு சான்று. பொருத்தம் பார்க்காமல் க. நா. சு. எதையும் செய்யமாட்டாரோ! இந்நூல் டி. எஸ். சொக்கலிங்கம் நடத்திய நவசக்தியில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு என்பது இன்னொரு பொருத்தம்.

க. நா. சுவுக்குச் சாகித்திய அக்காதெமி பரிசு பெற்றுத் தந்த நூலான இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (1985) சமர்ப்பிக்கப்பட்டிருப்பது முந்நூறு வாசகர்களுக்கும் இருபது எழுத்தாளர்களுக்கும்.

“. . . இந்த நூலைத் தமிழில் இன்று இருக்கிற இருநூறு முந்நூறு நல்ல வாசகர்களுக்கும் இலக்கிய தீபத்தை மங்கவிடாமல் எண்ணெய் வார்த்து, திரிபோட்டுக் காப்பாற்றிக்கொண்டிருக்கிற பத்து இருபது பெயர் சொல்லக்கூடிய இலக்கிய ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.”

இருபது தலைவர்களும் முந்நூறு தொண்டர்களும் கொண்ட சிறு கூட்டத்தைப் பெருக்கத்தான் க. நா. சு. 100க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்தார். ‘எழுதிக்கொண்டே இருந்த க. நா. சுப்ரமண்யம் என்று க. நா. சு. பற்றிய தன் நூலுக்கு பெயர்வைத்திருக்கிறார் கி.அ.சச்சிதானந்தம்.’ பொருத்தம் தானே.

“இந்தத் தொகுதியில் உள்ள கதைகளுக்குள் வருகிற என் நண்பர்களுக்கு இதை நான் சமர்ப்பிக்கிறேன்” என்று ஆடரங்கு சிறுகதை தொகுதியைக் (1955) நண்பர்களுக்கு அர்ப்பணித்தார். க. நா. சு வின் இளம் நண்பரான சா. கந்தசாமி தன் சாயாவனம் நாவலை ‘ஸ்ரீமதி ராஜி சுப்பிரமணிய’த்துக்குச் சமர்ப்பித்திருக்கிறார் (1969). திருப்பிச் செலுத்தலோ!

க. நா. சு. (இறுதியாக?) அர்ப்பணித்த நூல் கலை நுட்பங்கள். ‘இந்த நூல் ஆர். மகாதேவனுக்கு என் அன்புடன்’ என்பது முன்னுரையின் உள்ளே கிடைக்கும் ஒரு சமர்ப்பணவரி.

அழகி (1944) க. நா. சுவின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி. அல்லயன்ஸ் வெளியிட்ட தமிழ்நாட்டுச் சிறுகதைகள் வரிசையில் 10ஆவதாக இடம்பெற்றது. அந்நூலைப் புதுமைப்பித்தனுக்கு அன்பளிப்பாக அளித்ததைக் க. நா. சு. பின்னாளில் நினைவு கூர்ந்துள்ளார்.

“என் முதல் கதைத் தொகுப்பான அழகி வெளிவந்ததும் குருவினிடமிருந்து சிஷ்யனுக்கா, சிஷ்யனிடமிருந்து குருவுக்கா? என்று கேட்டுக் கையெழுத்திட்டு அவரிடம் [புதுமைப்பித்தனிடம்] ஒரு பிரதியைக் கொடுத்தேன். அந்தப் பக்கத்தைக் கிழித்தெறிந்துவிட்டுப் புத்தகத்தை வைத்துக்கொண்டார்” ( புதுமையும் பித்தமும், ப.25).

அந்தக் குறிப்பிட்ட பக்கத்தைப் புதுமைப்பித்தன் கிழித்தெறியவில்லை. அதை அப்படியேதான் வைத்திருந்தார். அந்நூல் புதுமைப்பித்தன் சேகரத்திலிருந்து சலபதிக்குக் கிடைத்து, அதைக் காலச்சுவடு புதுமையும் பித்தமும் நூலில் (2006) நகலெடுத்து வெளியிட்டும் உள்ளது. க.நா.சுவின் கையெழுத்து படிக்கும்படி நன்றாக உள்ளது. அவர் சொல்வதுபோல அழகி முதல் சிறுகதைத் தொகுப்பாகவும் தெரியவில்லை. தெய்வ ஜனனம் ஜூன் 1943இல் ஜோதி நிலைய வெளியீடாக அதற்கு முன்பே வெளிவந்துவிட்டிருந்தது.

க. நா. சுவின் புத்தகங்கள் பற்றிய இக்குறிப்பைப் படிப்போர் பெட்டிச் செய்தியில் இருக்கும் நூற்பட்டியலில் இல்லாத நூல் பற்றித் தெரிந்திருந்தால் விவரத்தைக் காலச்சுவடுக்கு அனுப்பிவைக்கலாம். அது ஆய்வாளருக்குப் பயன்படும்.

க. நா. சு புத்தகப்பட்டியல்

க. நா. சுவின் புத்தகப் பட்டியலைத் தயாரிக்க முனைந்த எனக்கு அது அவ்வளவு சுலபமல்ல என்று உடனே தெரிந்துவிட்டது. குறிப்பிட்ட ஒரு பதிப்பகம் அல்லது சில பதிப்பகங்களில் மட்டும் அவரது நூல்கள் வெளியாகவில்லை. வெளியீட்டில் எந்த முறைமையையும் காண முடியவில்லை. எந்த ஒரு நூலகத்திலும் தனி நபரிடத்திலும் உறவினர்கள் உட்பட அவரது நூல்கள் முழுமையாக எங்கும் இல்லை. சு. ரா. நினைவு நூலகம் நாகர்கோவில், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சென்னை, பெரம்பூர் நண்பர் லட்சுமிபதி, மற்ற நண்பர்களின் சிறுசேகரங்கள் ஆகியவற்றிலிருந்து இப்பட்டியல் உருவாகியிருக்கிறது. புத்தக விளம்பரங்கள், மதிப்புரைகள், போன்றவையும் பயன்பட்டன. இது முன்பட்டியல், முழுமையாக்கப்பட வேண்டியது.

நாவல்

அசுரகணம் (1959)

அவதூதர் (1988)

அவரவர் பாடு (1963)

ஆட்கொல்லி (1957)

ஆயுள் தண்டனை

ஏழுபேர் (1946)

ஏழுமலை

ஒரு நாள் (1946)

கந்தர்வ லோகத்தில் கொலை

கருகாத மொட்டு (1966)

கோதை சிரித்தாள் (1986)

கோபுர வாசல்

சக்தி விலாசம்

சத்யாகிரஹி

சமூகச் சித்திரம் (1953)

சர்மாவின் உயில் (1948)

தந்தையும் மகளும்

தாமஸ் வந்தார் (1988)

நடுத்தெரு

நளினி (1959)

நான்கு நாவல்கள் (1955)

பசி (1943)

பட்டணத்து வாழ்வு (1961)

பித்தப்பூ (1987)

புழுதித் தேர்

பெரிய மனிதன் (1959)

பொய்த்தேவு (1966)

மாதவி (1959)

மூன்று நாவல்கள் (1985)

வாழ்ந்தவர் கெட்டால் (1951)

வாழ்வும் தாழ்வும்

அச்சில் வராதவை:

திருவாலங்காடு, மால்தேடி, வக்கீல் ஐயா, ஜாதிமுத்து, சாலிவாஹணன், சாத்தனூர்

சிறுகதை

அழகி முதலிய கதைகள் (1944)

ஆடரங்கு (1955)

இரண்டு பெண்கள் (1965)

க.நா.சு கதைகள் மி, மிமி, மிமிமி (1988)

சாவித்திரி சிறுகதை

சுந்தா பாட்டி சொன்னாள்

தீ! தீ கதைகள்

தெய்வ ஜனனம் (1943)

நாயக்கர் தஞ்சை கதைகள்

பதினேழு கதைகள்

மணிக்கூண்டு (1961)

மராட்டியர் தஞ்சை கதைகள்

கவிதை

க.நா.சு கவிதைகள் (1986)

புதுக் கவிதைகள் (1989)

மயன் கவிதைகள் (1977)

நாடகம்

ஊதாரி (1961)

ஏழு நாடகங்கள் (1944)

கலியாணி

நல்லவர் (1957)

பேரன்பு, கவிதைநாடகம்

மஞ்சளும் நீலமும்

வாழாவெட்டி

விமர்சனக் கட்டுரை

இந்திய இலக்கியம் (1984)

இந்திய மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள் (2002)

இலக்கிய வளர்ச்சி க.நா.சு பார்வையில் (1986)

இலக்கிய விசாரம் (ஒரு சம்பாஷணை) (1959)

இலக்கியச் சாதனையாளர்கள் (1985)

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (1984)

உலக இலக்கியம் (1989)

உலகத்தின் சிறந்த நாவல்கள் (1960)

கலை நுட்பங்கள் (1988)

கவி ரவீந்திரநாத தாகுர் (1941)

சிறந்த பத்து இந்திய நாவல்கள் (1985)

தமிழ் இலக்கிய விமர்சகர்கள் (1979)

படித்திருக்கிறீர்களா? (1957)

புகழ்பெற்ற நாவல்கள் (1955) (இரண்டு தொகுதிகள்)

புதுமையும் பித்தமும் (2006)

மனித குல சிந்தனைகள் (1966)

மனித சிந்தனை வளம் (1988)

முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (1957)

விமரிசனக் கலை (1959)

மொழிபெயர்ப்பு

அன்பு வழி - ஸ்வீடிஷ் - பேர்லாகர் க்விஸட் (1956)

ஆல்பர்ட் ஷ்வைட்ஸரின் சுயசரிதம் (1958)

உலகின் சிறந்த நாவல்கள் (1959)

எளிய வாழ்க்கை - ஹென்றி டேவிட் தேபரோ (1956)

ஐரோப்பியச் சிறுகதைகள் (1987)

குடியானவர்கள் - போலந்து

தாசியும் தபசியும் - பிரெஞ்சு

நல்ல நிலம் - கெரோல்

நிலவளம் - நார்வேஜியன் - நட்ஹாம்சன்

மதகுரு - போலந்து

மிருகங்கள் பண்ணை - ஜேம்ஸ் ஆர்வெல் - (1956)

விருந்தாளி - பிரெஞ்சு- ஆல்பெர் காம்யூ

ஆங்கில நூல்

Contemporary Indian Short Stories (Ed.) (1977)

Contemporary Tamil Short Stories (1978)

Generations (Novel) - Neela Padmanaban (1972)

Movements for Literature

Sons of the Sun (Novel) - Sa.Kandasamy (2007)

The Anklet Story (1977)

The Catholic Community in India (1970)

Thiruvalluvar and His Thirukkural (1989)

பாரதியின் காட்சி (1989)

******

நன்றி: காலச்சுவடு – இதழ் 144

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்