Feb 17, 2010

தமிழ்ப் படைப்புலகம் - சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி

இக்கூட்டத்தின் தலைவரும் என் நண்பருமான பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய திருமதி ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களுக்கும், பிற நண்பர்களுக்கும் என் அன்பையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்கருத்தரங்கை உருவாக்கிய நண்பர் பச்சைமால் அவர்களுக்கும் அவருடன் உடனின்று செயல்பட்ட நண்பர்களுக்கும் என் படைப்புலகத்தைத் தங்கள் மதிப்பீடுகள் மூலம் வாசகர்கள் முன் வைத்த எழுத்தாளர் நண்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.sura

தமிழ்ப் படைப்புலகம் பற்றி ஒருசில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். முற்றாகவோ முடிவாகவோ சொல்ல எனக்கு அதிகம் இல்லை. நான் இக்கருத்துக்களை முன் வைப்பதனாலேயே நீங்கள் அவற்றை  ஏற்றுக் கொண்டுவிடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இல்லை. என் கருத்துக்களை நீங்கள் பரிசீலனை செய்து பார்க்க வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே கொண்டிருக்கிறேன். ஏற்கும் கருத்துக்களை ஏற்று, மறுக்கும் கருத்துக்களை நீங்கள் மறந்துவிடலாம். ஏற்கும் கருத்துக்களைப் பற்றி நீங்கள் தொடர்ந்து சிந்தித்து அவற்றையேனும் உங்களால் இயன்ற அளவு தமிழ்ச் சமூகத்தில் பரப்பலாம்.

இலக்கியம், கலைகள், திரைப்படம், தொலைக்காட்சி, கல்வித்துறை இவை சார்ந்து நாம் வெகுவாகப் பின்தங்கி நிற்கிறோம் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. இந்தப் பின்தங்கலுக்கான காரணங்கள் பற்றி யோசித்து வருகிறேன். சில காரணங்கள் தட்டுப்படுகின்றன. ஒவ்வொரு துறை சார்ந்தும் நாம் பெற்றிருக்கும் அறிவு குறைவு. இத் துறைகள் பற்றி என்னைவிடவும் அதிகம் அறிந்தவர்கள் தமிழ்நாட்டில் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் துறை சார்ந்த சீரழிவுகளை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள். அவ்வாறு பகிரங்கப்படுத்துவது பணிகள் சார்ந்து அவர்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். துறையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் தத்தம் துறைகளில் உள்ள பிரச்சனைகளைச் சொல்லலாமே என்று தோன்றுகிறது. சொல்லலாம். ஆனால் சொல்வதில்லை என்பது நமக்குத் தெரியும். விமர்சனம் என்பது வம்பு என்றும், தமிழ் ஜென்டில்மேன் விமர்சனத்தை முன் வைக்காதவன் என்றும் நமக்குள் ஒரு எண்ணம் இருக்கிறது. ஜென்டில்மேன்கள் அழித்த கலாச்சாரத்தைத்தான் இப்போது நாம் எதிர்கொண்டு வருகிறோம்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். நாகர்கோவிலை அடுத்திருக்கும் பாம்பன்விளை என்ற இடத்தில் எழுத்தாள நண்பர்கள் வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை கூடிப் பேசுகிறோம். மிக சமீபத்தில் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். நிகழ்ச்சி நிரல் என்று திட்டவட்டமாக எதுவுமில்லை. கல்வித்துறையைப் பற்றிய விவாதம் இயற்கையாக வந்தது. கல்வித்துறைப் பற்றி எனக்கு உயர்வான எண்ணம் ஒன்றுமில்லை. வளர்ந்த சமூகங்களில் கல்வித் துறைகள் எவ்வாறு இயங்கி வருகின்றனவோ அந்த அளவுக்கு நம்மால் இயங்க முடியாவிட்டாலும் அவர்கள் நிறுவியிருக்கும் தரத்தின் முக்கால் பங்கை அல்லது அரைப்பங்கை நாம் எட்டிவிட்டாலே நம் சமூகத்தில் பெரும் மாற்றங்கள் நிகழும். பாம்பன்விளையில் கல்வியின் சீரழிவைப் பற்றிப் பேசியவர்கள் ஆசிரியர்கள். மேல்நிலைப் படிப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் முன்வைக்கும் செய்திகள் ஒவ்வொன்றுமே மிகப் பெரிய அதிர்ச்சியை எனக்கு அளித்தன. அதாவது கல்வித்துறை பணிகள் செம்மையாக நடைபெறவில்லை என்ற எண்ணத்தில் இருந்து கொண்டிருக்கும் எனக்கே அவை அதிர்ச்சியாக இருந்தன. பேராசிரியர் ஜேசுதாசன் அவர்கள், மதிப்பிற்குரிய ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்கள் போன்ற நேற்றைய லட்சியவாதிகளான ஆசிரியர்கள் பாம்பன்விளையில் கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் முன்வைத்த விமர்சனங்களைக் கேட்டிருந்தால் தாங்கிக் கொள்ள இயலாத வேதனையை அடைந்திருப்பார்கள். அந்த ஆசிரியர்கள் முன் வைத்த செய்திகளை நான் இங்கு சொல்லவில்லை. அவை என் பேச்சின் மையம் அல்ல. தமிழ் சமூகத்தை முன்னின்று வளர்க்க வேண்டிய துறை வெகுவாகப் பின்தங்கிச் சிறுமைக்கும் சீரழிவுக்கும் ஆளாகிவிட்டது என்பதை மட்டுமே நினைவுபடுத்துகிறேன்.

தமிழில் எண்ணற்ற இதழ்கள் வெளிவருகின்றன. ஒரு லட்சம், இரண்டு லட்சம், மூன்று லட்சம், நான்கு லட்சம் என்று அவை விற்பனையாகின்றன. எல்லா இதழ்களின் மொத்த விற்பனையையும் கூட்டிப் பார்த்தால் மாதம் ஒன்றுக்கு விற்பனையாகிற இதழ்கள் ஒரு கோடிக்கு மேலேயே இருக்கும். மாதம் ஒன்றுக்குத் தமிழர்கள் இந்தச் சஞ்சிகைகளை வாங்குவதற்காகச் செலவிடும் தொகை ஒரு சில கோடிகள் இருக்கும். அத்தனை இதழ்களின் பக்கங்களும் சீரான புத்தகங்களாக மறு அச்சாக்கம் பெற்றால் ஆயிரம் பக்கங்கள் கொண்ட எத்தனை தொகுதிகள் வரும் என்பதை எனக்குக் கணக்கிட்டுச் சொல்லத் தெரியவில்லை. இதற்குப் பயன்பட்ட காகிதங்களுக்காக எத்தனை மரங்கள் வெட்டப்பட்டிருக்கும் என்பதையும் எனக்குக் கணக்கிட்டுச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஒன்று எனக்குத் தெரியும். இத்தனை பக்கங்களில் தமிழ் வாழ்வைப் பற்றித் தமிழனைச் சிந்திக்க வைக்கிற அல்லது மிக முக்கியமான அனுபவத்துக்கு அவனை ஆளாக்குகிற அல்லது கூரான புதிய மொழியுடன் அவனை இணைக்கின்ற ஒரு பக்கம் கூட கிடையாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

லாபத்திற்காகக் கலாச்சாரத்தைச் சீரழிப்பவர்கள் இவர்கள். லாபத்திற்காக மதிப்பீடுகளை அழிப்பவர்கள். பாலியல் வக்கிரங்களைத் தூண்டிக் கொண்டிருப்பவர்கள். பெண்மையை இழிவுபடுத்திக் கொண்டிருப்பவர்கள். சமூகத்திலுள்ள பெரிய மனிதர்களுக்கு எதிராகவோ அல்லது அரசியல்வாதிகளுக்கு எதிராகவோ இவர்களில் சிலர் முன் வைக்கும் செய்திகள் உங்கள் நினைவுக்கு வரலாம். பரபரப்பான செய்திகள் இதழின் விற்பனையைக் கூட்டும் என்ற நியதியில் நம்பிக்கை வைத்துச் செய்யப்படும் காரியங்கள் இவை. அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. இச்செய்திகளை வெளியிட அவர்கள் பயன்படுத்தும் மொழி உண்மையைத் தொடுவதற்கே வலுவற்றது.

தமிழில் நல்ல சிறுகதைகள் எழுத இன்றும் சிலர் முயன்று கொண்டிருக்கிறார்கள். சிலர் நல்ல நாவல்கள் எழுத முயன்று கொண்டிருக்கிறார்கள். அறிவியல், வரலாறு, இலக்கியம் சார்ந்து தரமான கட்டுரைகளை எழுத முயன்று கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய எழுத்தை எந்தப் பிரபல பத்திரிகையும் வெளியிடாது. பல மொழிகளிலும் பிரபல பத்திரிகைகள் நடுத்தரமான எழுத்துக்களுக்கு ஒருசில பக்கங்களையும் தீவிரமான எழுத்துக்களுக்கு ஒருசில பக்கங்களையும் ஒதுக்கி வருகின்றன. தமிழ் இதழ்களிலோ தீவிர எழுத்துக்கோ நடுத்தர எழுத்துக்கோ இடமில்லை. கேளிக்கை எழுத்துக்களுக்கு மட்டுமே இடம் தரப்படுகிறது. மிகச் சிறந்த நூல் ஒன்று தமிழில் வெளிவந்திருக்கும் தகவலைக் கூட பிரபலமான பத்திரிகைகள் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியாது. தமிழில் பொருட்படுத்தத் தகுந்த எழுத்துக்கள் எல்லாம் பெரும்பாலும் சிற்றிதழ்களில்தான் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் அதிகபட்சம் ஐயாயிரம் வாசகர்களைச் சென்றடையும் வாய்ப்பையே தீவிர எழுத்தாளர்கள் பெறும் நிலை உள்ளது. பிரபல கேளிக்கை எழுத்தாளர்கள் வளைத்துப் போட்டிருக்கும் வாசகர்களின் எண்ணிக்கை பத்து லட்சமாகக் கூட இருக்கலாம். இவ்வளவு மோசமான ஒடுக்குமுறையிலும் தமிழ் இலக்கியம் உயிரை தன் குரல் வளையில் தக்க வைத்துக் கொண்டிருப்பது உலக அதிசயங்களில் ஒன்று.

தமிழில் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கவிதைகள் எல்லாமே பொதுவாக இன்று பலவீனமாகத்தான் இருக்கின்றன. உண்மையான படைப்பாளிகளை ஒரு சமூகம் அங்கீகரிக்க மறுத்து ஒதுக்கித் தள்ளும்போது இவ்வாறு நிகழ்ந்துவிடுவது இயற்கையான காரியம்தான். சிறுகதைகளைவிடவும், நாவல்களை விடவும், கவிதைகள் பலவீனமாக இருக்கின்றன. கடந்த நாலைந்து வருடங்களில் சற்றே வலுப்பெற்றிருப்பது கட்டுரை இலக்கியம் மட்டுமே. கட்டுரை இலக்கியம் இந்த அளவுக்கு இதற்கு முன் எப்போதும் வலுப்பெற்றிருந்ததில்லை என்று கூடச் சொல்லலாம். இவ்வாறு நான் சொல்வதில் சற்று மிகை உண்டு. ஒரு உண்மையை அழுத்த அந்த மிகை தேவையாக இருக்கிறது.

இந்தக் கட்டுரைகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். சுயசிந்தனை சார்ந்த கட்டுரைகள் என்றும் தகவல்களைத் தொகுத்துத் தரும் கட்டுரைகள் என்றும் பிரிக்கலாம். நாம் அறிந்திராத சிந்தனை ஒன்றை அறிந்து அது நம் வாழ்வுக்கு ஊட்டம் தரும் என்று நம்பி அதனைத் தன்னளவில் செரித்துக் கொண்டு அச் சிந்தனைகளைத் தமிழ் வாழ்வோடு இணைக்கும் விவேகத்தை வெளிப்படுத்தும் கட்டுரைகளையே சுய சிந்தனை சார்ந்த கட்டுரைகள் என்று கூறுகிறேன். இங்கு கட்டுரையாளரின் குறிக்கோள் தமிழ் வாழ்வின் மேன்மை. மற்றொரு வகை நாம் அறிந்திராத சிந்தனைகளை, அந்த சிந்தனைகளின் புதுமைக்காகவே திரட்டித் தருவது. இங்கு குறிக்கோள், எழுத்தாளர் தன்னை அறிவாளி என்று காட்டிக் கொள்வது. ஆக, ஒட்டு மொத்தமாகப் பார்க்கிறபோது கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை ஆகிய இலக்கிய வடிவங்களில் சுய சிந்தனைகள் சார்ந்த கடடுரைகள் மட்டுமே ஆறுதல் தரும் அளவில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இன்றையப் படைப்புக்களில் சற்று வலுவானவற்றை ஒருவர் சுட்டிக்காட்டி என் வாதத்தை மறுக்க முன்வரலாம். அதுபோன்ற மறுப்பு தோன்றுவதை நான் வரவேற்கிறேன். ஏனெனில் அப்போது இன்றைய இலக்கியப் படைப்புக்களை ஏன் பலவீனமானவையாகக் கருதுகிறேன் என்பதை விளக்க எனக்குக் கூடுதல் சந்தர்ப்பம் கிடைக்கும். மேலும் எந்த இலக்கிய உருவங்கள் சார்ந்தும் வெளிப்படும் விதிவிலக்குகளை வைத்து இலக்கியத்தின் பொதுக் குணத்தையோ வலுவையோ நிர்ணயிக்க முடியாது. நல்ல படைப்புக்கள் விதிவிலக்காக இருப்பதே படைப்புக்கள் பலவீனமானதாக இருக்கின்றன என்பதைத்தான் காட்டுகிறது.

மேலும் சாதனைகளை அளக்கத் துல்லியமான அளவுகோல்கள் இல்லை. நடுத்தரமான படைப்புக்களை மீண்டும் மீண்டும் படித்து ஒருவன் அனுபவம் பெறும்போது நடுத்தரமான எழுத்தே அவனது அதிகபட்ச எல்லையாகிவிடும். கேளிக்கை எழுத்தில் ஒருவன் முங்கி முங்கி எழுந்து கொண்டிருந்தால் அவனிடம் ஒரு சிறந்த படைப்பைத் தரும்போது அப்படைப்பில் கேளிக்கை இல்லையென்று சொல்லி அவன் அதை உதறிவிடுவான். தமிழன் அவனுடைய நடுத்தரமான படைப்புக்களுக்கு ஏற்ப அவனுடைய பார்வையைச் சுருக்கிக் கொண்டு வருகிறான். நடுத்தரமான படைப்புக்களை மேலான படைப்புக்கள் என்று சாதிக்க தங்கள் பார்வைகளை எந்த அளவுக்குச் சுருக்கிக் கொள்ள வேண்டுமோ அந்த அளவிற்குப் படைப்பாளிகள் சுருக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படைப்பாளிகளை ஊக்குவித்து உரம்போட இலக்கிய விமர்சனத்தின் ஆனா ஆவன்னா கூடத் தெரியாத விமர்சகப் பெருந்தகைகளும் இருக்கிறார்கள். மேலான படைப்புக்கள் வரும்போது அவை தங்கள் நடுத்தரமான படைப்புக்களைப் பின்னகர்த்திவிடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். இவர்களைத் தூக்கிப்பிடிக்கும் விமர்சகர்களுக்கும் இவ்வகையான படைப்பாளிக்கும் தனியான வாழ்வு இல்லாததால் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு தங்களுக்கு ஒரு இடத்தைப் பிடித்துக்கொள்ள அலைகிறார்கள்.

ஒரு படைப்பாளிக்கு நேற்றையத் தமிழ் சார்ந்த சவால் மனதில் இல்லாவிட்டால் அவனைப் படைப்பாளி என்றே சொல்ல முடியாது. தொல்காப்பியன் வரையறுத்த மொழி இது. நுட்பமான கருத்துக்களை மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் வேகமாகவும் சொன்ன வள்ளுவன் வளர்த்த மொழி. கம்பனும், இளங்கோவும் சாதனைகள் புரிந்த மொழி. இந்த நூற்றாண்டில் மட்டும் சிந்தனைகள் சார்ந்தும் சிறுகதைகள் சார்ந்தும் கவிதைகள் சார்ந்தும் பல கலைஞர்கள் சாதனை புரிந்த மொழி. உலக மொழிகளில் மிகத் தொன்மையான மொழி. நம் மக்கள் தொகை உலக இனங்கள் பலவற்றையும் தாண்டி நிற்பது. இந்தப் பின்னணிகள் எல்லாம் படைப்பாளியின் மனதில் இருந்தால்தான் அவனுக்கு சவால் இருக்கும்.

நான் உருவாக்கும் விமர்சனக் கருத்துக்கள் என்னுடைய நடுத்தரமான படைப்புக்களின் ஆயுளைக் கூட்டுவதற்காக உருவாக்கப்படுபவை அல்ல. என் விமர்சனக் கருத்துக்களை என் வாசகர் சரிவரப் புரிந்து கொள்கிற போது அவனிடமிருந்து முதல் ஆபத்து எனக்கு வருகிறது. என் விமர்சனக் கருத்துக்களை அறியாத நிலையில் மிகச் சிறப்பாக நாவல்கள் எழுதியிருக்கிறீர்கள் என்று அவன் என்னைப் பாராட்டுகிறான். என் விமர்சனக் கருத்துக்களைத் தெரிந்து கொண்ட நிலையில் சிறந்த உலக நாவல்கள் போலவோ, சிறந்த இந்திய நாவல்கள் போலவோ ஒன்றை ஏன் உங்களால் படைக்க இயலவில்லை என்று அவன் என்னிடம் கேட்கிறான். என்னை நிராகரிக்க நான் அவனுக்குக் கற்றுத் தந்து, நான் எழுதவிருக்கும் படைப்புக்கள் மூலம் என்னை அவனால் நிராகரிக்க முடியாமல் ஆக்குவதே நான் ஏற்றுக் கொண்டிருக்கும் சவால்.

எல்லா மொழிகளிலும் கவிதைகளும், சிறுகதைகளும், நாவல்களும், நாடகங்களும், இலக்கிய விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கின்றன. இவற்றை வைத்து அம்மொழி சார்ந்த இலக்கியம் மதிப்பிடப்படுகிறது. பொதுவான உண்மை இது என்றாலுங் கூட இன்று உலக மொழிகளில் அம்மொழி சார்ந்த இலக்கியம் உறுதிப்பட, அம்மொழியில் வெளிவந்துள்ள நாவல்கள்தான் அதிகப் பங்காற்றியிருக்கிறது. கவிதையைவிட, சிறுகதையைவிட, நாடகங்களைவிட அதிகப் பங்காற்றக்கூடியவையாக நாவல்கள் இருக்கின்றன.

இன்றைய உலகில் நாடுகளின் எல்லைகள் மங்கிப் போய்விட்டன. மொழிபெயர்ப்புகள் மூலம் மொழிகளின் எல்லைகள் மங்கிப் போய்விட்டன. கடல்கள் தாண்டிப் பறக்க மனிதன் கற்றுக் கொண்ட பின் தேசங்கள் மிகவும் நெருங்கி வந்துவிட்டன. மனித உறவுக்கு உலகத் தளம் உறுதியாகிவிட்டது. வாசிப்பு மூலம் உறுதிப்படும் உறவு இது. மனிதனுடைய பல அடிப்படையான பிரச்சினைகள் உலகம் சார்ந்த பிரச்சினைகளாக இருக்கின்றன. எதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற கேள்வி இன்று உலக மனிதனின் பொதுக் கேள்வியாகிவிட்டது. இந்தக் கேள்விக்கு பின்னால் நிற்கும் கேள்வி எதற்காகச் சீரழிந்து கொண்டிருக்கிறேன் என்பதுதான். அதற்கும் பின்னால் நிற்கும் கேள்வி சீரழிவிற்கு நான் ஏன் துணை நிற்கிறேன் என்பதுதான். மற்றொரு கேள்வி நான் யார் என்பது. என் அடையாளம் என்ன என்பது. என் முகம் எங்கே என்பது. மிகப் பெரிய சந்தையில் மிகப் பெரிய சந்தடியில் பணம் சார்ந்த போட்டா போட்டியில், புகழ் சார்ந்த போட்டா போட்டியில், பொருட்களை வாங்கிக் குவிக்கும் போட்டா போட்டியில், நான் என்னை இழந்து கொண்டிருக்கிறேனா என்பது.

தமிழனைப் பொறுத்தவரையில் இந்தக் கேள்விகள் அவனிடம் இல்லையென்றும் அவன் துருத்தியில் சோற்றை அடைத்து அவன் இடுப்பில் கெளபீனத்தைக் கட்டிவிட்டால் நுகத்தடியை ஒருபோதும் கழற்ற மாட்டான் என்றும் பலர் கற்பனை செய்து கொண்டிருக்கலாம். உலக மக்களுக்கு இருக்கக்கூடிய சகல பிரச்சினைகளும் SUNDARA தமிழனுக்கும் இருக்கின்றன. ஆனால் அந்தப் பிரச்சினைகள் இங்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை. அந்தப் பிரச்சினைகளுக்கு இன்று மொழி உருவம் இல்லை. ஒரு பிரச்சினைக்கு மொழி உருவம் இல்லையென்றால் அந்தப் பிரச்சினையில் அழுந்தி கிடப்பவனால் கூட அவன் பிரச்சினையைத் தெரிந்து கொள்ள இயலாது. பிரச்சினைகளுக்கு மொழி உருவம் ஏற்படாத நிலையில் அவற்றுக்குப் பரிகாரம் காண முடியாது. தான் போக வேண்டிய திசையும் அவனுக்குத் தட்டுப்படாது. துன்பத்தைத் துல்லியமாக வரையறுக்கும் மொழியற்ற நிலையில் எதார்த்தத்தை எதிர் கொள்ள முடியாதவனாக ஆகிவிட்டான் தமிழன். இந்த நெருக்கடியிலிருந்து உருவாகும் மனக் கலக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள அவன் போதை வஸ்துக்களைத் தழுவிக் கொள்கிறான். போதை வஸ்து ரசாயனத் திடப் பொருளாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. போதை வஸ்து திரவமாக இருக்க வேண்டுமென்பதுமில்லை. திரைப்படங்களில் வெளிப்படும் பெண்ணுடல், உடலுறவு சமிக்ஞைகள், வன்முறை, இதழ்கள் தரும் கிளுகிளுப்பு, மேடையில் முழங்கும் மொழி அலங்காரம், லாட்டரிச் சீட்டு, அரசியல், திரையுலக கிசுகிசுப்புகள், வம்புகளில் கொள்ளும் ஆர்வம், மனதில் கற்பனை எதிரிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் எல்லாமே எதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாத மலட்டுத்தனம் உருவாக்கித் தரும் போதை வஸ்துக்களே. இந்தப் போதை வஸ்துக்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தாத தமிழ் ஜென்டில்மேன் ஒருவன் கூட இன்று தமிழகத்தில் இல்லை. பலவற்றையும் ஏக காலத்தில் பயன்படுத்தி வருபவர்கள் எங்கும் நீக்கமற காண முடிகிறது.

தமிழ் வாழ்வு நமக்கு இரண்டு முகங்களைத் தந்திருக்கின்றன. ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம். மேடையில், சமூகக் கண்களின் முன், ஜாதியை முற்றாகத் தாண்டிவிட்டதான பாவனையை நாம் கொள்கிறோம். இங்கு ஜாதியைத் தாண்ட முயன்று கொண்டிருப்பதாகக் கூறும் நேர்மையாளர்களைக் கூட அவ்வளவாகப் பார்க்கக் கிடைப்பதில்லை. ஆனால் நம் குடும்பங்கள் ஜாதியில் அழுந்திக் கிடப்பது நமக்குத் தெரியும். நம் உறவும் சுற்றமும் ஜாதியைத் தக்க வைத்துக் கொள்ள பிரயாசை மேற்கொண்டு வருவது நமக்குத் தெரியும். குடும்பத்திற்காக முகமும் குடும்பத்திற்கு வெளியே முகமூடியும் நமக்கு இருக்கின்றன. ஜாதியை விட்டு மதத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டாலும் இதே கதைதான். படைப்பாளியாக நாம் போற்றுவது வள்ளுவனை, கம்பனை, இளங்கோவை, பாரதியை, பாரதிதாசனை. நாம் படிப்பது வணிக இதழ்களில் வரும் தொடர்கதைகளை. கிளுகிளுப்பூட்டும் எழுத்துக்களை. இலக்கியத்தைப் போற்றுபவர்கள் உண்மையாகவே சிறந்த நவீன படைப்புக்களை வாங்கத் தொடங்கினால் நல்ல புத்தகங்களின் முதல் பதிப்பு இருபத்தையாயிரம் பிரதிகள் ஆகிவிடும். இப்போது நல்ல புத்தகங்கள் ஆயிரம் பிரதிகள் அச்சேற்றப்பட்டு இரண்டு மூன்று வருடங்களில் அவை விற்று முடிகின்றன. இங்கும் முகமும், முகமூடியும் இருப்பதை நாம் உணரலாம். ஒழுக்கம், பண்பாடு ஆகியவற்றுக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவம் ஒரு பக்கம் மிக அதிகம். கற்பைக் கடைத்தேற்ற தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் பெண் இன்றும் நம் மனங்களில் இலட்சிய உருவமாகவே நிற்கிறாள்.

ஆனால் நாம் எப்போதும் பார்த்துக் கொண்டிருப்பது தொலைக்காட்சி திரைப்படங்களில் வெளிப்படும், நம் பண்பாட்டுக்கு எதிரானவை என்று நாம் நம்பும், காட்சிகளையே. நம் பண்பாட்டை மீறுபவை என்று நாம் கருதும் சொற்களை எழுத்துருவமாக கண்டால் பதறித் துடிக்கும் நாம், நம் பண்பாட்டை மீறும் காட்சிகளைக் குடும்பமாகக் கூடியமர்ந்து ரசித்து மகிழ்கிறோம். இங்கும் முகமும் முகமூடியும் வெளிப்படுகிறது. இவ்வாறு வாழ்வின் தளத்தில் ஒவ்வொரு நிமிடமும் முகமும் முகமூடியும் இணைந்து அவற்றிற்குரிய காரியங்களை மாறி மாறி செய்து கொண்டிருக்கிற போது, எது முகம் எது முகமூடி என்பதில் நமக்கு மிகுந்த குழப்பம் ஏற்படுகிறது. நான் உறங்கும்போது முகமூடி இல்லாமல் உறங்குகிறோம் என்று கற்பனை செய்து கொள்ள எனக்கு ஆசையாக இருந்தாலும் முகமூடிகளை உற்பத்தி செய்யும் ஆழ்மனம், விழித்திருக்கும் நிலையைப் பார்க்கிலும் உறக்கத்தில் அதிகச் சுறுசுறுப்புக் கொள்வதால், அந்த ஆழ்மனங்கள் உருவாக்கும் கனவுகளில் எண்ணற்ற முகமூடிகளை நான் அணிந்திருக்கும் துரதிர்ஷ்டத்தைப் பார்க்க வேண்டியவனாகிறேன்.

தமிழனின் சுய அடையாளம் சார்ந்த பிரச்சினையை அவன் தாய் மொழியை வைத்துப் புரிந்து கொள்ள முயலலாம். தாய் மொழிக்கும் தமிழனுக்குமான உறவு என்ன ? தன் எண்ணங்களைத் தெளிவாகச் சொல்லவும் பிறருடைய எண்ணங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் அவசியமான அளவுக்கு ஒருவன் தாய்மொழியில் பயிற்சி பெற்றிருந்த சமூகத்தை மொழி சார்ந்து அவன் நிம்மதியாக எதிர்கொள்ள வேண்டும். இந்த நிம்மதி தமிழனுக்கு இன்றில்லை. வரலாற்றில் எந்த காலகட்டத்திலேனும் அவன் இந்த நிம்மதியைப் பெற்றிருக்கிறானா என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது. தமிழ் மொழியின் பயிற்சி தராத நிம்மதியை, கெளரவத்தை மற்றொரு மொழியின் பயிற்சி தரும் என்ற நிலை, அந்த நிலை உருவாக்கும் அமைதியின்மை வரலாற்றில் எப்போதும் அவனிடம் இருந்திருக்குமா ? ஒரு சந்தர்ப்பத்தில் அம்மொழி சமஸ்கிருதமாக இருக்கிறது. மற்றொரு சந்தர்ப்பத்தில் தெலுங்காகவோ, கன்னடமாகவோ, மராட்டியாகவோ இருக்கிறது. இப்போது நெடுங்காலமாக அது ஆங்கிலமாக இருக்கிறது. தமிழ் மட்டுமே கற்றவர்கள் அடைந்திருக்கும் அவமானங்கள், இன்றும் அடைந்து வரும் அவமானங்கள் ரகசியமானவை. கற்றிருக்க வேண்டிய ஆங்கிலத்தைக் கற்காமல் போனது தன்னுடைய குறை என்று தமிழன் நம்புவதால் ஆங்கில மொழி சார்ந்து அவன் பட்ட அவமானங்களை அவன் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. அலுவலகங்களில், நீதி மன்றங்களில், மருத்துவமனைகளில் ஆங்கிலம் அவனை அவமானப்படுத்துகிறது. சிறுநீர் என்ற சொல்லைப் பயன்படுத்தும் தமிழனான அலோபதி டாக்டர் ஒருவரைக் கூட நான் இன்று வரையிலும் பார்த்ததில்லை. மிகப் பெரிய தமிழ் புலவர்கள், தங்கள் புலமையின் காரணமாக தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியவர்கள் ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்திற்காக உள்ளூர கூசிக் குறுகிக் கொண்டிருக்கிறார்கள். உலக அரங்கில், இந்திய அரங்கில் தமிழனை தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ள பல நியாயங்கள் இருக்கின்றன. தமிழ் மண்ணிலேயே தமிழனை தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது ஆங்கிலம். தமிழும் ஆங்கிலமும் சார்ந்தும் தமிழனுடைய நெருக்கடியை நாம் பார்க்கலாம். தமிழனுடைய அடிப்படைப் பிரச்சனைகளில் மிக முக்கியமானது சுய அடையாளம் சார்ந்த பிரச்சனையே. 'ஐடென்ட்டி கிரைஸிஸ் ' என்று ஆங்கிலத்தில் சொல்லும் பிரச்சனை. மற்றொன்று வாழ்வியல் நெருக்கடி சார்ந்த பிரச்சனை. 'எக்ஸிஸ்டென்சியல் கிரைசிஸ் ' என்று ஆங்கிலத்தில் சொல்லும் வாழ்வியல் சார்ந்த நெருக்கடி.

தமிழன் தன்னுடைய நெருக்கடிகளைப் பகிரங்கமாக விவாதிக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் இருக்கிறான். இந்த விவாதத்தின் பல்வேறு முகங்கள், மிகப் பெரிய சவாலை ஏற்றுக் கொள்ளும் நாவலாசிரியர்களைச் சார்ந்து இருக்கிறது. நம் வாழ்க்கை சார்ந்த அடிப்படைகளை இதற்கு முன் எவரும் விவாதிக்கவில்லையா ? முதன் முதலாக விவாதிக்கப் போவது நாவலாசிரியர்கள்தானா என்ற கேள்வி எழலாம். விவாதங்கள் நடந்திருக்கின்றன என்றும், நடக்க வேண்டிய தளத்தில் விவாதங்கள் நடக்கவில்லை என்றும் சொல்லலாம். அரசியல், சமூகவியல், வரலாற்றியல் சார்ந்த விமர்சனங்கள் பார்வையில் ஒருமையை வற்புறுத்துபவை. அதாவது ஒரு குரலின் நீட்சியாக நிற்பவை. இத் துறைகள் சார்ந்த விவாதங்கள் மூலம் பிரச்சனையின் முழுமையைத் தேடி நாம் போக முடிவதில்லை. அரசியல், விவாதம் எப்போதும் அரைகுறையானது. அதிகாரத்தைக் கைப்பற்ற அவசியமான கண்டுபிடிப்புகளை மட்டுமே அது முன் வைக்கிறது. அதிகாரத்திற்கு இட்டுச் செல்லத் தடையாக நிற்கும் எதிர்நிலை கருத்துக்கள் எப்போதும் அரசியலில் மறைக்கப்படுகின்றன.

மேலும் வரலாற்றாய்வு, சமூகவியல் ஆய்வு எல்லாம் இன்று நிறுவனங்கள் சார்ந்தவை. நிறுவனங்கள் அரசாங்கத்தின் அங்கமாகச் செயல்படுகின்றன. அவர்கள் வாழ்வியல் சார்ந்த சிந்தனைகளை முழுமைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

படைப்பாளி அவன் உண்மையான படைப்பாளி என்றால் அதிகாரத்திற்கு வெளியே நிற்கிறான். நிறுவனத்திற்கு வெளியே நிற்கிறான். அறியாத உண்மைகளைத் தொகுத்து நம் பார்வையை விரிவுபடுத்த முன்னுகிறான். அவனிடம் மகத்தான நவீன கலைச் சாதனம் ஒன்று இருக்கிறது. அந்தக் கலைச் சாதனமான நாவலில் எதிரும் புதிருமான எண்ணற்ற குரல்களைஅவன் எழுப்பிக் கொண்டு போக முடியும். புறமனதைத் தாண்டி அக மனதிற்குள் அவன் நுழைய முடியும். சருமத்தைத் தாண்டி சாரத்திற்கு அவன் போக முடியும். கண்ணுக்குத் தெரியாமல் வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொண்டிருக்கும் அடிமனங்களின் ஆழங்களை அவன் தோண்ட முடியும். இதுதான் நவீன நாவலாசிரியனின் செயல். நாவல் பெரிய கலை உருவமாக தமிழில் நிறுவுவதற்கு ஏற்ற சூழலைத்தான் நாம் உருவாக்க முடியும். பெரிய நாவலை உருவாக்குவது பெரிய நாவலாசிரியனின் செயல்பாடு.

முதலில் நம் வாழ்வு சார்ந்து மறைக்கப்பட்ட உண்மைகளை நாம் பகிரங்கப்படுத்த முயல வேண்டும். இவ்வாறு பகிரங்கப்படுத்துவதன் மூலம் படைப்பாளி அவனுக்குரிய சுதந்திரத்தையும் அவன் முன் அடிவானம் வரையிலும் விரிந்து கிடக்கும் வெளியையும் உணரலாம். உலக மொழிகளில் தோன்றியுள்ள பெரிய நாவல்களின் குறிக்கோள்களை சூட்சுமமாக வகைப்படுத்தி அந்த வகைப்படுத்தலின் முன் நாம் படைத்துள்ள நாவல்களின் சோகை தட்டிய தன்மையை, சோனித் தன்மையை அனுபவ ரீதியாக ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு நாம் வரவேண்டும்.

சமூகத்தின் மீது நாவல் கொண்டுள்ள ஆட்சியை நாம் மிகைப்படுத்த வேண்டியதில்லை. குறைத்து மதிப்பிட வேண்டியதுமில்லை. புதிய சமூகத்தைப் புதிய நாவல்கள் மூலமே உருவாக்கிவிட முடியாது. இன்றைய சமூகத்தை அதன் மறைக்கப்பட்ட ஆழம் சார்ந்து புரிந்து கொள்ளாத வரையிலும் புதிய சமூகத்தை உருவாக்க முடியாது. இன்றைய சமூகத்தின் சூட்சுமங்களை உணர நாவல் மிகப் பெரிய கருவியாக செயல்பட முடியும்.

மனித சூட்சுமங்களை முன்னிறுத்தி நாவல் சமூகத்தைப் புரிந்து கொள்ள வழிவகை செய்கிறது. நம் அடிப்படைப் பிரச்சனைகளை நாவல்களுக்குள் பல்வேறு நோக்கில் கண்டு நாம் தெளிவடைய முடியும். நம் பிரச்சனைகளுக்கு மொழி உருவம் கிடைக்கும். பல்வேறுபட்ட பின்னணிகள் கொண்ட படைப்பாளிகள் உருவாக்கும் பெரிய நாவல்கள் மூலம் மொத்த வாழ்வின் பெரும் பகுதி துலக்கம் பெற வாய்ப்புண்டு. மொழி மிகப் பெரிய ஆற்றல் பெறும். மொழி பெறும் ஆற்றல்கள் மூலம் இன்று நாம் வெளிப்படுத்த திக்கித் திணறிக் கொண்டிருக்கும் எண்ணற்ற விஷயங்களைக் கூர்மையாக முன் வைத்துவிட முடியும். நம்மை நாம் அறிந்து கொள்ள விழையும் திசையை நோக்கித் தள்ளுகின்றன பெரிய நாவல்கள். பெரிய நாவலாசிரியர்களின் வருகைக்காக தமிழ் காத்துக் கொண்டிருக்கிறது.

நாகர்கோவில், சுந்தர ராமசாமி படைப்புகள் பற்றிய ஆய்வு கருத்தரங்குச் சிறப்புரை 31.5.199

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்