Feb 4, 2010

ஐந்திணை- விக்ரமாதித்யன் நம்பி

விக்ரமாதித்யன் நம்பி
nambi23
குறிஞ்சி

கண்ணில் தெரிவதெல்லாம்
மலை முகடுகள்
ஒரு
நறுஞ்சுனை
தொலை
தூரத்தில் சிற்றாறு
மரம் செடி கொடிகளில்
கனி சுமந்த கிளைகள்
உச்சியில்
கொம்புத் தேன் கூடுகள்
அதிசயமாய்
துலங்கும் அருவிகள்
மெளனமே
இருப்பான சித்தர்கள்
முன்னை
பழங்குடிகள்
வானம்
தொடும் மஞ்சுக்கூட்டம்
தண்ணீர் பட்டுத் தெறிக்கும்
தேக்குகள் மூங்கில்கள்
பக்கத்திலேயே
பாக்குமரங்களும்
ஏலக்கொடிகளில்
எச்சமாய் மணம்
சிந்திக் கிடக்கும்
மலை முந்திரி
படர்ந்து தழுவும்
மிளகுக் கொடிகள்
வேரில் பழுத்துக்
கிடக்கும் பலாக்கள்
தேன் கதலிகள்
வேட்டுவ வள்ளியின்
விழிப்பார்வைக்கும் எச்சில் முத்தத்துக்கும்
யாசித்து நிற்கும் வடிவேலன்
* * *


முல்லை

காதைக் குடையும்
சிள்வண்டுகள் சப்தம்
பார்க்கும் இடமெல்லாம்
பச்சை நிறக்காடு
இருள் நிறைத்திருக்கும்
தாவரங்கள்
உலாவும்
உயிர்பிராணிகள்
குழிபறித்து விளையாடும்
குறுமுயல்கள்
காற்று கொண்டுவரும்
செண்பக மணம்
கொடிவலைப் பின்னல்களில்
காட்டுக் குயில்கள்
ஆகாயம் மறைத்துக்
கிடக்கும் இலையடர்த்தி
பூமியே தெரியவிடாத
புதர்கள் புல்காடுகள்
கலகலப்பாய்த் திரியும்
காடை கெளதாரிகள் மலையணில்கள்
வழிமறிக்கப் பார்க்கும்
நரிக்கூட்டம்
அலைபாயும் மயில்கள்
மிரண்டோடும் மான்ஜாதி
ஆடுமாடுகளுக்கு
அற்றுப்போகாத இரை
ஆயர்கள் மனம் போல
அழகுபட்ட முல்லைக்காடுதான்
* * * * *


மருதம்

காடு திருத்துகிறார்கள்
கழனி யாக்கிறார்கள்
அருவி வந்து விழுந்து
ஆறாய்ப் பெருகிப் பெரும்
பேறாய் நயத்தக்க நாகரிகம்
விதைத்தது
முளைத்தது கண்டு
பசேலென்று
வயல் வைத்தார்கள்
வாழை நட்டார்கள்
கரும்பு போட்டார்கள்
கொடிக்கால் செய்தார்கள்
ஆணும் பெண்ணும்
நாளும் பாடுபட்டார்கள்
கோடையில் உழுந்து
பயறுச் செடிகள்
கூடவே வெள்ளரியும்
இஞ்சி மஞ்சள் கிழங்கென்று
வகைவகையாய்ச் செய்வித்தார்கள்
ஆதிமனிதனுக்கு அறிவு முளைத்தாற்போல
பாதி மனிதன் முழு மனிதனான்
தலை வாழை இலையிட்டு
சோறு கறி பரிமாறினாள் திலவி
பந்தியில் பாலும்
பலாச்சுளையும் இட்டார்கள்
நெய்போட்டார் மோர் விளம்பினார்
பால்பாயாசம் வைத்துப் பகிர்ந்துண்டார்
கூட்டென்றார் பொரியலென்றார்
பச்சடியில் பத்து தினுசு செய்தார்
சொதியில் தனி ருசி சேர்த்தார்
வேளாளன் கைவிருத்தி மனச்செழிப்பு
வீட்டுக்கூடம்தாண்டி வீதியெங்கும்
விருந்துகள் விழாக்கள் தோரணங்கள்
தானதருமங்கள் பூஜை புனஸ்காரங்கள்
ஆசாரங்கள் அன்றாட வாழ்விலும் அழகுகள்
பொன்னும் பொருளும் குவிந்துக் கிடக்க
போகமும் பூரிப்புமாகப் பொலிந்தது வாழ்வு
கல்லிலும் செம்பிலும் ஐம்பொன்னிலும்
கலைவண்ணமாய் சிலை வடித்தார்
கண்பார்த்ததைக் கைசெய்யும்
வித்தை தேர்ந்தார் கூத்தும் பாட்டும்
கொட்டி முழக்குகிறார் ஓய்வில்
சொல்கொண்டு எழுத்தாக்கினார்
பொருள்கொண்ட இலக்கியம் படைத்தார்
நதி கொண்டு வந்த பண்பாடு தேறி
காதலோடு கற்புக்கும் வகைசெய்தார்
இந்திரன் போய் சந்திரன் கங்கைதரித்த
சுந்தரன் வந்தான் முழுமுதற்கடவுளாக
சைவத்தால் தமிழ் வளர்த்தார்
தமிழால் சைவம் வளர்த்தார்
மன்னர்கள் பணிசெய்தனர் சொகுசுமறந்து
மானுடத்தின் உச்சம் காட்டும்
மருதமர நிழலோர நஞ்சைக்கூட்டம்
எழுதாக் கிளவி போல இருக்கும் சரிதம்
* * * * *


நெய்தல்

திரண்டு வரும் தண்ணீர்
எங்கே போகும்
தெறித்து விழுந்த
தண்ணீரோடு சேரும்
வந்துபோகும் அலைகளின்
வருத்தமென்ன வாட்டமென்ன
தொடுவானம் சொல்லும்
இரகசியமென்ன விஷயமென்ன
அடிவானத்துக்கப்பால்
இருக்கும் மர்மமென்ன மாயமென்ன
கடல் நடுவே பூமியா
பூமிக்கு மத்தியில் சமுத்ரமா
எப்படி வகைபடுத்த
கடல் என்னது
கடல்குதித்துச் சூடாற்ற
கண்ணதாசன் கவிதைவரி
நடுக்கடலில்
நாளும் நெய்தலின் மக்கள்
திரண்டிருக்கும்
தேக்கு உடம்பும் ஆதிமனசும்
எதன் கைவண்ணம்
கடல்மீன்கள் நண்டுகள்
முத்துகள்
தோன்றுவதெப்படி
பவளம் விளைவது
எந்த முகூர்த்தத்தில்
வலம்புரிச் சங்குகள்
வடிவுகொள்வது எங்ஙனம்
வருணதேவன்
வகுத்து வைத்ததா காலமழை
உப்பு நீரில்
ஒரு கொள்ளைத் திரவியம்
யார் செய்த
மாயம்
கடல்
ஒரு அதிசயம்
கடல்
கொண்டிருப்பது போதிசயம்
அது
வைத்திருப்பது நிறைய அற்புதம்
நெய்தல் நிலமே
நிரம்ப அற்புதம்தான்
* * * * *


பாலை

வேரோடும்
பிரண்டைக் கொடிகள்
சப்பாத்தி கள்ளிகள்
கானலெரிக்கும் வெயில்
கையவு நீர்
காணக்கிடைக்காத மண்
புழுதி
பறக்கிறது
பேய்கள்
இராஜ்யம் செய்கின்றன
என்ன
செய்வார்கள் ஜனங்கள்
எப்படி
வாழ்வார்கள் இந்த வெக்கையில்
காளி மாதாவின் கருணை
இப்படியா
* * * * *

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

4 கருத்துகள்:

சிவாஜி சங்கர் on February 5, 2010 at 3:48 PM said...

ஐந்திணையழகு...

Rettaival's Blog on February 7, 2010 at 2:35 AM said...

சத்தியமாக உங்களை தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்தட்டும் நண்பரே

Unknown on August 20, 2013 at 5:40 PM said...

miga arumai

Unknown on August 20, 2013 at 5:41 PM said...

sala chirantathu

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்