Mar 27, 2010

அடங்குதல் - வண்ணதாசன்

வண்ணதாசன்

'எங்கேயோ கிடக்கிற ஊர்லேருந்து வந்து இங்கே டெண்ட் அடிச்சிருக்கோம். இதுதான் நிரந்தரம்னாகூட சரி. நாம இங்கேயே தானே இருக்கப் போறோம்னா எல்லாத்தையும் இங்கேயே முடிச்சிரலாம். '

'அது சரி '

'ஒரு கல்லறைத் திருநாள் அது இதுண்ணு வந்தால் வெள்ளை அடிச்சு ரெண்டு மெழுகுதிரி கொளுத்தி வச்சி ஜபம் பண்ணனும்னு நினைச்சால் கூட வரதுக்கு ஏலாது. vannadhasan அடுத்த வருஷம் எங்கெங்கே தூக்கி அடிப்பானோ. நம்ம அதிர்ஷ்டம் தெரிஞ்சதுதான். இந்த ஊர் வேணும்னா எதிர்த்த ஊர்தான் கிடைக்கும் '

'அதெல்லாம் இருக்கு '

'அப்பா பக்கத்திலே என்னையும் கொண்டு போய் வச்சிருய்யா வச்சிருய்யாண்ணுதான் வந்ததிலிருந்தே சொல்லிக்கிட்டிருக்கா. சும்மா இருக்கிற மனுஷி திடார்னு இப்படித் திலுப்பிச் சொல்ல மாட்டா இல்ல, என்னமோ மனசில தோணப் போயித்தானே எல்லோரையும் பண்டியலுக்கு வரச்சொல்லி எழுதிப் போட்டிருக்கா '

'சிலபேருக்கு அப்படித் தோணும் ஸார். எங்க ஆச்சி கூட இந்த மாதிரித்தான் ஒரு தட.... '

'பின்னே....அற்புதம் வந்தாச்சு. வடக்கேயிருந்து க்ரிஸ்மசுக்கு பேபி, பேபி மாப்பிள்ளை எல்லாம் வந்துட்டாங்க. உடம்புக்குப் பெலமில்லாதவ, பேசாமல் நீ பாட்டுக்கு ஒரு இடத்துல இருண்ணு எல்லோரும் சொல்லிப் பார்த்தோம். கேட்க மாட்டேண்ணுட்டா. மட்டன் எடுக்கட்டா, கோழி எடுக்கட்டாண்ணு நியூ இயர் வரை ஒரே எடுகிடத்துண்ணு கிடந்தது ஊரில. அப்படியெல்லாம் தைரியமா இருந்தவ, எங்ககூடப் புறப்பட்டு வந்த இடத்திலே இப்படித் திடார்னு கிடையில விழுந்துட்டா நம்ம நேரத்துக்கு '

'நீங்க என்ன ஸார் நேரம் கீரம்ணுட்டு '

'பின்னே பத்துநாள் செல்லுமா 'ங் கிறதே யோசனையா இருக்கு. பத்து நாளோ, இருவது நாளோ, அவ ஆசைப்படி ஊருக்குக் கொண்டு போயிர வேண்டியது தான். இல்லாட்டா நாளையும் பின்னேயும் மனசில அரிச்சிக்கிட்டே இருக்கும். '

'அது சரிதான். '

* * *

'டாக்டர், நான் அவருக்கு கீழே வேலை பார்க்கிறேன் எப்படி இருக்கிறாங்க அந்த அம்மா ? அந்தரங்கமா, உங்க அபிப்பிராயம் என்னன்ணு தெரிஞ்சுக்கலாம்ணுதான் உங்ககிட்டே வந்தேன். '

'நீங்க பாருங்க ஏற்கனவே ஒரு தடவை ஆபரேஷன் பண்ணிய நோயாளி உடம்பு. அதும், நான் சொல்லணும், இந்த ஒன்றரை வருஷம் ஓடியதை நல்ல விஷயம்னு. வலது பக்கத்தில் மறுபடியும் கட்டி வளர்ந்துட்டுது ஒரு சின்ன பந்து போல, சிறியது ஒரு கால் பந்தைவிட, பெரியது ஒரு ஆரஞ்சுப் பழத்தைவிட, இதே நிலையில் நோயாளி ஒரு பத்து நாள் தள்ளலாம். அதிக பட்சம் இரண்டு வாரங்கள். அதற்கு மேல் இல்லை. ஆனால் எப்போது என்றைக்குண்ணு சொல்ல முடியாது, யாராலும் '

'அதுக்கில்லை டாக்டர். ஸாரோட அம்மா, சொந்த ஊர்லதான் அடக்கம் பண்ணப் படணும்னு பிரியப்படுதாங்க. இப்பவே கொண்டு போயிரலாமா. இல்லை. கொஞ்சநாள் வச்சிருக்கலாமா ? '

'நீங்க பாருங்க, நல்லது இப்ப கொண்டு போறதே, இந்த வியாதிக்காரங்க கடைசி வரை பேசிக்கிட்டுதான் இருப்பாங்க. பிரக்ஞை இருக்கலாம் கடைசி வரை கூட, நல்லது இப்போது கொண்டு போறதே '

'நன்றி. டாக்டர் '

'டோக்கன் நம்பர் அறுபத்தி மூன்று. அறுபத்தி மூன்று '

* * *

'செலவு என்னசார் செலவு. நம்ம தரித்திரம் என்னைக்கும் விடியப் போறதில்லை. அதுக்காக அம்மா விருப்பப்பட்டுச் சொல்றதைத் தள்ளி விட முடியுமா ? யார் யாருக்கோ செலவு செய்கிறோம். மச்சினன்மார் எல்லோரும் கால்சட்டை ஜோபிக்குள்ளே கையை பூத்துக் கிட்டு நட்டமா நிண்ணானுங்க. இழுத்துக்கிட்டு கிடந்தது அவனுகளுக்குத்தான் அம்மா, எனக்கு மாமியார்தான். எப்படியும் போகட்டும்னா விட்டுட்டோம் ? செயினை அடகு வச்சாவது செலவழிச்சுத்தான் பார்த்தோம். போய்ச் சேர்ந்து ஒரு வருஷம் ஆச்சு. இந்த நன்னி விசுவாசம் கெட்ட பயலுக செயினுக்குப் பணம் கட்டி திரும்புவானுகண்ணா செய்தோம் இல்லை. அண்ணைக்கு மாமியார்க்காரிக்குச் செய்ததை இன்றைக்கு பெத்த அம்மைக்குச் செய்ய மாட்டானா ? '

'அதுக்கில்லை ஸார். கையில வசதியில்லாத நேரத்தில டாக்ஸிக்கே ஆயிரம் இரண்டாயிரம்னு எதுக்குக் கொடுக்கணும்னுதான் யோசனை. அதுக்குப் பதிலா இப்பவே கொண்டுட்டுப் போயிட்டா என்ன ? டாக்டர் சொன்ன கணக்குக்கும் கிட்டமுட்ட இன்னும் ஒருவார டயம் இருக்கு '

'அதப்படிப்பா முடியும். இப்ப காரைக் கூட்டிக்கிட்டு வந்து, நீ சொல்லுற மாதிரியே, வா, வண்டியிலே ஏறுண்ணு பார வண்டியிலே பனங்கட்டை ஏத்துற மாதிரி நம்ம இஷ்டத்துக்கு ஏத்தியிற முடியுமா ? அது நல்லா இருக்குமா ? அவ என்ன நினைப்பா ? சரி நமக்கு மணியடிச்சுட்டான் போல இருக்கு. அதான் இந்த பய ஊர்ல கொண்டித் தள்ளிரலாம்னு பார்த்தான் 'னு நினைச்சிரப் படாதுல்லா. நம்மால ஏண்ட மட்டுக்கும் கடேசிவரை பாப்பம். நல்லது கெட்டதுண்ணு ஒரு முடிவு ஆனப்புறம் கொண்டு போயிக்கிடலாம். ஆயிரம் ஐநூறுண்ணு கணக்குப் பார்க்கிற விஷயமா இது எனக்குப் படலை. '

* * *

'வீட்டுப் பொம்பிளை கிட்டே என்றைக்கு யோசனை கேட்டாரு, இன்றைக்கு கேட்க. அப்படிக் கேட்டாத்தான் எம்புட்டோ இதுக்குள்ளே குடும்பம் முன்னிலைக்கு வந்திருக்குமே. முன்னே பின்னே யோசிக்காம இப்படிச் சொல்லிக் கிட்டிருக்கிற மனுஷனை என்ன பண்ண, கட்டி கட்டியா கையிலே கழுத்திலே கிடந்தாலாவது வித்துச் செலவழிக்கலாம். ஏற்கனவே கசத்திலே தள்ளுனது மாதிரி மூச்சு முட்டிக்கிட்டு நிக்கேன். உங்களை மாதிரி நாலு ஆபீஸ் ஆளாச் சேர்ந்து ஒரு டாக்ஸியை பிடிச்சு வாசல்ல கொண்டாந்து நிறுத்துங்க. நல்லா இருக்கும்போதே ஊர்ல கொண்டிச் சேர்த்திருவோம். '

'இல்லீங்கம்மா, சாரு அப்படிச் சொல்லும்போது அதுவும் சரியாத்தானே படுது. பெரியம்மா விருப்பம் அப்படியிருக்கும்போது என்ன செய்கிறதுண்ணு எஙளுக்குத் தெரியலை. '

'அம்பாரியிலே போகணும்னு தான் தோணுது. அங்குசத்துக்குக்கூட வழியில்லைண்ணா என்ன செய்யுறது ? எனக்கும் என்ன வல்லா வல்லடியா அவுங்களை ஊர்ல கொண்டித் தள்ளிரனும்ணா ஆசை இல்லையா '

'இங்கேயே வச்சுக்கலாம்னாலும் சங்கடமாப் படுது சாருக்கு '

'அப்ப சங்கடப்பட்டுக்கிட்டு இருக்க வேண்டியது தான். ஒண்ணு முன்னே போகணும். இல்லே பின்னே போகனும். நிண்ண இடத்திலேயே காலைத் தேய்ச்சுக் கிட்டு இருந்தா எப்படி ? பொம்பிளை சொல்றதை சொல்லியாச்சு. இனிமே உங்கபாடு. உங்க ஸார் பாடு ' '

'சாமோட அப்பா வந்து என்னை மூணுதடவை ஒரு பெரிய வீட்டுக்கு வா வாண்ணு கூப்பிட்டாரு. நான் என் பிள்ளைங்களை விட்டுட்டு வரமாட்டேண்ணு சொல்லிட்டேன் '

--இது எல்லாம் கடேசீல பேசுகிற பேச்சுத் தான்.

'அதே சாமியார்தான் எம் பக்கத்தில இருந்து ஜெபம் பண்ணிட்டுப் போறாரு. கோயில்ல எங்க கல்யாணத்துக்கு நின்னாரே அதே சாமியார்தான் '

--இனி மேக்கொண்டு அதிக நேரம் செல்லாது. உள்ளூர் போதகரைக் கூப்பிட்டு ஜெபம் பண்ண வரச்சொல்லி தாக்கல் கொடுத்திரலாம்.

'சேசுவே, உமக்கு எங்கே சித்தமோ அங்கே என்னைக் கொண்டு செல்லும்னு வேண்டிக்குங்க '

'தேவ பிதா எந்தன் மேய்ப்பனல்லோ '

'நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்தேன் '

'மோசே வாத்தியார்கிட்டே தான் பொறுப்பை ஒப்படைச்சிருக்கு. இந்த ஊர் ஆளுங்கிறதாலே. ஒரு ஏற்பாடு செய்ய, கொள்ளத் தோதுவா இருக்கும்லா '

'அதெல்லாம் சரிதான். அவரைக் கங்காணிக்கிறதுக்கு அவரு பொறத்தாலே யேல்லா இன்னோர் ஆள் போகணும் பெட்டி செய்யப் போறேன் சாமிண்ணுட்டு அன்னை சா மில் மரக்கடைக்கு எதுக்க நிக்க இருக்கிற சாராயக் கடையில் இல்லா பட்டரையைப் போட்டிருவாரு. '

'வண்டிக்குச் சொல்லியாச்சா. கோயில் வண்டியா, முனிசிபாலிட்டி வண்டியான்னு பார்த்துக்கிடுங்க. ரெண்டுக்கும் துட்டுதான். முனிசிபாலிட்டிக்காரனையாவது நாம நாலு அதட்டு அதட்டலாம். கோயில்ல வச்சதுதான் சட்டம். '

'எப்படியும் ராத்திரி வரைக்கும் ஆகும். நாலு பெட்ரோமாஸ் லைட்டுக்குச் சொல்லி வைக்கணும். '

'எதுக்கு ராத்திரியும் விடியக்காலமும் ஆகப்போகுது ? வார ஆட்கள் எல்லோரும் வந்தாச்சு, சாருக்கு அக்கா, தங்கச்சி அவங்க ஹஸ்பெண்ட் எல்லோரும், அதிகமாயிருக்குண்ணு தந்தி கொடுத்து, சனிக்கிழமையே வந்தாச்சு, நம்ம ஆபீஸ்காரங்களும் அநேகமா இருக்கோம் பிறகு என்ன ? '

'முதல்ல ஊருக்குக் கொண்டு கிட்டுப் போற மாதிரி லைட்டா ஒரு பேச்சு இருந்ததுல்லா நான் கூட எதுக்கும் இருக்கட்டும்ணு ஒரு டாசல் வேனுக்குச் சொல்லி வச்சேன். டிரைவர் தெரிஞ்ச பையன். ஓனருக்குத் தெரியவேண்டாம்ணு சொல்லி ஒரு பத்து அம்பது கூடுதலா அவன் கையில வச்சிட்டாப் போதும் '

'பாடியைக் கொண்டு போகனும்னாலே ஒட்டிக்கு ரெட்டிதான். இந்தா இந்த எட்டு மைலுக்கிள்ள இங்கன இருக்கிற ஊருக்கு நூத்தம்பது ரூபா கேட்கான். அதிலேயும் இந்தத் தொண்ணுத் தொண்ணு பத்தொம்பது வண்டி இருக்கானே, தாயோழி இதுதான் சமயம்னு கொம்புல ஏறுவான் ' '

'உயிர்த்தெழுதலின் நம்பிக்கைக்காகவே கர்த்தருக்குள் அமைதலாக நித்திரையடைந்திருக்கிற இந்த நல்ல அம்மாளின் மகனையும் மகள் மாரையும் அவர்தம் குடும்பத்தாரையும் தேவரீர் பேர் பேராக ஆசீர்வதித்து உம்முடைய வல்லமையாலும் மகிமையாலும் பேர் பேராக அவர்களுக்கு சகல சந்தோஷமும் சமாதானமும் உண்டாகும்படி கிருபை செய்யும் கர்த்தாவே '

* * *

'அந்தக் காலத்துல அதெல்லாம் சரி. பிறந்ததிலேர்ந்து மண்டையைப் போடுகிற வரை ஒரே ஊர்ல எல்லாம் நடந்தது. இப்பவும் அதே மாதிரிக் கொண்டு செல்லனும்னா முடியுமா. ஒரு பேச்சுக்குப் பார்த்தா, ஒண்ணாங்கிளாஸ் துவக்கம் காலேஜ் வரைக்கிலும் ஒரே இடத்தில நாம படிச்சோம், ஒம் பையன் எல்கேஜி இந்த ஊர்ல, யூகேஜி அடுத்த ஊர்ல படிப்பான். பொழைப்பு அப்படியாயிட்டுது. பொட்டியைத் தூக்குண்ணா தூக்கியிற வேண்டியதுதான். '

'....... '

'என்ன ஒண்ணுஞ் சொல்ல மாட்டேங்கிற. அப்பா பக்கத்துல கொண்டு போய் வையி வையிண்ணுதான் அம்மையுஞ் சொன்னா. சரி சரிண்ணுதான் சொன்னேன். என்ன ஆனாலும் தூக்கிப் போட்டுக் கிட்டு ஊருக்குப் போயிரணும்னுதான் தோணுச்சு...எங்கன கொண்டு போக ? கூட ரெண்டு பத்தி கட்டும் மொழுகு திரியும் வாங்கிக் கொளுத்தலாம்னா அதுக்கே யோசனையாப் போச்சு நேத்திக்கி '

'...... '

'ராப் பகலாக ஆபீஸில் கிடந்து சாகிறதுதான் மிச்சம். அவசரத்துக்கு செலவழிக்க கையில் முக்கால் துட்டு இல்லை. பேரு மாத்திரம் இருக்கு. நாக்கு வழிக்கக்கூட பிரயோசனமில்லாத பேரு '

'........ '

'கடைசியிலே யார்கிட்டேப் பொரட்டினோம்ணு நினைக்கே ? உரக் கடைக்காரர்கிட்டே தான். முன்ன பின்ன தெரியாது. பஜார்ல போகும் போது கடையில ஏறிட்டுப் பார்த்த பழக்கம்தான் வாங்கியாச்சு செலவழிச்சாச்சு. அசலூர் வந்து கடன் வாங்கினா என்ன, அம்மையை அடக்கம் பண்ணினா என்ன, ரெண்டும் ஒண்ணு தானே '

'.......... '

'என்ன ஒண்ணுஞ் சொல்ல மாட்டேங்க ? '

******

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்