Jan 29, 2012

தாயாரின் திருப்தி-கு.ப.ரா

பங்குனி மாஸத்து வெய்யில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சி கால வேட்கை மிகுதியால் உலகமே மயங்கியிருந்தது. காக்கை கூட வாயைத்திறந்துகொண்டு மௌனமாக உட்கார்ந்திருந்தன. நாய்கள் மட்டும் எச்சில் இலைகளுக்காக பிரமாதமாக ரகளை செய்துகொண்டிருந்தன. பிராமணர்கள் துடித்துக்கொண்டு நடந்துவந்து சோ்ந்தார்கள்

புரோஹிதர் கண்ணை மூடிக்கொண்டு மந்திரங்களை அர்த்தமில்லாமல் ஓட்டினார். “பிராசீநவிதி“kupara4 “பவித்ரம் த்ருத்வா“ என்பவைகளையும் மந்திரத்துடன் சேர்த்து ஒரு ராகத்தில் பாடிக்கொண்டே போனார். பிராமணர்களுக்கு வஸ்திரம் கும்பம் தட்சிணை இவைகள் கொடுக்கப்பட்டு சாப்பிட உட்கார்ந்தார்கள்.

சுந்ரரேசய்யரின் தாயாருக்கு அன்று சிரார்த்தம். அவர் நாஸ்திகருமல்ல ஆஸ்திரகருமல்ல. தென்னிந்திய ஆங்கிலம் படித்த பிராமணர்களின் திரிசங்கு கூட்டத்தைச் சேர்ந்தவர்.ஸ்நான சந்தியா வந்தருதிகள் விதிப்படி நடக்கவில்லை. ஆனால் தர்ப்பணமும் ஸ்ரார்தமும் மட்டும் தவறாமல் நடைபெறும்.அந்த தினங்களில் மட்டும் விபூதி பஞ்சகச்சம் இவைகள் பவித்திரத்தை சந்திக்கும். சுந்தரேசய்யரின் பஜனை ஒன்றும் விளங்கும். அவர் அதில் அசாத்திய மோகம் கொண்டவர். ராம சங்கீர்த்தனத்தில் உருகிக் கண்ணீர் விடுவார்.அதற்காக ஊரில் அவரை கொஞ்சம் கேலி கூடசெய்கிறதுண்டு. ஆனால் ஆடிமாத்தத்தில் வெகு சாதுவான பிரகிருதி. பிச்சைக்கராரனென்றாலும் ஏதாவது கொடுக்காமல் அனுப்ப மாட்டார்ஃ அதிலும் கூன் குருடென்றார் அரை, கால் என்று கொடுத்து விடுவார். இதற்காக அவரைப் பற்றி ஊரில் உலகம் தெரியாதவரென்றும் கொஞ்சம் “கிறுக்கு“ மநுஷ்யனென்றும் பேசிக்கொள்வதுண்டு.

பிராமணர்கள் சாப்பாடு முடிந்து பிண்டப்பிரதானமும் ஆய்விட்டது. பிராமணர்கள் ”திருப்தி” சொல்ல வேண்டிய கட்டம். சுந்தரேசய்யர் மூன்று வயதுக் குழந்தை வாசலில் விளையாடிக்கொண்டிருந்தவன் உள்ளே ஓடி வந்து ”அப்பா வாசல்லே பாட்டி வந்திருக்கா. சாதம் வேணுமாம்” என்றான்.

”பாட்டி வந்திருக்காளா? அதார்ரா?” என்று கேட்டுக்கொண்டே சுந்தரேசய்யர் வாசலில் போய்ப் பார்த்தார்.

வாசற்படியில் கையில் தடியும் தரகரக் குவளையுமுள்ள ஒரு குறக்கிழவி சாய்ந்து கொண்டிருந்தாள்.

அந்தத் தவிப்பைப் பார்த்த சுந்தரேசய்யர் மனதில் திடீரென்று ஏதோ ஓர் எண்ணம் ஏற்பட்டது. ஜாதியாசாரம் என்று சொல்லப்படும் மூடபக்தியை மனிதனின் ஸ்வபாவ குணமான இரக்கம் ஒரேயடியில் வென்றுவிட்டது. ஒரு நிமிஷத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதையும் தீர்மானித்து. அதற்கு மதநம்பிக்கைக்கு ஏற்ற சமாதானத்தையும் கொண்டார்.

சட்டென்று உள்ளே சென்று ஒரு பிண்டத்தையும் தன் தீர்த்த கலசத்தையும் எடுத்துககொண்டு வாசலில் வந்து உருண்டையைக் கரைத்துக் கிழவியின் குவளையில் ”பிடி” என்று ஊற்றினார். அதை மடமடவென்று குடித்துவிட்டு கிழவி ”அப்பாடா. உசிர் வந்திச்சு! மகாராசா நீ நல்லா இருக்கணும். உன்னைப் பெத்த வயிறு என் வயிரைப் போலே குளிரணும்” என்று சொல்லி சிரமம் மேலிட்டு படியில் சாய்ந்துவிட்டாள்.

”என்ன..என்ன!” என்று ஓடி வந்த பிராமணர்கள் இதைப் பார்த்துத் திகைத்துப் போய் ”அடாடாடா..என்ன அபசாரம்! சிரார்த்தம நஷ்டமாய் விட்டதே! என்ன அக்ரமம்! யார் இப்படி சிரார்த்தம் செய்யச் சொன்னார்கள்!” என்றார்கள்.

”ஏன்?” என்றார் சுந்தரேசய்யர்.

”வாயசத்துக்குக் கூட இன்னும பிண்டம் வைக்கவில்லை. பித்ருக்கள் காக்கையாக வந்து காத்திருப்பார்களே! ”

”மனித ரூபத்துடன் வந்து என் தாயார் இதோ திருப்தியடைந்து விட்டாளே! காக்கையைக் காட்டிலும் மனித ஜன்மம் மேலல்லவா?”

”உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. உம். இனிமேல் இங்கே ஜலபானம் செய்யக்கூடாது. ஓய் சாஸ்திரிகளே தாம்பூலத்தை இங்கேயே எறிந்து விடும்” என்று சொல்லி பிராமணர்கள் வஸ்திரம் கும்பம் தட்சிணைகளை கைபடாமல் எடுத்துக்கொண்டு கீழே கால்வைத்துக்கூட நடக்காமல் சென்றார்கள்.

”ஐயோ. இதென்ன இப்படிச் செய்து விட்டீர்களே!” என்று கவலையோடு மனைவி வெளியே வந்தாள்.

”என்னடி அசடு! வாசலில் பார் அம்மா உருவெடுத்து வந்திருப்பதை!”

***

குபரா முத்திரைக் கதைகள் -  செல்லப்பா பதிப்பகம் முதற்பதிப்பு டிசம்பர் 2003

தட்டச்சு உதவி: ரமேஷ் கல்யாண்

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

2 கருத்துகள்:

முனைவர் ச.இரமேஷ் on May 21, 2013 at 10:45 AM said...

சாதி உணர்வை விட மனித நேயம் உயர்ந்தது என்பதை எவ்வளவு அழகாய்ச் சொல்லி விட்டார்-குபரா.ஆசாரத்தைக்கூட அன்பு இருந்தால் அறமாக்கிவிடலாம் என்பதை இதன்மூலம் உணரலாம்.

முனைவர் ச.இரமேஷ் on May 21, 2013 at 10:47 AM said...

சாதி உணர்வை விட மனித நேயம் உயர்ந்தது என்பதை எவ்வளவு அழகாய்ச் சொல்லி விட்டார்-குபரா.ஆசாரத்தைக்கூட அன்பு இருந்தால் அறமாக்கிவிடலாம் என்பதை இதன்மூலம் உணரலாம்.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்