Mar 3, 2010

ஸ்வர்ண குமாரி-மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியார்

பெங்காளம் என்று கூறப்படும் வங்க தேசத்திலே சாந்த்பூர் (சந்திரபுரம்) என்ற கிராமத்தில் மனோரஞ்ஜன் பானர்ஜி என்ற ஒரு பிராமண வாலிபன் உண்டு. இவன் கல்கத்தாவிலே போய் பி.ஏ. பரீக்ஷைக்குப் படித்துக் கொண்டிருக்கையில் 1904ம் வருஷம் டிஸம்பர் மாதம் ரஜாவின் பொருட்டாகத் தனது சொந்த ஊராகிய சாந்த்பூருக்கு வந்திருந்தான்.

bharathi5 மனோரஞ்ஜனன் வெகு சுந்தரமான ரூபமுடையவன். பார்ப்பதற்கு மன்மதனைப் போலிருப்பான். மேலும் குழந்தைப் பிராய முதலாகவே பள்ளிக்கூடத்துப் பந்தாட்டம் முதலிய விளையாட்டுகளிலேயும், மற்றும் சிலம்பம், கர்லா முதலிய சுதேசீய பாலாப்பியாசங்களிலேயும் இவன் மிகுந்த தேர்ச்சியுடையவனாகித் தன்னோடு ஒத்த வயதுள்ள வாலிபர்களெல்லாராலும் 'அர்ஜுனன்' என்றழைக்கப்பட்டு வந்தான்.

வயது இருபத்து மூன்று ஆயிருந்த போதிலும் இவனுக்கு என்ன காரணத்தினாலோ இன்னும் விவாகம் நடக்காமல் இருந்தது.

பெங்காளத்தார் மிகுந்த சொற்ப வயதிலேயே விவாகாதிகள் நடத்திவிடுவது முறைமை. இவன் விஷயத்தில் மட்டும் இவ்வாறு நடக்கவில்லை. இதற்கு வேறொரு உள் முகாந்திரமுண்டு.

மனோரஞ்ஜனனுடைய தந்தை உயிரோடிருந்திருக்கும் பக்ஷத்தில் இவனை இதற்கு முன் விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியிருக்கிறார். ஆனால் இவனுக்கு ஏழு வயதாயிருக்கும்போதே தந்தை இறந்துபோய் விட்டார். தாய்க்கு இவன் ஒரே பிள்ளையாதலால் அவள் இவன் மீது மிகுந்த அருமை கொண்டவளாகி, வீட்டில் இவன் சொன்னதற்கு மறு சொல் இல்லாமல் காரியங்கள் நடந்து வந்தன.

இந்தக் குடும்பத்திற்கு அதிக ஆஸ்தி இல்லாவிட்டாலும், உள்ள நிலத்தை விற்றுப் பணம் எடுத்துக் கொண்டு தான் கல்கத்தாவுக்குப் போய் பரிக்ஷைகள் தேறி வரவேண்டுமென்று இவன் சொன்னவுடனே தாய் யாதொரு ஆக்ஷேபமும் சொல்லாமல் சரியென்று விட்டாள். இதுபோலவேதான் எல்லா விஷயங்களிலும்.

அடிக்கடி இவனுடைய தாய் இவனைக் கூப்பிட்டு "குழந்தை ரஞ்ஜன்! உனக்கு வயதாய் விட்டதே. விவாகம் எப்போதடா செய்து கொள்வாய்?'' என்று கேட்டால், இவன் முரட்டுத்தனமாக ''அம்மா! அந்தப் பேச்சை மட்டிலும் என்னிடம் பேசாதே'' என்று சொல்லிவிட்டு வெளியே போய்விடுவான்.

அந்தரங்கத்திலே இவன் வடக்கு வீதி ஸூர்யகாந்த பாபு என்ற பெருஞ்செல்வரின் குமாரத்தியான ஸ்வர்ணகுமாரியின் மீது மோஹம் வைத்திருக்கிறானென்ற விஷயத்தைத் தாயார் நன்றாக அறிவாள். ஆனால் இவனுக்கும் ஸ்வர்ணகுமாரிக்கும் ஒருபோதும் விவாஹம் நடப்பது சாத்தியமில்லையென்பது அவளுக்கு நிச்சயந்தான். அப்படி ஒருவேளை அந்த விவாகம் நடப்பது ஸாத்தியமாகக் கூடுமானால் அதை இவன் கேட்ட மாத்திரத்திலே இவளுக்கும் பிராணன் போய்விடும். தனது மகன் ஸூர்யகாந்த பாபுவின் பெண்ணை விவாகம் செய்து கொள்வதைக் காட்டிலும் அப்பிள்ளை இறந்து போவது விசேஷமென்று அவளுக்குத் தோன்றும்.

தனது குலதெய்வமான ஸ்ரீ கிருஷ்ண பகவானைத் தியானித்து இவள், ''ஸர்வஜீவ தயாபரா! எனது பிள்ளைக்கு அந்த மிலேச்சனுடைய பெண்மீது இருக்கும் மோஹத்தை நீக்கி அவனுக்கு நல்ல புத்தி கொடுக்கலாகாதா?'' என்று அடிக்கடி கண்ணீர் சொரிந்து பிரார்த்தனை புரிவாள்.

அத்தியாயம் - 2

ஸ்வர்ண குமாரியை மனோரஞ்ஜனன் மணம் புரிந்து கொள்வதிலே மனோரஞ்ஜனுடைய தாயாருக்கு இத்தனை விரோதம் ஏன் இருக்க வேண்டுமென்பதை நமது கதாப்ரியர்கள் அறிய ஆவலுறலாம். அதன் காரணம் பின்வருமாறு: ஸ்வர்ணகுமாரியின் தந்தையாகிய ஸூரியகாந்த பாபு பிராமண குலத்திலே பிறந்த போதிலும், பிராமண ஆசாரங்களையும், அனுஷ்டானங்களையும், மார்க்க முறைகளையும், நம்பிக்கைகளையும் தினதர்ப்பணம் செய்துவிட்டு, 'பிரம்ம ஸமாஜம்' என்ற புதிய மார்க்கத்தைச் சேர்ந்து கொண்டு விட்டார்.

இந்த ஸமாஜத்தார் ''ஜாதி பேதம் இல்லை. விக்கிரஹாராதனை கூடாது. பெண்களும் ஆண்களும் சமானமாக ஒத்துப் பழகலாம்'' என்பது போன்ற நவீனக் கோட்பாடுகள் கொண்டிருப்போர்.

ஸ்வர்ணகுமாரியின் தகப்பனார் எந்த ஜாதிக்காரனுடனும் கலந்து சாப்பிடுவார். அவர்கள் வீட்டு ஸ்த்ரீகள் பகிரங்கமாக வெளியே உலாவுவதும், கண்ட புருஷர்களுடன் சம்பாஷிப்பதும் பிழையில்லை யென்று நடப்பவர்கள். ஸ்வர்ணகுமாரிக்கு வயது பதினெட்டாகியும் இன்னும் விவாகமில்லை. இதுவெல்லாம் மிகுந்த புராதன இயற்கை கொண்ட மனோரஞ்ஜனன் தாயாருக்குக் காதால் கேட்கக்கூட வெறுப்பாக இருந்தது.

இங்ஙனமிருக்க ஸ்வர்ணகுமாரியின் மீது தனது மகன் அடங்காத மையல் கொண்டிருக்கிறானன்பதையும், அதன்பொருட்டாகவே வேறு விவாகத்தில் விருப்பமில்லாதிருக்கிறா னென்பதையும் இந்த அம்மை பல முகாந்தரங்கள் மூலமாக ஊஹித்தறிந்து கொண்ட நாள்முதலாக இவள் மனதிலே தோன்றிய வருத்தங்களுக்கு அளவு கிடையாது. நிற்க.

இங்கே ஸ்வர்ணகுமாரியின் நிலை, எப்படியிருக்கிற தென்பதைக் கவனிப்போம். இவள் மனதிலே மனோரஞ்ஜனனுடைய வடிவம் என்றும் அகலாத சுந்தர விக்கிரஹமாகப் பதிந்து போய்விட்டது. வரம்பில்லாத செல்வமுடைய குடும்பத்திலே பிறந்து, ஸங்கீதம், ஸாஹித்யம் முதலிய கலைகளிலெல்லாம் சிறந்த பழக்கம் கொண்டவளாகித் தனக்கு இசைவான கணவனைத் தவிர மற்றப்படி சாதாரண மனிதன் எவனையும் மணம் செய்து கொள்ளக்கூடாதென்று இவள் ஒரே பிடிவாதமாக இருந்தாள்.

இவளது ரூபலாவண்யமோ சொல்லுந் தரமன்று. கருமை நிறங்கொண்ட அம்ருதத்தின் கடல்களென்று சொல்லத்தக்க இவளுடைய நேத்திரங்களும், முல்லை போன்ற புன்சிரிப்பும், மூக்கும், கன்னமும், நெற்றியும், ஸ்வர்ணமயமான சரீரமும், இவளை என்னென்று சொல்வோம்! சுகப்பிரம ரிஷி பார்த்தபோதிலும் மயங்கிப் போய்விடுவார்.

இவளுக்கு மனோரஞ்ஜனன் பாலிய சினேகர். பள்ளித் தோழன். தேவரூபனாகிய இவனையே கடைசிவரை பள்ளித் தோழனாகவும் கொள்ள வேண்டுமென்று இவள் ஆசை கொண்டு விட்டாள். இதற்கு முன் எத்தனையோ முறை இவர்கள் அடிக்கடி சந்திப்பதும்,

காதற்கலையிற் கனிந்து நிற்பதுவும்
உயிரென நோக்கி உள்ளம் வாடுவதும்
பொருளிலாத் தெய்விக மொழி பல புகல்வதும்

என இவ்வாறு தமது மோஹ நெருப்புக்கு நெய் ஊற்றிக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

இப்போது மனோரஞ்ஜனன் மறுபடியும் சாந்த்பூருக்கு வந்தவுடனே வழக்கம் போலவே இவர்களது சந்திப்புகள் தொடங்கிவிட்டன.

இதை நமது ஸ்வர்ணத்தின் தந்தையாகிய ஸூரியகாந்த பாபு அறிந்து ஒருநாள் இவளை அழைத்து, 'மகளே, நீ நான் சொன்னபடி ஹேமசந்திர பாபுவை விவாகம் செய்து கொள்ளச் சம்மதிக்காமலிருப்பாயானால் இனி என் வீட்டைவிட்டு வெளியேறி விட வேண்டும். கையிலே காசற்றவனும், விக்கிரகாராதனை செய்யும் மூட பக்திக் கூட்டத்தாரைச் சேர்ந்தவனுமாகிய அந்த மனோரஞ்ஜனப் பயலை நீ அடிக்கடி பார்த்து பேசுகிறாயென்ற வார்த்தை என் காதிலே படக்கூடாது. அடுத்த தை மாதம் உனக்கும் ஹேமசந்திர பாபுவுக்கும் விவாகம். நீ இப்போதே எனக்கு ஆகட்டுமென்ற வார்த்தை கொடுத்துத் தீரவேண்டும். நான் எத்தனையோ வருஷம் உன்னுடைய மூடத்தன்மையான பிடிவாதத்தை சகித்தாய் விட்டது. இனி ஒரு க்ஷணம் பொறுக்க மாட்டேன். இன்று மாலை இங்கே ஹேமசந்திரர் வருவார். நீ தோட்டத்திலேயுள்ள பூஞ்சோலையில் 6 மணிக்குப் போயிரு; அங்கே அவரை வரச்சொல்கிறேன். நீ அப்போது அவரிடம் உன்னுடைய சம்மதம் தெரிவித்தே தீர வேண்டும். இல்லாவிட்டால் உன்னைக் கையும் கப்பரையுமாக நாளைக் காலையில் வெளியே ஓட்டி விடுவேன்' என்று மஹா கோபத்துடன் படபடவென்று சொல்லிவிட்டு ஸூரியகாந்த பாபு எழுந்து போய்விட்டார். தனது மகள் கண்ணீர் மாரிக்கிடையே தரைமீது சோர்ந்து விழுந்து விட்டதைக்கூட அவர் கவனிக்கவில்லை.

அத்தியாயம் - 3

பகல் முழுவதும் ஸ்வர்ணகுமாரி தனது தந்தையின் கொடூரத்தை நினைத்து நினைத்து மனம் தயங்கிக் கொண்டிருந்தாள். இவளுக்கு ஒன்றுந் தோன்றவில்லை. இதுபோன்ற சமயங்களிலே தாய் இருக்கும் பக்ஷத்திலே எவ்வளவோ தைரியம் சொல்லு வாள். ஆனால், நமது ஸ்வர்ணத்திற்கோ தாயார் அதிபாலியத்திலே இறந்து போய் விட்டாள். வீட்டிலுள்ள ஸ்த்ரீகளெல்லாம் தூர பந்துக்களேயல்லாமல் இவள் தன் மனதையெல்லாம் சொல்லி முறையிடக் கூடியவாறு அத்தனை நெருங்கிய நட்புடையோர் யாரும் கிடையாது.

தனியே நெடுநேரம் யோசித்து யோசித்து இவள் பின்வருமாறு நிச்சயம் செய்து கொண்டாள்: 'தந்தையோ இரும்பு நெஞ்சுடையவர். மனோரஞ்ஜனனோ தனது தாயிருக்கும்வரை பிரம்ம சமாஜத்திலே சேரப்போவது கிடையாது. நமக்கு இந்த ஹேமசந்திரனை விவாகம் செய்துகொள்ள வேண்டுமென்றே விதியிருக்கின்றது போலும். மனோரஞ்ஜனனுடனேதான் வாழ்வேனென்று நான் தெய்வ சாக்ஷியாக விரதம் கொண்டாய் விட்டது. மனோரஞ்ஜனன் என்னை விவாகம் செய்து கொள்வதும் சாத்தியமில்லை. இனி தந்தை வீட்டிலிருந்து பிச்சைக்காரி போல வெளியே துரத்துண்டு ஏன் அவமானமடைய வேண்டும் ஹேமசந்திரனையே விவாகம் செய்து கொள்வதாக இன்று மாலை சம்மதமளித்துவிட்டு, விவாகத்திற்கென்று குறிப்பிடப்பட்டிருக்கும் நாளில் விஷத்தைத் தின்று உயிரை மடித்துக் கொள்கிறேன். இதற்கிடையே ஏதேனும் அகஸ்மாத்தாக அனுகூலம் ஏற்பட்டால் பார்த்துக் கொள் வோம். இல்லாவிட்டால் மரணமே கதி' என இவ்வாறு மனவுறுதி செய்துகொண்டு விட்டாள்.

இந்த ஹேமசந்திரன் யார்? இவன் ஒரு பணக்கார ஜமீந்தார். பிரம்ம ஸமாஜத்தைச் சேர்ந்தவன். ஆனால் புராதன ஆசாரங்களைக் கைவிட்ட இவன் மற்ற பிரம்ம ஸமாஜங்களைப் போல அத்துடன் நிறுத்தி விடாமல் மதுபானம், கோமாமிச போஜனம் முதலிய புது ஆசாரங்களும் படித்துக் கொண்டு விட்டான். பார்ப்பதற்கு எருமை போலவே கொழுத்து வெகு குரூபியாக இருப்பவன். மஹாமூடன். குரூர சிந்தை யுடையவன்.

இவனிடம் ஸ்வர்ணகுமாரியின் தந்தை செல்வம்பற்றி விருப்புக் கொண்ட போதிலும் நமது ஸ்வர்ணத்தின் கோமள நெஞ்சு காதலுறுதல் எங்ஙனம் இயலும்? நிற்க.



அத்தியாயம் - 4

மாலை 6 மணி ஆயிற்று. பெரிய வனம்போல் விஸ்தாரமுடைய சோலையினிடையிலே ஓர் அழகிய கொடிவீட்டின்கண் ஸ்வர்ணகுமாரி தனியே உட்கார்ந்திருக்கின்றாள். ஹேம சந்திரன் வந்து சேர்ந்தான்.

'பெண்ணே! இப்பொழுது உன் மனது எப்படியிருக்கிறது?'

'சரிதான்! சிறிது நாற்காலியைச் சற்றே விலகிப் போட்டுக்கொண்டு பேசவேண்டும்.'

'அடடா! இந்தக் குணம் இன்னும் மாறவில்லைபோல் இருக்கிறதே! ஸூரிய பாபு நீ சரிப்பட்டு வந்துவிட்டாயென்று சொன்னாரே.'

'ஆமாம்! அவருடைய கட்டாயத்தின் பேரில் சரிப்பட்டு விட்டேன்.'

'ஆனால், என்னை விவாகம் செய்து கொள்வதில் உன் மனதிற்குத் திருப்தி கிடையாதோ?'

'கிடையாது.'

'அது எப்படியேனும் போகட்டும். உன் தகப்பனார் பலவந்தத்தின் பேரிலாவது நீ என்னை விவாகம் செய்து கொள்ளப் போவது நிச்சயந்தானே?'

'ஆமாம்.'

'சபாஷ்! ஸ்வர்ணா, மெத்த சந்தோஷம். நீ இனி என் மனைவிதானே! அடடா என்ன சௌந்தரியம்! என்ன செளந்தரியம்! உன்னைப் பெறுவதற்குப் பட்ட பாடெல்லாம் தகும்! தகும்! கண்ணே ஒரு முத்தம் தரமாட்டாயா?'

'நாற்காலியை விலகிப் போட்டுக் கொள்ளும்.'

'நீ எனக்கு மனைவியென்பதோ நிச்சயமாய் விட்டது. மூடபக்தியுள்ள ஹிந்துக்களைப் போல் நாம் விவாகச் சடங்குகளுக்குக் காத்திருப்பது அவசியமில்லையல்லவா? விவாஹ பலனை இப்போதே ஏன் அனுபவித்துக் கொள்ளக் கூடாது? இனி உனது திவ்விய சரீரம் என்னுடையதுதானே!'

'விவாக தினத்திலேயே நான் இறந்து போய் விட்டால் எனது சரீரம் உமதாகமாட்டா தல்லவா?'

'அப்படியா யோசிக்கிறாய்? ஆனால் விவாகப் பயனை இப்பொழுதே நுகர்ந்தறிகின்றேன்' என்று சொல்லி ஹேமசந்திரன் பலவந்தமாகத் தழுவக் கையெடுக்கின்றான்.

ஸ்வர்ணகுமாரி 'கோ கோ' என்றலறத் தொடங்கிவிட்டாள்.

திடீரென்று கொடிமாடத்திற்குப் பின்னே புதரில் பதுங்கி நின்ற மனோரஞ்ஜனன் கையும் தடியுமாக வந்து ஹேமசந்திர பாபுவைப் பிடித்து வெளியே தள்ளி நையப் புடைத்தான். இந்தக் கலவரையிலே தந்தையாகிய ஸூரியகாந்த பாபுவும் வந்துவிட்டார். மகள் கீழே மூர்ச்சையுண்டு கிடக்கிறாள். வரும்போது குடித்து வந்த கள்ளின் வெறியாலும், அடிபட்ட கோபத் தாலும் ஹேமச்சந்திரன் ஏதோ வாய்க்கு வந்தபடியுளறினான்.

உடனே ஸூரியகாந்தர் மனோரஞ்ஜனைப் பார்த்து, ''ஏதடா! பையலே நீ இங்கே ஏன் வந்தாய்? இதெல்லாம் என்ன குழப்பம்'' என்று கேட்டார்.

மனோரஞ்ஜனன், ''ஐயா, உமது குமாரத்தி மூர்ச்சையுண்டு விழுந்து கிடக்கிறாள். இன்னும் சிறிது நேரம் கவனியாமலிருந்தால் மிகவும் அபாயம் நேர்ந்துவிடும். அதற்கு வேண்டிய ஏற்பாடு செய்யும். மற்ற விஷயங்கள் பிறகு பேசிக்கொள்ளலாம்'' என்றான்.

அதன்படியே ஸூரியாகாந்தர் மகளை வீட்டிற்கெடுத்துச் சென்று வேண்டிய சிகிச்சைகள் செய்ததின் பேரில் ஸ்வர்ணகுமாரிக்கு மூர்ச்சை தெளிந்தது. இரண்டு மணிநேரத்திற்கப்பால் ஸூரிய பாபு வந்த மகளிடம் விசாரணை செய்ததில், அவள் உண்மையாக நடந்த விஷயங்களையெல்லாம் தெரிவித்தாள்.

அவள் சொல்வதெல்லாம் மெய்யென்று அவருக்குப் புலப்பட்டு விட்டது. ''அடடடா! நமது குடும்பத்திற்குப் பெரிய அவமானமிழைக்கத் தெரிந்த பாதகனுக்கா பெண் கொடுக்க எண்ணியிருந்தேன்?" என்று தம்மைத் தாமே நொந்து கொண்டு ஸூரியகாந்தர் சென்று விட்டார்.

மறுநாட் காலை மகளிடம் வந்து, ''பெண்ணே உனது மனோரஞ்ஜனனை நான் நேற்றுதான் நன்றாக உற்றுப் பார்த்தேன். அவன் செல்வமில்லாது வறியனாயிருந்த போதிலும் ரூபத்தினாலும் அறிவினாலும் நமக்கு மருமகனாயிருப்பதற்கு யோக்கியதையுடையவனாகவே காணப்படுகின்றான். அவன் ஹிந்து மார்க்கத்தினின்றும் நீங்கிப் பிரம்ம சமாஜத்தில் சேர்ந்து கொள்ளும் பக்ஷத்தில் உங்களிருவருக்கும் விவாஹம் முடித்து வைப்பதில் எனக்கு யாதொரு ஆக்ஷேபமும் கிடையாதென்று அவனிடம் தெரிவித்துவிடு.''

இது முறையே மனோரஞ்ஜனுக்குக் தெரிவிக்கப்பட்டது. ஆயினுமென்ன பயன்? மனோரஞ்ஜனன் தான் பிரம்ம ஸமாஜத்தில் சேர்ந்து கொள்வானாயின் தனது தாய் மனமுடைந்து இறந்து போவாளென்பதை நன்றாக அறிவான்.

எனவே, தாயினிடத்து அன்பு ஒருபுறமும் ஸ்வர்ண குமாரியின் மீது மையல் மற்றொரு புறமும் அவனது மனதை இழுக்க இன்ன செய்வதெனத் தெரியாமல் திகைப்பனாயினான். இவ்வாறே ஒன்றரை வருஷகாலம் கழிந்துவிட்டது. இவன் கடைசிவரை பிரம்ம சமாஜத்தில் சேராமலேயிருந்துவிடும் பக்ஷத்தில் தான் விவாகம் செய்து கொள்ளாமலே யிருந்துவிட வேண்டுமென ஸ்வர்ணகுமாரி நிச்சயித்துக் கொண்டிருந்தாள்.

அத்தியாயம் - 5

இப்படி யிருக்க 1906ம் வருஷம் கல்கத்தாவிலே காளிபூஜை திருவிழா நடந்து கொண்டிருந்த (நவராத்திரி) காலத்திலே ஸ்வர்ணகுமாரி தனது வீட்டு அடியிலே ஒரு பஞ்சணை மீது சாய்ந்து காண்டு 'ஸந்தியா' என்னும் தினசரிப் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தாள். அதில் திடீரென அவளது கண்களுக்குப் பின்வரும் குறிப்புத் தென் பட்டது.

''சாந்தபூர்வாசியாகிய ஸ்ரீயுத மனோரஞ்ஜன பானர்ஜி நேற்று மாலை பிரம்ம ஸமாஜத்திலே சேர்ந்து விட்டார். இவர் மிகுந்த திறமையும் புகழுமுள்ள அதி வாலிபராதலால் இவர் ஹிந்து மார்க்கத்தினின்றும் பிரிந்துவிட்ட விஷயம் எங்கே பார்த்தாலும் பேச்சாய் கிடக்கிறது.''

மேற்கண்ட வரிகளைப் படித்தவுடனே ஸ்வர்ணகுமாரிக்குப் புளகமுண்டாய்விட்டது. ஆனந்த பரவசத்திலே அமிழ்ந்துவிட்டாள். உடனே மற்றோரிடத்தில் மனோரஞ்ஜனனுடைய பெயர் காணப்பட்டது. அதென்ன வென்று பார்த்தாள். அதிலே,

'சென்ற சில தினங்களாக லோகமான்ய பாலகங்காதர திலகர் புனாவிலிருந்து நமது நகரத்திற்கு வந்து சுதேசீயம், ஸ்வராஜ்யம் என்ற பெருவிஷயங்களைப் பற்றிப் பதினாயிரக் கணக்கான ஜனங்களின் முன்பு உபந்நியாசங்கள் புரிந்து வருகின்றார். இவருக்கு நடக்கும் உபசாரங்களும், சிறப்புகளும் முடியரசர்களுக்குக்கூட நடக்கமாட்டா. அப்படியிருக்க இவருடைய கோட்பாடுகளுக்கு விரோதமாகச் சில வாலிபர்கள் சாந்த்பூர் ஸ்ரீ மனோரஞ்ஜன் பானர்ஜியின் அககிராசனத்தின் கீழ் ஒரு எதிர்க் கூட்டங் கூடி இந்நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் சில நிந்தனைத் தீர்மானங்கள் செய்து கொண்டார்களென அறிந்து விசனமடைகிறோம்' என்று எழுதப்பட்டிருந்தது.

இதைக் கண்டவுடனே ஸ்வர்ணகுமாரிக்கு மனம் பதைத்து விட்டது. இவள் குழந்தை முதலாகவே ஸ்ரீ பாலகங்காதர திலகரைத் தெய்வம்போலக் கருதிவந்தவள். இவளுக்கு மனோரஞ்ஜனனிடமிருந்த அன்பைக் காட்டிலும் சுதேசத்தின் மீதுள்ள அன்பு பதினாயிர மடங்கு வன்மையுடையது. 'சுதேச பக்தர்களின் திலகமாகிய பாலகங்காதரத் திலகருக்கு விரோதமாக உழைக்கின்ற ஸ்வஜன விரோதியினிடமா நாம் இத்தனை நாள் காதல் கொண்டிருந்தோம்? இவனையா மாசற்ற குமரனென்றெண்ணி மதி மயங்கினோம்' என்று பலவாறு யோசித்து மிகவும் வருந்துவளாயினாள்.

இவள் நிலைமை இங்ஙனமாக, தன் கண்போல் வளர்த்த ஒரே ஆசைக் குமாரன் ஹிந்து மார்க்கத்தை விட்டு நீங்கிவிட்டானென்று கேள்வியுற்றவுடனே மனோரஞ்சஜனனுடைய தாய் மூர்ச்சித்து விழுந்து இறந்து போய்விட்டாள்.

இந்தச் செய்தி கேட்டவுடனே அலறிக் கொண்டு சாந்த்பூருக்கு வந்த மனோரஞ்ஜனன் தனது தாயின் கிரியைகளையெல்லாம் ஹிந்து ஆசாரங்களின்படி ஒரு பந்துவின் மூலமாக நடப்பித்துவிட்டு ஸ்வர்ணகுமாரியைப் பார்க்கச் சென்றான்.

அங்கே வீட்டில் ஸ்வர்ணகுமாரியில்லை. அவளுடைய தந்தை பின்வரும் கடிதத்தை மனோரஞ்ஜனனிடம் கொடுத்தார்.

''எனது காதலனாயிருந்த மனோரஞ்ஜனனுக்கு,

நெடுங்காலமாக உறங்கி நின்ற நமது சுதேச மாதா இப்போது கண்விழித்திருக்கிறாள். நமது நாடு மறுபடியும் பூர்வாகல மஹிமைக்கு வருவதற்குரிய அரிய முயற்சிகள் செய்து வருகின்றது. இந்த முயற்சிகளுக்கு விரோதமிழைக்கும் ஸ்வஜனத் துரோகிகளின் கூட்டத்திலே நீயும் சேர்ந்து விட்டாயென்று கேள்வியுற்றவுடனே எனது நெஞ்சம் உடைந்து போய்விட்டது. இனி உன்னைப் பற்றி வேறு விதமான பிரஸ்தாபம் கேட்கும் வரை உன் முகத்திலே விழிக்கமாட்டேன். பெற்ற தாய்க்குச் சமானமான தாய்நாட்டின் மீது அன்பு செலுத்தாத நீ என்மீது என்ன அன்பு செலுத்தப் போகிறாய்? நமது வாலிப எண்ணங்களைப் பற்றி நீ திருந்திய பிறகு யோசனை செய்துகொள்ளலாம். நான் காசியிலே எங்கள் அத்தை வீட்டிற்குச் சென்று ஒரு வருஷம் தங்கியிருக்கப் போகிறேன். அங்கே நீ என்னை வந்து பாராதிருக்கும்படி பிரார்த்தனை செய்துகொள்ளுகிறேன்.''

இங்ஙனம் இக்கடிதத்தைப் பார்த்தவுடனே மனோரஞ்ஜனன் மனம் தீயிலகப்பட்ட புழுவைப் போலத் துடிக்கலாயிற்று.

இப்போது மனோரஞ்ஜனன் புனாவிலே திலகரிடம் தேசபக்திப் பாடல்கள் படித்து வருகிறானென்று கேள்வியுறுகின்றோம்.

********

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்