May 27, 2010

சருகுத் தோட்டம்-விக்ரமாதித்யன்

முன்னொருகாலத்தில் அரசன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் அரண்மனையில் ஒரு பெரிய தோட்டம் போட்டிருந்தான். தோட்டக்காரர்களை அமர்த்திப் பூஞ்செடிகள், மலர்க்கொடிகளெல்லாம் நட்டு வளர்த்திருந்தான். பழமரங்கள் நிறைய வைத்திருந்தான். தனது தோட்டத்தைப்பற்றி அவன் மிகவும் பெருமை கொண்டிருந்தான்.

vikramathithyan-2 அரண்மனைக்கு யார்வந்தாலும் முதலில் அவர்கலைத் தோட்டத்துக்குத்தான் கூட்டிக்கொண்டு போய்க் காண்பிப்பான். அது அவனுக்கு சந்தோஷமான காரியம்.

ஒரு நாள் சாது ஒருவர் அரண்மனைக்கு வந்திருந்தார். அரசன் அவரை அன்புடன் வரவேற்று உபசாரம் செய்தான். தோட்டத்தை வந்து பார்க்கும்படி அழைத்தான்.

அந்த சாது தோட்டத்தைப் பார்த்துக்கொண்டே வந்தார். முகம் இறுக்கமானதுபோல இருந்தது. ஒன்றும் சொல்லவில்லை. விறுவிறுவென்று வெளியேறிப் போய்க் கொண்டிருந்த்தார். அரசன் அவர் பின்னாலேயே வந்து கேட்டான்.

'தோட்டம் எப்படியிருக்கிறது சுவாமிகளே ? '.

சாது மெளனமாக இருந்தார்.

'சொல்லுங்கள் சுவாமி ? '.

மறுபடியும் விசாரித்தான் மன்னன்.

அவர் சொன்னார்:

'நன்றாகத்தான் இருக்கிறது உன் தோட்டம். இப்படி ஒரு தோட்டத்தை என் ஆயுசுக்கும் பார்த்ததில்லை போ. இது என்ன தோட்டம். இலைகளும் சருகுகளும் குப்பையும் செத்தையும் இல்லாத தோட்டம் ? தோட்டமென்றால் இவை இல்லாமலா ? நீ பாட்டுக்கு வேலையாள்களுக்கு உத்தரவிட்டுக் கூட்டிப் பெருக்கித் துப்புரவாக வைத்திருக்கிறாய். அரங்கு போல அல்லவா இருக்கிறது. தோடாம் மாதிரியே இல்லையே. தோட்டத்தைத் தோட்டமாக வைத்திரு. முதலில் அதைத் தெரிந்துகொள். '

வேகமாக நடந்து வெளியே போயே போய்விட்டார்.

ஒரு வாரம் பத்து நாள் கழிந்தது. அரசன் தோட்டத்தை வந்து பார்த்தான். சாதுவைத் தேடிப்பிடித்துத் தாங்கித் தடுக்கி அழைத்துக்கொண்டு வந்து காட்டினான்.

'நல்லது .... நல்லது. சந்தோஷம். இதுதான் தோட்டம். இப்போதுதான் தோட்டமாக இருக்கிறது. இப்படித்தான் இருக்க வேண்டும். தோட்டமென்ன அரண்மனையா, இல்லை தர்பார் மண்டபமா ? சாதாரணமாக இருக்க வேண்டாம் ? '

'தோட்டமென்றால் அணில்பிள்ளைகள் லாந்தவேண்டும். குயில்கள் பாடிகொண்டிருக்கவேண்டும். நாகணவாய்ப்புள்கள் கத்திக் கொண்டிருக்க வேண்டும். தேனீக்கள் இரைச்சலிட்டுக் கொண்டிருக்கவேண்டும். மரங்கொத்திகள் டக்குடக்கென்ற சத்தம் கேட்டுகொண்டிருக்கவேண்டும். சிள்வண்டுகளின் ஓசை இருந்து கொண்டிருக்கவேண்டும். எஙேயாவது ஒரு மூலையில் பாம்புகூட கண்ணில்பட வேண்டும். இவ்வளவுமிருந்தால்தான் தோட்டம். இலைகளும் சருகுகளும் குப்பைகளும் செத்தைகளும் இல்லாது போனால் ஜீவராசிகள் எப்படி வந்து அண்டும் ? இயற்கையாக இருப்பதுதான் தோட்டம். படைகளின் ஒழுங்கும் கச்சிதமும் தோட்டத்துக்கு வேண்டாம். உன் தோட்டம் என்றென்றும் இயற்கையாக இருப்பதாக. இயற்கையோடு இருப்பதாக. இயற்கை வளம் கொழிப்பதாக. உனக்கு என் நல்லாசிகள்.. வருகிறேன் '

மகிழ்ச்சி பொங்க திரும்பிப் போனார் சாது.

**************

நமது தமிழ்க்கவிதை இரண்டாயிரம் ஆண்டு நீண்ட நெடிய மரபு உடையது. இதில் சங்க இலக்கியம்தான் பெரிய சிகரம். அடுத்து காவியங்கள். பிறகு தேவார திருவாசகமும் பாசுரங்களும். அப்புறம் சிற்றிலக்கியம். இவற்றின் தொடர்ச்சியாகத் தனிப்பாடல்கள், பாரதி.

உணர்வுத் தெறிப்புகளும் அனுபவவீச்சுகளுமாகச் சங்கக் கவிதைகள். கதையும் கருத்துமாக காவியங்கள். பண்ணோடு இசைந்த பாடல்களாக பக்தி இலக்கியம். பரணி, தூது, பள்ளு, குறவஞ்சி, உலா, கோவை, கலம்பகம், பிள்ளைத்தமிழ் என்றெல்லாம் பிரபந்தங்கள். வாழ்வின் சகல விஷ்யங்களையும் எழுதலாம் என்று நம்பிக்கைதரும் தனிப்பாடல்கள். இந்த மரபின் செழுமையை உள்வாங்கிக் கொண்ட பாரதியின் எளிய ஆனால் தனிச்சிறப்பு வாய்ந்த இசைப்பாடல்கள். மொழி தோன்றி ஒரு புலவன் எழுத வந்த இத்தனைகாலத்தில் இவ்வளவும். தமிழனின் எழுத்துவடுவப் பண்பாட்டுக் கொடை.

எனில் தமிழ்க்கவிதை தத்துவம் பேசுவதில்லை. வேதாந்தவிசாரம் செய்வதில்லை. காலம் வெளியென்றெல்லாம் கருத்துக் கொள்வதில்லை. கருத்தாக்கங்கள் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. வாழ்வையே பேசுகிறது. வாழ்வின் சாரம்சத்திலேயே திளைக்கிறது. அனுபவங்களையே முன் வைக்கிறது. உணர்வுகளையே வெளிபடுத்துகிறது.

கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடல் மட்டுமே விதி விலக்காக தத்துவப்பாங்கு கொண்டிருக்கிறது. சைவசித்தாந்தத்தை விளக்கும் திருமந்திரம் அடிப்படையில் அறிவுவழிப்பட்டதாக இருப்பதனாலேயே அத்தகைய இயல்பு கொண்டிருக்கிறது. சித்தர் பாடல்களின் அடிநாதம் சைவசித்தாந்தம் என்பதோடு, அவற்றிலுள்ள வேகமிக்க வரிகள் மிகுந்த உணர்வுச் செறிவுள்ளவை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். திருவாசகத்தில் பெரிதும் அறிவுப்பாங்கான வரிகளோடு பக்திப்பரவசமான கவிதைகளும் உண்டு. திருக்குறள் அறநூல். அது அறிவுவழிப்பட்டது போல் அமைந்திருப்பது இயல்பேயாகும். இவைதவிர, தமிழ்க்கவிதை முற்றமுழுக்க உணர்வு நிலைப்பட்டதே.

முதல் தமிழ்க்கவிஞனிலிருந்து பாரதி வரை கவிதை மனசு சம்பந்தப்பட்டதென்றே எண்ணம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அனுபவங்களும் உணர்வுகளும் மட்டுமே கவிதையாகும் என்று ஓர்மை கொண்டிருந்திருக்கிறார்கள். கவிதையென்ற நுட்பமான ஊடகத்தில் வாழ்வைத்தான் சொல்ல முடியும் என்று கண்டுகொண்டிருக்கிறார்கள். வாழ்வைத்தான் சொல்லவேண்டும் என்று மனம் கொண்டிருந்தார்கள். வாழ்வு எனுபவங்களாலானது,உணர்வுகள் நிரம்பியது, கவிதையும் அப்படித்தான் என்று முடிவு கொண்டது தமிழ்மனம், தமிழ்மரபு, தமிழ்மண்.

சங்கப்பாடல்களை விடவா வடிவமேன்மை. யோசிக்கவே முடியாது. திருமந்திரத்தை விடவா கட்டமைப்பு. கிட்டவே போகமுடியாது. சித்தர் பாடல்களை விடவா விசாரம். நினைத்துப் பார்க்கவே முடியாது. பாடுபொருள் நல்ல வடிவத்தில் இசைந்திருப்பதே சங்கக்கவிதையின் உயர்வு, அதன் புற வடிவம் அல்ல. திரு மந்திரத்தின் கட்டமைப்புக்கு அதன் உள்ளீடு ஒரு முக்கிய காரணம்.

....

வேண்டாத அளவுக்கு நெருங்கமுடியாதபடிக்கு தமிழ்க்கவிதை எந்தகாலத்திலும் இறுக்கம் பண்ணிக்கொண்டதேயில்லை. அப்படி இறுக்கம் கொண்டிருக்குமெனில் அது எப்போதோ அழிந்துபட்டிருக்கும். சங்கக்கவிதைகளில் சிலபலவற்றில் தோன்றும் இறுக்கமும் உண்மையான இறுக்கம் அல்ல. கவிதை நுட்பம் அறிந்த மனம் செய்த மாயம் அது.

நன்றி: திண்ணை ( 1999 December 3)

******

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்