Aug 19, 2010

வெள்ளி விழா - ந.பிச்சமூர்த்தி

வெள்ளி விழா

சுதந்திர தின வெள்ளி விழாவுக்கு
மெரினாவில்
காந்தி சிலைமுதல் na_pitchamurthy
விவேகானந்தர் சிலைவரை
சவுக்கு முளை அடித்து
குறுக்குக் கழிகட்டி
வேடிக்கை பார்க்கவரும் வெள்ளம்
அணிவகுப்பை அழிக்காமல் 
வெற்றிக்கு வித்திட்ட கண்டிராக்டர்
மறுநாள் கணக்குப் பார்த்தார்
நல்ல ஆதாயம்.
மக்கள் கணக்குப் பார்த்தார்.
விழாதான் ஆதாயம்
காலைக் கருக்கிருட்டில்
சுள்ளி பொருக்க வந்த கிழவிக்கு
சவுக்கைப் பட்டைகளை
உரித்தெடுத்துக் கொண்டபோது
ஆளரவம் கேட்டதனால்
ஆதாயம் குறைப் பிரசவம்

கொக்கு

படிகக் குளத்தோரம்
கொக்கு.
செங்கால் நெடுக்கு.
வெண்பட்டுடம்புக்
குறுக்கு
முடியில் நீரை நோக்கும்
மஞ்சள் கட்டாரி மூக்கு.

உண்டுண்டு
அழகுக் கண்காட்சிக்
கட்டாயக் கட்டணம்
சிலவேளை மீனும்
பலவேளை நிழலும்...

வாழ்வும் குளம்
செயலும் கலை
நாமும் கொக்கு.
சிலவேளை மீனழகு
பலவேளை நிழலகா?
எதுவாயினென்ன?
தவறாது குளப்பரப்பில்
நம்மழகு _
தெரிவதே போதாதா?

லீலை

மண்ணில் பிறந்தால்
வானேற ஆசை,
காலோடிருந்தால்
பறப்பதற்காசை,
வானாயிருந்தால்,
பூமிக்கு வேட்கை,
கொண்டலாயிருந்தால்
மழையாகும் ஆசை.
மின்னாயிருந்தால்
எருக்குழிக்காசை.
எருக்குழியானால்
மலராகும் பித்து
இரும்பாயிருந்தால்
காந்தத்திற்காசை
துரும்பாயிருந்தால்
நெருப்புக்காசை
தனியாயிருந்தால்
வீட்டுக்கு ஆசை.
வீட்டோடிருந்தால்
கைவல்யத்திற்காசை
நானாயிருந்தால் நீயாகும் ஆசை.
உனக்கோ?
உலகாகும் ஆசை.

விஞ்ஞானி

கடவுளால் என்ன முடியும்?
புல்லைச் செய்வார்.
மேயவென்று மாட்டைச் செய்வார்
பொங்கும் நுரைப்
பாலைச் செய்வார்.
ஊட்டவென்று கன்றைச் செய்வார்.
மண்ணென்ற ஒன்றைத் தருவார்.
வளர்ந்திடும் ஏக்கம் தருவார்.
வானத்தினிடையே வீணில்
ஒளியினைக் கொட்டும் கோள்கள்
மந்தையை ஓட்டிச் செல்வார்.
கோடையெனும் பெரிய அன்பின்
மடைகளைப் பிடுங்கி வைப்பார்...
நாமன்றி கடவுளேது?
நாமவர்க் கிளைப்பதேது?
புல்லுக்குப் போட்டியாக
மண்டும் கிருமி குண்டைச் செய்வோம்
மாட்டுக்குக் கன்றைக் காட்டி
பாலினைச் சுரக்கச் செய்யும்
மடமையை,
கலையின் குறைவை
காட்டுவதற்காக வென்றே
வைக்கோலும் தோலும் ஆன
தந்திரம் ஒன்றைச் செய்வோம்,
பாலை யாம் வரவழைப்போம்;
உழைப்புக்கு ஓய்வை அளிக்கும்
உணவு சத்துக்கள் செய்வோம்.
ஆண் பெண்ணின் கல்வியின்றி
உயிரை உற்பத்தி செய்யும்
உயிரியல் மர்மம் தேடி
உழைக்கின்றோம்.
வெற்றி காண்போம்.
நோக்கின்றி சாட்டையின்றி
தானாக விரையும் கிரகமாம்
சந்திரன், செவ்வாய், சுக்ரன்
மீதினில் குதிரை ஏறி
தளங்களை அமைத்துவிடுவோம்.
அருளெனும் ஜாலவித்தை
செலாவணி ஆகாதய்யா.
மடமையால் உலகைச் செய்தால்,
அறிவினால் களைதல் தவறா?

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

கொழந்த on August 19, 2010 at 12:47 PM said...

சார்..
இத்தனை எழுத்துக்களையும் எங்கேயிருந்து சேகரித்தீர்கள்..கடுமையான உழைப்பு இருந்தால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய விஷயமாயிற்றே. இந்த வலைப்பூ ஆரம்பித்த பின்னணியைப் பற்றி உங்களிடத்தில் ஏதேனும் பதிவு உள்ளதா? இல்லையென்றால்-விருப்பமிருந்தால் அதைப்பற்றியே ஒரு பதிவு போடலாமே? மிக்க நன்றி

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்