May 8, 2010

தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்-பாமா

 

 கேணி சந்திப்பு : மே 9 ஞாயிறு மாலை 3.30 மணி பேச்சாளர் : பாமா விவரங்களுக்கு இங்கே  செல்லவும். வாய்ப்பிருப்பவர்கள்  தவற விடவேண்டாம்

தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்

நீங்கள் நிறைய கெட்ட வார்த்தைகளை (வசவு) எழுதுறதா விமர்சன வட்டாரத்திலே ஒரு முணுமுணுப்பு இருக்கே...?

bama பாமா படிச்ச பொண்ணுதானே நிறைய கெட்ட வார்த்தைகளை எழுதியிருக்கேன்னு சொல்றாங்க. தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகள் தான் ஆயதம் எங்களாலே கத்தி வச்சுகிட்டு சண்டை போடமுடியாது. தற்காப்புக்கும் கெட்ட வார்த்தைகள் தான். அடிக்கிறவன் வேணுமானா நல்ல வார்த்தையா பேசலாம் அடிபட்டவன் என்ன வார்த்தையை பேசுவான்? அப்படித்தான் பேசமுடியும். நீங்க எப்படி எங்ககிட்டேருந்து நல்ல வார்த்தையை எதிர்பார்க்கிறீங்க காலம் முழக்க சாதியைச் சொல்லி அடிக்கிறே, பெண்ணுன்னு சொல்லி ஒதுக்குறே, பொருளாதார ரீதியா  ஒடுக்குறே, கலாச்சார ரீதியா இழிவுபடுத்துறே இவ்வளவுவையும் தாங்கிகிட்டு நாங்க நல்ல வார்த்தை தான் பேசணும்னா சாத்தியம் இல்லே அப்படி எழுதினா அது உண்மைக்குப் புறம்பா எழுதுற விசயம் தான்.

இப்போது நிறைய பெண் கவிஞர்கள் எழுத வந்திருக்காங்க அவர்களின் பெண்மொழி சமூகத்தில் சில அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியாதா இருக்கு. இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

நிறைய பெண் கவிஞர்கள் பெண் உடல் சார்ந்து, பெண் பிரச்சினைகள், பெண்பாலியல் சார்ந்து நிறைய கவிதைகள் எழுதுறாங்க. அதை நான் குறைச்சு மதிப்பிடல. அதே சமயத்துல பெண்களுக்கு வாழ்வியல் ரீதியான பிரச்சினைகள் இருக்குதில்லே.. பிரசவம், குழந்தைப்பேறு பாலுட்டுவது, தாய்மை, குழந்தையை வளர்ப்பது, வயசுக்கு வருவது இந்த மாதிரி விசயங்கள் இவையெல்லாம் என்னைப்பொறுத்தவரை ஒரு தலித் பெண்ணுக்கு பிரச்னைகளே இல்லை. இதைவிட பயங்கரமான பிரச்னைகளெல்லாம் இருக்கு. நிறைமாச கர்ப்பத்தோட வயல்ல குனிஞ்சு நட்டுகிட்டு வர்ற பெண்களை பார்த்திருக்கேன். மரத்திலே தொட்டி கட்டி போட்டு குழந்தை பசியோட கத்திக்கிட்டே கிடக்கும் வேலையை முடிச்சிட்டுதான்  பாலுட்டவே முடியும். இப்படியெல்லாம் பிரச்னை இருக்கும் போது இதெல்லாம் ஒரு பிரச்னைன்னு இவங்க எழுதுறாங்களேன்னு. ஒருகனமில்லத விசயமாத்தான் எனக்குப்படுது அதனால இதையெல்லாம் சிலாகிச்சு என்னால பாராட்ட முடியல.

உங்கள் தலித் மொழிநடைக்கு நிறைய விமர்சனங்கள் வந்ததில்லையா..?

இதுவரை தமிழ்ப்படைப்பாளிகள் எல்லாம் ஆண் மொழியில் தான் எழுதிகிட்டிருந்தாங்க இவங்க என்னுடைய தலித் மொழியை ஏற்றுக் கொள்வதற்கு ரொம்ப கஷ்டப்படுறாங்க. தமிழ் இலக்கிய பிhதாமகர்கள் ஒரு வகையான மொழிநடை சுகமான வாசிப்பு என்று வைத்திருக்கிறார்கள். அதைத்தான் எல்லாரும் கடைப்பிடிக்கணும் என்கின்ற எதிர்பார்ப்பு இவங்களுக்கு இருக்கு. ஏன் ஏன் அப்படித்தான் இருக்கணும்? புதியமொழி, புதியநடை, புதிய சொல்லாடல் இருக்க்கூடாதா? இதை ஏன் இவங்களாலே சகிக்க முடியல்லே  இதையே ஆதிக்க சாதியினரோ ஆண்களோ எழுதியிருந்தால் சிலாகித்திருப்பார்கள்.

இன்றைய குடும்ப அமைப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?

இப்போது இருக்கிற குடும்ப அமைப்பு பெண்கள் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடியது Bama (1) இன்றைய சராசரி வளர்ப்பு முறையில் பெண்குழந்தை பிறந்தால் பெற்றோர்களுக்கு கல்யாணக் கவலை வந்துவிடுகிறது. இது மாறணும் பெண் குழந்தைகள் திருமணத்துக்காக வளர்க்கபப்பட வேண்டிய ஒரு  பொருள்  என்கிற கண்ணோட்டத்தை விட்டு;ட்டு வளர்த்து வந்தோம்னா அது வளர்ந்த பிறகு அதுவே முடிவு செய்து கொள்ளும்.

உங்க கருக்கு நாவல் இலக்கிய வட்டாரத்திலே  எந்த மாதிரியான  கவனிப்பை பெற்றது?

நான் எதிர்பாராத அளவுக்கு பெரிய வீச்சு கிடைச்சுது. அதன் வடிவம் மொழிநடை, விசயம் எல்லாம் புதிசா இருக்கிறதா பரவலா ஏத்துகிட்டாங்க சில பேர் இது நாவலா? என்ன மொழி நடை இது என்கிற மாதியான விமர்சனத்தை வைச்சாங்க  அதைப் பற்றி எல்லாம் நான் பெரிய அளவுக்கு கவலைப்படலே. ஏன்னா நான்  இலக்கியவாதிகளுக்காக அதை எழுதல அதனால எனக்கு அது பெரிய விசயமா தெரியல. சர்ச் சைடுலேருந்து பெரிய எதிர்ப்புக்கள் வந்துச்சு அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? நடந்தைத்தானே எழுதியிருந்தேன்.

சங்கதி நாவல்லே கடைசி அத்தியாயத்திலே நானு பறச்சியாய் பெறந்தது ரொம்ப நல்ல காரியமாத்தான் தெரியுது. ஆனா எம்புட்டுத் தடவ இந்தச் சாதில பெறந்ததுக்காக  வெக்கப்பட்டுக்கிட்டு வருத்தப்பட்டு இருந்திக்கேன்னு நினைச்சு கிட்டேன்னு பெருமையா சொல்லியிருக்கீங்க. நீங்கள் சங்கதியில் வாசகர்களுக்கு சொல்ல வந்த சங்கதி இது தானா?

இந்த மாதியான கஷ்டமான சூழலிலே நாங்கள் இருந்தாக் கூட அதையெல்லாம் உடைச்சிகிட்டு வாழ்ந்து காட்டக்கூடிய பாத்திரப் படைப்புக்கள் அதிலே இருக்கு. அந்தப் பலத்துக்கு காரணம் தலித் பண்பாடு என்பதை கோடிட்டு காட்டுறேன்.  அந்தப் பண்பாட்டு ரீதியான புரட்சியை செய்யும் போது இந்த மாதிரிப்பட்ட ஒரு கஷ்டத்திலேயும் கூட விடுதலை அடைந்த பெண்களோட சரித்திரம் தான் இது என்கிற மெஸேஜா இருக்கு.

இப்போது உங்களுக்கும் உங்கள் கிராமத்துக்கும் ஆன தொடர்பு எப்படி இருக்கு?

நான் எட்டாவது படிச்சுட்டு 13 வது வயதிலேயே கிராமத்தை விட்டு வெளியே போயிட்டேன். அதுக்கு பிறகு லீவுக்கு போறது தான் அதுக்கு பிறகு நிரந்தரமா அங்கு போய் வாழ்றது இல்லே. நான் பிசிக்கலா இங்க இருக்கேன்னாலும் உணர்வுரீதியா அங்கே தான் இருக்கேன்.. சமூக தளத்திலே இல்லன்னா எழுதுறது கஷ்டம்.

கருக்கு 1992ல் வந்தது சங்கதி 1994ல் வந்தது. இடையிலே நிறைய கதைகள் எழுதியிருக்கீங்களே?

bam4 சிறுகதை எழுத முடியும்னு நான் நினைக்கலே அதுக்காக நான் முயற்சியும் பண்ணலே. கருக்கு வந்த பிறகு இந்திய டுடெல தான் இலக்கிய மலருக்காக ஒரு சிறுகதை கேட்டாங்க அப்போதான் அண்ணாச்சி என்கிற கதையை எழுதினேன். அது எல்லோருக்குமே பரவலா புடிச்சிருந்தது. எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. அது எனக்கு ரொம்ப தெம்பா இருந்தது. அந்தக் கதை தான் என்னால கதை எழுத முடியும் என்கிற நம்பிக்கையை உண்டாக்கிச்சு.

உங்க ஊர் மக்கள் என்ன மாதிரி பீல் பண்ணாங்க?

கடுமையான எதிர்ப்பு வந்தது அது நான் எதிர்பார்க்காத ஒண்ணு. ஊருபேரை மட்டும் மாற்றி எழுதியிருந்தேன். ஆனா லொககேசனை வைச்சு இந்த ஊர்தான்னு புரிஞ்சிருக்கலாம்.மனுசங்க பேரையெல்லாம் அப்படி அப்படியே வைச்சிருந்தேன். பட்டப் பெயரையெல்லாம் வைச்சு எழுதிட்டேன். அது அவங்களுகுகு கஷ்டமாயிடுச்சு அங்கே ரொம்ப பேருக்கு வாசிக்கத் தெரியாது. வாசிச்ச கொஞ்சப் பேரும் இத எவ்வளவு பேரு படிப்பாங்க என்கிற மாதிரி ஏத்தி விட்டுட்டாங்க நான் வெளியூருல இருந்ததால எங்க அப்பாவைக் கூப்பிட்டு சண்டை போட்டுருக்காங்க எங்க ஊருக்குள்ளேயே நான் போக முடியல.

உங்க கருக்கு நாவல் தமிழின் முதல் தலித் தன் வரலாற்று நாவலா கருதப்படுது. அதுக்கு தமிழ் இலக்கிய வட்டாரத்திலே பிரமாதமான வரவேற்பும் கிடைச்சிருக்கு அந்த நாவலை நீங்க எந்தச் சூழல்ல எழுதுனீங்க.?

1990ல் கருக்கு வந்தது. அதை நாவல்னோ சுயசரிதைன்னோ நான் எழுதல. என் மன ஆறுதலுக்காக எழுதினது. 1985ல்; ஒரு பள்ளிக்கூடத்தில் டீச்சரா வேலை பார்த்துக்கிட்டிருந்த நான் கிறிஸ்துவ மடத்திலே சிஸ்டரா போனா தலித் பிள்ளைகளுக்கு உந்துசக்தியா இருக்கலாம் சுதந்திரமா செயல்படலாம்னு நெனைச்சு அதில சேர்ந்தேன்.  மூணுவருசம் சிஸ்டர் ஆகுறதுக்கான பயிற்சி. சிஸ்டரான பிறகு நாலுவருசும் அங்கு ஆசிரியராக  வேலை பார்த்தேன். நான் எந்த நோக்கத்துக்காக போனேனோ அந்த நோக்கம் நிறைவேறுவதற்கான சாத்தியமே அங்கு இல்லே. பணக்காரங்க பிள்ளைங்க படிக்கிற ஸ்கூலுக்கு ஆசிரியராத்தான் இருக்க முடிஞ்சுது. மேல்மட்டத்து ஆட்களை மேலும் மேலும் தூக்கிவிடுகிற காரியத்தைத் தான்  அவங்க செஞ்சுகிட்டிருந்தாங்க. என்னைப் போன்ற கஷ்டப்படும் தலித் மக்களுக்கு என்னால எந்தப் பிரயோஜனமும் இல்லங்கிறது ரொம்ப வேதனையா இருந்தது. என்னோட தலித் கலாச்சாரத்துக்கும் அங்குள்ள கான்வென்ட் கலாச்சாரத்துக்கும் கொஞ்சம் கூட ஒத்துப் போகல எங்களோடது வெள்ளத்தியான கலாச்சாரம.; அவங்களது அப்படி கெடையாது. பூடகமா வேஷம் போடுகிற மாதிரிதான் எனக்குப் புரிஞ்சுது. என்னால அப்படி வேஷம் போட்டுகிட்டு இருக்க முடியல எனக்குப் பொருத்தமில்லாத இடம்னு என் மனசுல பட்டது. அங்கிருந்து 1992லே வந்தேன்.

வெளியே வரும் போது வேற வேலை இல்ல. சேமிப்போ சொத்து சொகமோ எதுவும் கிடையாது. வெறுமனே வெறுங் கையோட வெளியே வர்றேன். ஏழவருசம் உள்ளேயே கிடந்துட்டேன்ல சாதராண மனிதர்களோட உறவு கொள்ளவோ சமுதாயரீதியான வாழ்க்கைக்கோ தகுதி இல்லாத மாதிரியான உணர்வு எனக்கு இருந்தது. அது தான் எனக்கு ரொம்ப வேதனையா இருந்துச்சு  எதிர்காலம் பத்தின கனவு இல்லன்னாலும் அந்த நிகழ்காலத்துல வாழ்றதுக்கு கூட வழிவகை ஒண்ணும் தெரியல. அப்படிப்பட்ட இக்கட்டான சூழல். என்ன பண்றதுன்ட்டு  சின்னதா ஒரு வேலை பார்த்துகிட்டு ஜீவிதம் bama_0427 பண்ணிக்கிட்டிருந்தேன். என் கிராமத்து சந்தோசமான கலகலப்பான சூழல் எல்லாமே இழந்து போய் இன்னிக்கு இப்படி உட்காந்து இருக்கோமே என்கிற ஒரு புரிதல் எனக்கு ஏற்பட்டுச்சு. மறுபடியும் அந்த வாழ்க்கைக்கு ஏங்குகிற மாதிரியான சூழல் .எங்க குடும்ப நண்பர் மாற்குவிடம் என் சூழ்நிலையைச் சொன்னேன் வாழ்க்கையிலே ஒருபிடிமானமே இல்லாம அந்தரத்திலே இருக்கிற மாதிரி இருக்குன்னு சொல்லி அழுதேன். அப்போதான் இதையெல்hம் ஒரு நோட்டுல எழுதி வை மனசுக்கு ஆறுதலா இருக்கும்னு மாற்கு சொன்னார்.  ஓரு ஆறு மாசம் மனசுக்கு என்ன என்ன  பட்டதோ அதையெல்லாம் ஒரு நோட்டுல எழுதினேன். பிறகு வாசிச்சபோது எனக்கு நல்லா இருந்தது. அதை புத்தகமா போடலாம்னு சொன்னாங்க. ஆனா எனக்கு அதிலே உடன்பாடு இல்ல. என் விசயம் மட்டுமல்ல அது ஊர்மக்கள் பலரோட விசயங்களும் கலந்து ஒரு கலவையா வந்திருந்தது.  அது தலித்மொழி பொதுமொழி  என ரெண்டு மொழியிலேயும் கலந்து எழுதியிருந்தேன். ரெண்டு மூணுநண்பர்களும் வாசிச்சிட்டு இந்த தலித் மொழிநடை புதுசா இருக்கு மொத்தத்தையும் இதே மொழிநடையிலேயே கொண்டு வந்துட்டா நல்லா இருக்கும் என சொன்னாங்க. மறுபடியும் வந்துட்டா. எழுதி எடிட் பண்ணி கொடுத்தேன். புத்தகமா அவங்களே போட்டாங்க அப்படி வந்தது தான் கருக்கு.

மேல் சாதிக்காரங்களோட ரியாக்சன் எப்படி இருந்தது?

அவங்கள்ல சில பேரு படிச்சிருக்காங்க ஆனா நேரடியா மோதல. எங்க சனங்க அவங்ககிட்ட வேலைக்குப் போகும் போது ரொம்ப குத்தலா பேசி திருப்பி அனுப்பியிக்;காங்க.

உங்க ஊர் எதிர்ப்பை எப்படி எதிர்கொண்டீங்க?

எங்க ஊருலே என்னை அடிக்கணும்கிற மாதிரித் திட்டம் போட்டிருக்காங்க ஒரு பையன் எனக்கு கடிதம் போட்டிருந்தான் கருக்கு பற்றி ஒரு ஆயவுக் கடிதம் எழுதி உங்களைப் போல வேறு யாரும் நம்ம விசயங்களை இப்படி எழுதினது கிடையாது. நீங்க மட்டும் தான் எழுதியிருக்கீங்க. இவங்க தவறா புரிஞ்சிகிட்டாங்க நான் அவங்களுக்கு விளக்கிச் சொல்றேன்னு எழுதியிருந்தான். அவன் கல்லூரி மாணவர்களை  எல்லாம் கூப்பிட்டு தெருவிளக்கு வெளிச்சத்திலே உட்கார வைச்சு சத்தமா வாசிச்சு ஒவ்வொரு விசயத்தையும் இந்த விசயத்த தான் இப்படி இப்படி எழுதியிருக்கான்னு  புரிய வைச்சுருக்கான் பிறகு கொஞ்சம் கொஞ்சமா ஒரு மாதிரி புரிஞ்சிக்கிட்டாங்க. எங்க ஊரிலே அம்பேத்கார் சிலை ஒன்னு வைச்சாங்க அந்த நிகழ்ச்சிக்கு என்னைக் கூப்பிட்டிருந்தாங்க எனக்கு கருக்கு பாமா-ன்னு அடைமொழி வைச்சி அழைப்பிதழ் போட்டிருந்தாங்க. எனக்குப் பாராட்டும் நடத்தினாங்க அந்த மண்ணைவிட்டுப் பிரிஞ்சு வந்து ரொம்ப நாளாகி  இருந்தது ஆனா இந்த நிகழ்சிக்குப் பிறகு என் கிராமத்துக்கும் எனக்கும் ஒரு ஆழமான நெருக்கம் உறவு ஊரே சொந்தமான மாதிரி ஒர் உணர்வு ஏற்பட்டிருக்கு

உங்க படைப்புக்கள் எந்தெந்த மொழிகளிலே வந்திருக்கு?

கருக்கு,சங்கதி ரெண்டும் இங்கிலீஸ்லே வந்திருக்கு சங்கதி பிரெஞ்சிலே வந்திருக்கு. அதோட வெளியீட்டு விழாவுக்கு நான் பாரிசிக்குப் போயிருந்தேன். நாவல் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. வன்மம் நாவலும் கிசும்புக்;காரன் சிறுகதைத்தொகுதியும் ஆங்கிலத்தில் வரப்போகுது. அண்ணாச்சி சிறுகதை 16 இந்திய மொழிகள்லே வந்திருக்கு.

உங்க மன ஆறதலுக்காக உங்களுக்கு நீங்களே எழுதிகிட்டது தான் கருக்குன்னாலும் ஒரு அற்புதமான மொழிநடை அதிலே உங்களுக்கு கைவந்திருக்கு சமூகம் பற்றி தெளிவான புரிதலும் உங்களுக்கு இருந்திருக்கு பிரச்சினைகளை எந்தவித தயக்கமோ கூச்சமோ இல்லாம எழுதியிருக்கீங்க ஆக எழுத்துப் பயிற்சியும் தீவிர வாசிப்பும் ஏற்கனவே உங்களுக்கு இருந்திருக்ககின்னு  நினைக்கிறேன்.?

ஆரம்பகால வாசிப்பின்னா நான் ஹைஸ்கூல்ல படிக்கும் போது அண்ணன் (ராஜ் கௌதமன்)  காலேஜ் படிச்சுட்டு வீட்டில இருந்தாங்க. அப்போ எங்க ஊர் பக்கத்துல இருந்த லைப்ரரியிலேயிருந்து நிறைய புத்தகங்களை எடுத்துகிட்டு வந்து படிப்பாங்க. இந்திரா பார்த்தசாரதி, நா.பார்த்தசாரதி, அகிலன,; ஜெயகாந்தன், இந்த மாதிரி நாவல்கள் தான். அப்போதெல்லாம் தேடிப்பிடித்துப் படிக்கிற பழக்கமில்லே. கிடைக்கிறதைப் படிக்கிறது. அப்போது எனக்கு ரொம்பப் பிடிச்சது ஜெயகாந்தன் நாவல்கள். ஜெயகாந்தன் bama1 மற்ற எழுத்தாளர்கள்லே இருந்து வேறுபட்டு நிக்கிறாரு என்பது மட்டும் அப்போ புரிஞ்சது. இப்போ நினைக்கும் போது மற்றவர்கள் பாலியில் ரீதியான, உளவியல்ரீதியான, மேல்தட்டு வர்க்கம் சார்ந்த விசயங்களை பதிவு செய்த போது இவர் நம்மள மாதிரி கஷ்டப்படுகிற உழைக்கும் அடித்தட்டு சனங்களைப் பற்றி எழுதுறாருன்னு தோணியிருக்கு. கல்லுரிக்குப்  போனபிறகு சிவசங்கரி, இந்துமதி, லக்சுமி இப்படியான புத்தகங்களை வாசிச்சிருக்;கேன். இப்படித்தான் என் ஆரம்பகால வாசிப்பு இருந்தது.கருக்கு வெளிவந்த பிறகு வந்த விமர்சனங்களுக்குப் பிறகு தான் இவங்க சொல்ற நாவல்லாம் எப்படியிருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்னு பரவலா  படிக்க ஆரம்பிச்சேன். என் ஆரம்ப கால எழுத்தைப் பற்றி கேட்டிங்கள்லே கல்லுரி நாட்களிலே கவிதைகள் எழுதியிருக்கேன். இயற்கையை பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளை கவிதைகளாக்கி இருக்கேன். ஆனா எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பினது கிடையாது. கல்லூரி மலரிலே நியை வெளிவந்திருக்கு.

இதுவரை 29 கதைகள் எழுதியிருக்கீங்க ஒவ்வொரு கதையிலேயும் பழைமையை உடைச்சு புதுமையை புகுத்துற மாதிரியான ஒரு ஃபார்மட் இருக்கு குறிப்பா அந்த காலத்தில்னு ஒரு கதை அதிலே தலித்துகளிடம் அந்தக்காலத்திலிருந்தே எதிர்ப்;புணர்வு இருந்திருக்கு என்கிற விசயத்தை பதிவு செஞ்சிருக்கீங்க?

அந்தந்த வாழ்நிலைச் சூழலில் நடந்த சம்பவங்களை நான் ஹைலைட் பண்ணம்னு நெனைக்கிறேன். ஓட்டுமொத்தமான புரட்சின்னு இல்லைன்னாலும்  சின்னச்சின்ன விசயங்கள் நிறைய நடந்துகிட்டிருக்கு. இப்பதான் தலித் எழுச்சி ஏற்ட்டிருக்கின்னு சொல்றோம். ஆனால் அப்போதே சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் நடந்திருக்கு. அதெல்லாம் பதிவு பண்ணப்படல அப்போ தலித்துகளுக்கு படிப்பறிவு இல்லே. அப்போது எழுதிய ஆதிக்க சாதியினர். அவர்களுக்கு எதிரான விசயங்களை பதிவு பண்ணுவாங்களா. என் கதைகளைப் படிச்சுட்டு நிறைய பேரு இப்படி நடக்குமான்னு கேட்கிறாங்க. இதுல என்ன தெரியுதுன்னா சமூகத்தில் அடிமட்டத்துல நடக்கிற எந்த விசயமும் அவங்களுக்குத் தெரியல என்கிறது தான். தெரிஞ்சுக்;கிறதுக்கான முயற்சிகளையும் அவங்க எடுத்துக்கிறதில்லை. நான் எழுதியிருக்கிறது. கொஞ்சம் இன்னும் எவ்வளவோ கொடுமைகள் நடக்குது. திண்ணியத்திலே மலத்தை வாயிலே திணிக்கல்லையா?  இதைவிட காட்டுமிராண்டித்தனம் என்ன இருக்கு.. இப்படி கேவலமான விசயம் ஏராளம் நடந்துகிட்டுதான்  இருக்கு வெண்மணிச்சம்பவம் நடக்கலியா? இப்படி நடக்குமான்னு கேட்கும்போது எனக்கு எரிச்சல் தான் வருது?

உங்க சிறுகதைகளை ஒரு தொகுப்பா படிக்கும் போது ஒரு நாவலைப் படிச்ச அனுபவம் ஏற்படுது. ஏன்னா உங்க வாழ்ககையில் நடந்த உண்மைச் சம்பவங்களைத்தான் கதைகள்லயும் கொண்டு வந்திருக்கீங்க ஆனா உங்க நாவல்  பேசப்பட்ட அளவுக்கு சிறுகதைகளெல்லாம் பெரிய அளவுக்கு பேசப்படலியே?

அண்ணாச்சி, கிசும்புக்காரன், பொன்னுத்தாயி மாதிரியான பல சிறுகதைகள் பத்திரிகைகளில் வந்தபோது நிறைய பேசப்பட்டிருக்கு பொன்னுத்தாயி கதையை அறிவொளி மூலமா பரவலா எடுத்துகிட்டு போனாங்க. எல்லா கதைகளும் பரவலா பேசப்படல. என்பது உண்மைதான் ஆனா ஆராய்ச்சி மாணவர்களும் எல்லாக்கதைகளையும் ஆய்வு செய்துகிட்டுதான் இருக்காங்க.

கருக்கு போலவே சங்கதியிலேயும் அதே மாதியான மொழிநடை வாழ்க்கைச் சூழலைக் கொண்டு வந்திக்கீங்களே?

இது வேணுமினே பண்ணதுதான் மொழிநடையில் கருக்கு  அதுவா அமைஞ்சது. சங்கதி வேணுமின்னே பண்ணது. சங்கதி புத்தகமா வெளியிடணும்கிற திட்டத்தோடயே எழுதின நாவல் நான் சந்தித்த நான் பார்த்த நான் கேள்விப்பட்ட தலித் பெண்கள்  பற்றி எழுதப்பட்டது. 2 நாவல்களிலேயும் மொழிநடையை மட்டும் தான் ஒன்னுன்னு சொல்லலாம்.கருக்கிலே இருக்கிற விசயங்கள் வேற சங்கதியிலே இருக்கிற விசயங்கள் வேற கருக்கிலே ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் நான் போய்கிட்டே இருப்பேன். என்னோட வாழ்க்கை நூலிழை மாதிரி போய்கிட்டே இருக்கும் அதைச் சுத்தி மற்ற கதாபாத்திரங்களை பின்னி இருப்பேன். ஆனா சங்கதி அப்படி இல்லை. அதிலே மூணு தலைமுறை வரும். குழந்தைப்பருவம,; அடலசண்ட் பருவம், தற்காலத்தில் நான் என்கிற மாதிரி இருக்கும்.

சங்கதி நாவலின் முன்னுரையில் இதனைப் படிக்கும் தலித்பெண்கள் வீறுகொண்டு எழுந்து வெற்றிநடைபோட்டு புதியதொரு சமுதாயம் உருவாக்கும் முன்னோடிகளாக புரட்சியைத் தொடங்கித் தொடர வேண்டும் என்ற ஆசையில் நம்பிக்கையில் எழுதியிருப்பதாக கூறியிருக்கிறீர்கள்;. உங்கள் ஆசை எந்த அளவுக்கு நிறைவேறியிருக்கு?

நான் புரட்சின்னு சொல்ல வந்தது. இயக்கரீதியான புரட்சி இல்லை பண்பாட்டுரீதியான புரட்சி. அப்படியான புரட்சி நடந்தது. நடந்துகிட்டிருக்கு. சங்கதியில் வர்ற கேரக்டர்களை பார்த்தீங்கன்னா அவங்க வாழ்க்கையிலே புரட்சி நடந்திருக்கு அவங்க விடுதலை பெற்ற பெண்மணிகளா அவங்க வாழ்க்கையிலே இருக்காங்க. அதுக்காக அவங்க சராசரி பெண்ணோட வாழ்க்கையிலேருந்து முற்றிலுமா வேறுபட்டாங்கன்னு சொல்ல வரலே. அன்றாடம் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். அதிலேயும் அந்தப் பண்பாட்டுப் புரட்சியிலே ஒரு சுதந்திரமான ஜீவிதத்தை கண்டு பிடிக்கிறாங்க. திருமணம், குடும்பம் என்பது நம்மை தடைப்படுத்தக் கூடிய விசயம் என்பதை பல பெண்கள் புரிஞ்சிகிட்டு என்னை ஒரு மாடலா வைச்சுகிட்டு இருக்காங்க.

உங்கள் வன்மம் நாவலில் பள்ளர் பறையர்களுக்கிடையேயான  பிரச்சனைகளை எழுதியிருக்கீங்க. தலித் ஒற்றுமை அதிகாரத்தைக்  கைப்பற்றுவது என்பதை வலியுறுத்தி இருக்கீங்க தலித் ஒற்றுமையின் மூலமா மட்டுமே அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும்னு நம்புறீங்களா?

வன்மத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற முக்கிய விசயம் வேறு தலித் உட்பிரிவுகளுக்கும் சரியான புரிதல் இல்லாத இளைஞர்கள் வளர்ந்து வரும் தலைமுறை எவ்வாறு பாதிக்கப்படுகிறது. என்பதைத்தான் சொல்லியிருக்கிறேன்bama2 உட்பிரிவுகள்  ஒற்றுமையோடு சேர்ந்து நிற்கும் போது அதிகாரத்தை நோக்கி நகர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. என்பதைச் சொல்கிறேன். வன்மம் பழங்கதை கிடையாது. சமகாலப்பிரச்சினை கண்ணாம் பட்டி என்கிற கிராமத்துக்குள்ளே மட்டும் அடங்கிப்போன விசயம் ஒரு வீட்டுக்குள்ளே ரெண்டு பேருக்கு  இடையிலே நடக்கிற பிரச்சினை மாதிரி. என்னுடைய ஆதங்கம் என்னன்னா  இந்தக் கலவரங்களாலே  வளருகின்ற தலைமுறை ஒரு பகைமை உணர்வோடு வன்மத்தோடு வளர்ந்துகிட்டு வருது. இதனால் அவர்களை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை அழித்துக்கொண்டே வருகிறோமே என்பதைச் சொல்வது தான் வன்மம்.

தலித் இயக்கங்கள் இப்போது தான் வளர ஆரம்பிச்சிருக்கு அதுக்கு முன்னாடி தலித்துகளுக்காக போராடின பொதுவுடைமை இயக்கங்கள் திராவிட இயக்கங்கள் பற்றிய எந்த பதிவும் உங்கள் படைப்புகளிலே காணோமே?

பொதுவுடமை இயக்கம,; திராவிட இயக்கம் இரணடும் வண்மம் கதை நடந்த அந்த ஊரில் இருந்தது. இப்போதும் இருக்கிறது. போதுவுடமை இயக்கத்தில் தலித் மக்கள் அதிகமாக இருக்காங்க. பொதுவுடமை இயக்கங்கள் இப்போதான் சாதியைப்பற்றி வெளிப்படையாக பேசுகிறார்கள். ஆனாலும் வர்க்கத்துக்கு கொடுக்கிற முக்கியத்துவம் சாதியத்துக்கு கொடுக்கிறதில்லே. வர்க்கம் ஒழிந்தால் சாதி தானாக ஒழியும்கிறாங்க.  அதில எனக்கு நம்பிக்கை இல்லே. என்னதான் வசதியிருந்தாலும் கோடீஸ்வரனாக இருந்தாலும் சாதிய முத்திரைப் போகல. சில பேரு நகர்புறங்களில்  சாதிய உணர்வு இல்லைங்கிறாங்க. அப்படியெல்லாம் நிச்சயமா கெடையாது. நகர்புறத்துக்கும் வடிவங்கள்தான் மாறி இருக்கிறதே தவிர மற்றப்படி சாதிய அடையாளம் என்பது செத்து மணண்ணுக்குள்ளே போகிற வரைக்கும் இருக்கத்தான் செய்யுது. அதிலே எந்த மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லே. வர்க்;கரீதியாக விடுதலையாகிட்டீங்கன்னா யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. என்பது தான் உண்மை. ஆனால் வர்க்கப்ப் போராட்டத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு சாதி ஒழிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்தாகணும் தலித் பெண்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டால் அனைவருக்குமே விடுதலை கிடைத்துவிடும்.

உங்க தலித் மொழியை மற்ற மொழிகளுக்கு எந்த அளவுக்கு நுட்பமா கொண்டு போக முடிஞ்சிருக்கு?

தமிழிலேருந்து தெலுங்குக்கும், மலையாளத்துக்கு பண்ணும் போது மொழிநடையை ஓரளவுக்கு மெய்ன்டன் பண்ணமுடியுது. ஆங்கிலம் என்று போகும் போது கொஞ்சம் அடிபடத்தான் செய்யுது. அதுக்காக மொழி பெயர்க்காமலும் இருக்க முடியாது. மோழிபெயர்ப்பின் மூலமாத்தான் தமிழ்நாட்டு தலித் பிரச்சனையை இந்திய அளவிலே சர்வதேச அளவிலே பேசமுடியுது.

லட்சியம்னு ஏதாவது வைச்சிருக்கீங்களா?

எழுதுவது எனக்கு தொழில் கிடையாது. இப்படியான பிரபலம் நான் எதிர்பார்க்காதது அது பாதிக்காததாலே தான் இன்னமும் எழுதமுடியுது. நான் இங்கே ஒரு சாதாரண ஆசிரியை சாதாரணமா இங்கே குடியிருக்கேன் நான் ஒரு தலித் என்பதாலே தலித் மக்களுக்கு உதவி செய்யணும்கிற எண்ணம் இயல்பாகவே இருக்கு என் ஸ்கூல் பிள்ளைகளுக்கு என் வாழ்க்கையைத்தான் முன் மாதிரியா சொல்றது. நானும் உங்களை மாதிரி கிராமத்திலிருந்து வந்தேன் கல்வியினாலே நாம் விழிப்புணர்வு அடையலாம் இயற்கையிலே இருக்கிற போராட்ட குணத்தை இன்னும் கூர்மைப்படுத்தலாம். போராடி வாழலாம் என்கிற மாதிரியான தன்னம்பிக்கையை ஊட்டுறேன். இங்கே யாருக்கும் நான் எழுத்தாளரா தெரியாது. அப்படி பெரிய எழுத்தாளரா நான் காட்டிக்கிறதும் கிடையாது. மளிகைக்டைக்காரர், முட்டைக்கடைக்காரர் பேப்பரிலே என் போட்டோவைப் பார்த்துட்டு நீங்க கதை எழுதுகிறவங்களான்னு கேட்பாங்க. அவ்வளவுதான் மக்கள் பிரச்சினையை எழுதணும் வெளிப்படுத்தணும் என்பது தான் முக்கியம் என்னைப் பாதிக்கிற விசயங்களை எழுதுவேன். விமர்சனங்களுக்காக நான் என்னை மாற்றிக்கிட்டு சமரசம் பண்ணிக்க மாட்டேன். விருதுக்காகவோ, அங்கீகாரத்துக்காகவோ எழுதமாட்டேன். விமர்சிப்பது அவர்கள் சுதந்திரம் எழுதுவது என்கடமை.

மகளிர்தினம் பற்றி?

மகளிர்க்கான பிரச்சினைகளை அந்த ஒரு நாளிலாவது எல்லோரும் யோசிக்க வேண்டிய கடப்பாடு இருக்கு. கூட்டங்கள் பேரணிகள் நடக்கும். பெண்களிடமிருந்து புதிய படைப்புக்கள் வரும். அந்த நாளில் மட்டுமில்லாமல் தொடர்ந்து விழிப்புணர்வு வேணும். பெண்களை இழிவுபடுத்துகிற மாஸ்மீடியா மதங்கள் குடும்ப அமைப்புகள் இவற்றில் மாற்றம் ஏற்பட இந்த தினம் பயன்படணும்.

(நன்றி: புத்தகம் பேசுது)

*******

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்